பெங்களூருவின் அடுத்த சுபாஷ்.. கல்யாணம் ஆன 6 மாதத்தில் ஐடி ஊழியர் நவீன் இருந்த கோலம்.. மனைவி கைது
பெங்களூர்: பெங்களூரு மாரத்தஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட யமலூருவில் வசித்து வந்த நவீன் குன்சூர் என்பவர் கம்ப்யூட்டர் என்ஜினியர் ஆவார். இவரது மனைவி பெயர் நிகிதா. இவர்களுக்கு திருமணம் ஆகி ஆறு மாதம் தான் ஆகிறது. குடும்ப பிரச்சினை காரணமாக நவீன், நிகிதா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் தனது உறவினருடன் சேர்ந்து கொண்டு மனைவி கொடுத்த தொல்லையை தாங்க முடியாமல் தவித்த நவீன் எடுத்த முடிவு, பெங்களூருவை அதிர வைத்துள்ளது.
பெங்களூருவில் மனைவி தொல்லையால் கணவர் உயிரை விடுவது அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ளது. கம்ப்யூட்டர் என்ஜினியர் அதுல் சுபாஷ் என்பவர் சில மாதம் முன்பு வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் அதே பாணியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு மாரத்தஹள்ளியில் உள்ள யமலூருவில் 29 வயதாகும் நவீன் குன்சூர் வசித்து வந்தார். இவரது மனைவி நிகிதாவுக்கு 28 வயது ஆகிறது. இந்த தம்பதிக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்திருந்தது. கம்ப்யூட்டர் என்ஜினியரான நவீன், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். திருமணமான சில நாட்கள் மட்டுமே தம்பதி சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
அதன்பிறகு, குடும்ப பிரச்சினை காரணமாக நவீன், நிகிதா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. குறிப்பாக தனது நெருங்கிய உறவினர் ராமசந்திராவுடன் சேர்ந்து கொண்டு, கணவர் நவீனுக்கு, நிகிதா மனதளவில் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி சமீபத்தில் தனது பெற்றோரிடம் நவீன் கூறி இருந்தார். இதையடுத்து, நிகிதாவை அழைத்து நவீனின் பெற்றோர் பேசி சமாதானம் செய்திருந்தனர்.
இந்த நிலையில், சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து தனது கழுத்தை அறுத்துக் கொண்டு நவீன் உயிரைவிட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி அக்கம்பக்கத்தினர் மாரத்தஹள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து நவீனின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது தனது மகன் சாவுக்கு, மருமகள் நிகிதா, ராமசந்திரா, அவரது மனைவி ரூபா ஆகிய 3 பேரும் மனதளவில் கொடுத்த தொல்லையே காரணம் என்று நவீனின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
மேலும் மனைவி கொடுத்த தொல்லை குறித்து நவீன் செல்போனில் பேசிய வீடியோ ஆதாரம் ஒன்றையும் போலீசாரிடம் தந்தார். அதன்பேரில் மாரத்தஹள்ளி போலீசார், நிகிதா, ராமசந்திரா, ரூபா ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நிகிதாவை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications