விராட் கோலிக்கு சொந்தமான பப் மீது வழக்குப்பதிவு.. பெங்களூர் போலீசார் திடீர் நடவடிக்கை.. என்ன காரணம்?
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் விராட் கோலிக்கு சொந்தமான பப் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே இந்த பப் மீது திடீரென வழக்குப்பதிவு செய்துள்ள பெங்களூர் போலீசார், விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த விவகாரத்தில் விசாரணைக்குப் பிறகு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். பெங்களூர் போலீசார் எதற்காக இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை இப்போது தான் வெஸ்ட் இண்டீஸில் நடந்து முடிந்தது. இதில் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

கடந்த 2007ம் ஆண்டிற்குப் பிறகு இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வெல்வது இதுவே முதல்முறையாகும். அதேபோல 2013க்கு பிறகு இந்திய அணி ஐசிசி டிராபியை வெல்வதும் இதுவே முதல்முறை.
உலகக் கோப்பை: உலகக் கோப்பையை வென்ற இந்தியா அணிக்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்தனர். மேலும், உலகக் கோப்பையுடன் தாயகம் திரும்பிய இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. குறிப்பாக மும்பையில் இந்திய அணியைப் பாராட்டும் வகையில் மிகப் பெரிய பேரணியும் நடத்தப்பட்டது. இது ஒரு பக்கம் இருக்க இப்போது திடீரென விராட் கோலிக்கு சொந்தமான பப் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக நாம் பார்க்கலாம்.
விராட் கோலிக்கு சொந்தமான ஒன்8 கம்யூன் பப் டெல்லி, மும்பை உட்பட பல்வேறு நகரங்களில் இருக்கிறது. பெங்களூரில் எம்ஜி சாலையில் இந்த பப் இயங்கி வருகிறது. இதன் மீது தான் இப்போது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோலிக்கு சொந்தமான பப் மட்டுமின்றி எம்ஜி சாலையில் இயங்கும் பல்வேறு பப்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
என்ன காரணம்: அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி செயல்பட்டதற்காக எஃப்ஐஆர் போடப்பட்டுள்ளதாகப் பெங்களூர் போலீசார் தெரிவித்துள்ளனர். பெங்களூரில் பப்கள் நள்ளிரவு 1 மணி வரை செயல்பட போலீசார் அனுமதித்துள்ளனர். இருப்பினும், இந்த அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி நள்ளிரவு 1.30 மணி வரை இந்த பப்கள் செயல்பட்டன என்பதே புகாராகும்.
புகார்கள்: இரவு நேரங்களில் அதிக சத்தத்துடன் இந்த பப்களில் பாடல்கள் போடப்படுவதால் தங்களால் நிம்மதியாகத் தூங்கக் கூட முடிவதில்லை என அப்பகுதி மக்கள் புகாரளித்த நிலையில், போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியம் அருகே உள்ள ஒன்8 கம்யூன் பப், விதிகளை மீறி அதிக நேரம் செயல்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், "இரவில் அதிக சத்தத்தில் பாடல்கள் போடப்படுவதாகவும் இது தொந்தரவாக இருப்பதாகப் பலரும் புகாரளித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளோம். விசாரணை நடக்கும் நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
விராட் கோலி: விராட் கோலியின் One8 கம்யூன் டெல்லி, மும்பை, புனே மற்றும் கொல்கத்தா போன்ற மெட்ரோ நகரங்களில் இயங்கி வருகிறது. இது கடந்த டிசம்பர் மாதம் பெங்களூரில் தொடங்கப்பட்டது. இது எம்ஜி சாலையில் உள்ள ரத்னம் காம்பிளக்ஸில் ஆறாவது மாடியில் செயல்பட்டு வருகிறது. இதன் மீதே இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது












Click it and Unblock the Notifications