கர்நாடகாவில் இப்படி மட்டும் நடந்தா.. பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ்ஸுக்கு இருக்கும் சான்ஸ் என்னென்ன?
பெங்களூர் : கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் அனல் கிளப்பி வந்த நிலையில், பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகவிருக்கின்றன. மீண்டும் பாஜக ஆட்சியைப் பிடிக்குமா? காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றுமா? ஜேடிஎஸ் தான் ஆட்சியைத் தீர்மானிக்குமா? என்பதெல்லாம் கர்நாடகா வாக்காளர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த அரசியல் பார்வையாளர்களாலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.
இன்று வெளியாகும் தேர்தல் முடிவுகளில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்கள் கிடைக்கும்? தனிப் பெரும்பான்மையுடன் கூடிய வெற்றி கிடைக்குமா? ஒருவேளை தொங்கு சட்டசபை அமைந்தால் யார், யாருடன் கூட்டணி வைப்பார்கள்? ஜேடிஎஸ் எவ்வளவு சீட்களை பெற்றால் கிங் மேக்கர் ஆகக்கூடும் என்ற அலசல்கள் சமீப சில நாட்களாக நடந்து வருகின்றன.
கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 தொகுதிகளைப் பெறும் கட்சியே தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கருத்துக்கணிப்பு முடிவுகளைப் பொறுத்தவரை எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவதற்கான சாத்தியமில்லை என்றே தெரிகிறது. பெரும் ஊசலாட்டம் நிலவலாம், அல்லது காங்கிரஸ் அந்த மேஜிக் நம்பரை விளிம்பில் எட்டலாம் என்ற நிலை இருக்கிறது. கட்சிகள் எவ்வளவு இடங்களைப் பிடித்தால் என்னென்ன நடக்கும் என்பதற்கான வாய்ப்புகளை ஆராயலாம்.

காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்புகள் : ஒருசில கருத்துக்கணிப்புகளின்படி காங்கிரஸ் கட்சி 113 சீட்களுக்கு மேல் பெற்று தனிப்பெரும்பான்மை அமைந்தால், காங்கிரஸ் தனித்து ஆட்சியமைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
காங்கிரஸ் 100 சீட்கள் என்ற எண்ணிக்கையை தாண்டி, பாஜக 70+ அல்லது 80+ என்ற நிலையில் இருந்தால் ஜேடிஎஸ் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்படும். ஏற்கனவே சொன்னபடி நிபந்தனையுடன் குமாரசாமி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தருவார்.
ஒருவேளை காங்கிரஸ் கட்சி 90 சீட்களுக்கு கீழே சென்றால், அதற்கு குறைவான சீட்களை பெற்றிருந்தாலும் கூட பாஜக ஆட்சியமைக்கவே வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

பாஜக வாய்ப்புகள் : பாஜக 113 என்ற நம்பரை தொட்டுவிட்டால், பாஜக கெத்தாக மீண்டும் கர்நாடகாவில் ஆட்சியில் அமர்ந்துவிடும்.
பாஜக 100+ இடங்களைப் பிடித்து, காங்கிரஸ் அதைவிட குறைவான சீட்களைப் பிடிக்கும் பட்சத்தில், ஜேடிஎஸ் அல்லது இதர சுயேட்சைகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சியைப் பிடிக்கும்.
பாஜக 80+ சீட்களை மட்டுமே வென்று காங்கிரஸ் 100+ இடங்களை வென்றால் பாஜக ஆட்சி அமைய வாய்ப்பில்லை. ஜேடிஎஸ் எடுக்கும் முடிவே ஆட்சியைத் தீர்மானிக்கும்.
பாஜக 80க்கும் குறைவான சீட்களை வெல்லும் பட்சத்தில், ஜேடிஎஸ் பாஜகவை ஆதரிப்பது கடினம். அதைவிட அதிக சீட்கள் பெறும் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கவே ஜேடிஎஸ் ஆதரவு தரக்கூடும்.
மதச்சார்பற்ற ஜனதா தளம் - வாய்ப்புகள் : ஜேடிஎஸ் 50+ தொகுதிகளில் வெற்றி பெற்றால் குமாரசாமி தான் கிங் மேக்கர். காங்கிரஸோ பாஜகவோ ஜேடிஎஸ் தயவு இன்றி ஆட்சி அமைக்க முடியாது என்ற சூழல் ஏற்படும். காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளுமே தாங்கள் ஆட்சியமைக்க ஜேடிஎஸ் ஆதரவைக் கோரும்.
தொங்கு சட்டசபையில், முதல்வர் பதவி, இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி, அமைச்சரவையில் இடம் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் குமாரசாமி காங்கிரஸ் அல்லது பாஜகவுக்கு ஆதரவு அளிப்பார்.
ஜேடிஎஸ் 35+ சீட்கள் பெற்றாலும், எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால், அப்போதும் ஜேடிஎஸ் கை ஓங்கி இருக்கும்.
ஜேடிஎஸ் 25க்கும் குறைவான சீட்களை பெற்று, அப்போது காங்கிரஸுக்கோ, பாஜகவுக்கொ மெஜாரிட்டி பெற ஒன்றிரண்டு சீட்கள் தேவைப்பட்டால் ஜேடிஎஸ் எம்.எல்.ஏக்களை இழுக்கும் வேலைகளில் ஈடுபடக்கூடும்.
சுயேட்சைகள் : எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் சுயேட்சைகள், சிறிய கட்சிகளின் எம்.எல்.ஏக்களுக்கு மவுசு இருக்கும். ஒருசில் சீட்களே தங்கள் பெரும்பான்மைக்கு இன்னும் தேவை என்றால் ஜேடிஎஸ்ஸை விட சுயேட்சைகளை இழுப்பதிலேயே காங்கிரஸ் மற்றும் பாஜக ஆர்வம் காட்டும். 5 சீட்களுக்கு மேலே கூடுதலாக தேவை என்றால் ஜேடிஎஸ் பக்கம் செல்வதைத் தவிர வேறு வழியில்லை. என்ன நடக்கப்போகிறது என்பதை தொடர்ந்து பார்ப்போம்..












Click it and Unblock the Notifications