560 கிமீ சிக்காமல் வந்த 'கடல் தங்கம்'.. மதிப்பு மட்டுமே 10 கோடி.. கர்நாடகாவில் சிக்கியது எப்படி?
பெங்களூர்: கடல் தங்கம் என்று அழைக்கப்படும் திமிங்கல உமிழ்நீர் கேரளாவில் இருந்து கடத்தி கர்நாடகாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதுபற்றி ரகசிய தகவலால் கண்டுபிடித்த குடகு மாவட்டம் விராஜ்பேட்டை போலீசார், கார்களில் வந்தவர்களை அதிரடியாக பிடித்து கைது செய்தனர். பிடிப்பட்ட திமிங்கல உமிழ்நீர் கட்டியின் மதிப்பு 10 கோடி என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக 10 பேரை குடகு மாவட்ட போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
உலகம் முழுவதும் கடல் பகுதிகளில் வாழும் எண்ணெய்த் திமிங்கிலங்கள் வெளியிடும் உமிழ்நீருக்கு கோடிக்கணக்கில் மதிப்பு இருக்கிறது. அதனை கடல் தங்கம் என்று கடத்தல்காரர்கள் அழைக்கிறார்கள். இது அவ்வளவு எளிதாக கிடைத்துவிடாது. எண்ணெய்த் திமிங்கிலங்கள் அதன் செரிமான உறுப்பிலிருந்து வாய் வழியாக வெளியேற்றும் திடக்கழிவுப் பொருள் தான் திமிங்கல வாந்தி அல்லது திமிங்கல உமிர்நீர் அல்லது அம்பர்கிரிஸ் (Ambergris) என்று அழைக்கப்படுகிறது.

எப்படி கிடைக்கும்
இந்த திமிங்கல உமிர்நீர் வெள்ளை, சாம்பல் மற்றும் கருப்பு நிறங்கள் கலந்து இருக்கும். இந்த எண்ணைத் திமிங்கிலங்கள் கடலில் வாழும் பீலிக் கணவாய் போன்ற உயிரினங்களை வேட்டையாடி உண்பது வழக்கம். அந்த பீலிக் கணவாயின் ஓட்டை இத்திமிங்கலங்களின் செரிமான அமைப்பால் செரிக்கவைக்க முடியாது.
திமிங்கல உமிழ்நீர்
இதனால் அந்த ஓடுகள் திமிங்கிலத்தின் குடலில் சிக்கிக் கொள்ளும். இந்த ஓட்டினால் திமிங்கிலத்தின் உள் உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க இந்த ஓட்டை சுற்றிய செரிமான அமைப்பிலிருந்து ஒரு சிறப்பு வகை திரவம் உற்பத்தியாகும். இதுதான் திமிங்கல வாந்தி என்று அழைக்கிறார்கள்.
கடல் தங்கம்
திமிங்கல உமிழ் நீரை பயன்படுத்தி நறுமணப் பொருட்கள் மற்றும் பாலியியல் மருந்துகள் தயாரிக்கப்படுகிறது. தி இது எத்தனை பழையதோ, எத்தனை பெரியதோ அதற்கு ஏற்றார் போல் அதிக விலை தரப்படுகிறது. கோடிகளில் இதன் மதிப்பு இருந்து வருகிறது. இதன் காரணமாகவே இது கடல் தங்கம் என்று அழைக்கப்படுகிறது. இதை சட்டவிரோதமாக கடத்தி விற்பது ஆங்காங்கே நடக்கிறது.
கடத்தல்
அப்படித்தான் கேரளாவில் இருந்து திமிங்கல உமிழ்நீர் கடத்தி வரப்படுவதாக கர்நாடகாவின் குடகு மாவட்டம் விராஜ்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் விராஜ்பேட்டை டிஎஸ்பி அனூப், போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரமோத் மற்றும் போலீசார் விராஜ்பேட்டை அருகே ஹெக்கலா சந்திப்பு பகுதியில் வாகன சோதனை நடத்திக்கொண்டிருந்தார்கள். அப்போது அந்த வழியாக 2 கார்கள் வந்தன.
10 பேர் சிக்கினார்கள்
அந்த கார்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாரை பார்த்ததும் கார்களில் வந்தவர்கள், கீழே இறங்கி தப்பி ஓட முயன்றுள்ளனர். ஆனாலும் போலீசார் கார்களில் இருந்து இறங்கி தப்பி ஓட முயன்ற 10 பேரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். இதையடுத்து போலீசார் கார்களில் சோதனை நடத்தினர். அப்போது ஒரு காரில் திமிங்கல உமிழ்நீர் இருந்தது. இதையடுத்து பிடிபட்ட 10 பேரிடமும் விசாரணை நடத்தினர்.
10 பேர் யார் யார்
விசாரணையில் அவர்கள், கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த லத்தீஷ் (53), ரிஜேஷ் (40), பிரசாந்த் (52), ஜோபிஷ் (33), ஜே.ஜே.எம் (40), காசர்கோடுவைச் சேர்ந்த பாலசந்திர நாயக் (55), திருவனந்தபுரத்தை சேர்ந்த சம்சுதீன் (வயது 45), நவாஸ் (54), கோழிக்கோட்டைச் சேர்ந்த சஜூ தாமஸ் (58), சிவமொக்கா மாவட்டம் பத்ராவதியை சேர்ந்த ராகவேந்திரா (48) ஆகியோா் என்பது தெரியவந்தது. அவர்கள் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து திமிங்கல உமிழ்நீரை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 10 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
10 கோடி மதிப்பு
போலீசார் கைதானவர்களிடம் இருந்து ரூ.10 கோடி மதிப்பிலான 10 கிலோ 390 கிராம் திமிங்கல உமிழ்நீர் பறிமுதல் செய்தனர். அத்துடன் 2 கார்களும், பணம் எண்ணும் எந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து விராஜ்பேட்டை போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.













Click it and Unblock the Notifications