சென்னை டூ மங்களூரு.. வசமாக சிக்கிய 'கோலமாவு கோகிலா'.. யார் அந்த தமிழக முக்கிய புள்ளி?
பெங்களூர்: இன்றைக்கு சமூகத்தில் இளைஞர்களிடையே தவறான பழக்க வழக்கங்கள் அதிகரித்துள்ளது. முன்பு மதுப்பழக்கம் மட்டுமே இருந்தது. இன்று மதுப்பழகத்தை தாண்டி, கஞ்சா, அபின், மாத்திரைகள் என புதிய வகையில் போதைப்பொருட்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. சென்னையில் இருந்து ரூ.35 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை கல்லூரி மாணவி ஒருவர் கர்நாடகாவிற்கு கடத்தி உள்ளார். அவரை மங்களூரு அருகே கர்நாடகா போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா,அபின், போதை மாத்திரைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப்பொருட்கள் கடத்தினால் அல்லது கடத்தி வந்ததை விற்றால், போலீசாரால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக எல்லா மாநிலங்களிலும் போலீசார் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கிறார்கள். அப்படித்தான் கர்நாடகாவில் போலீசார் ரெய்டு நடத்தி வருகிறார்கள்.

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு முல்கி ரயில் நிலைய சாலை பகுதியில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக அந்த மாவட்ட தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து முல்கி போலீசார் கடந்த 12ம் தேதி அன்று அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டார்கள்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த ஒரு இளம்பெண்ணை போலீசார் பிடித்து விசாரித்தார்கள். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால், அவரது உடைமைகளை போலீசார் சோதனை செய்தார்கள். அதில், அவரிடம் ரூ.35 லட்சம் மதிப்பிலான 1 கிலோ 42 கிராம் எடை கொண்ட உயர்தர 'ஹைட்ரோபோனிக் கஞ்சா' இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கஞ்சா மற்றும் இளம்பெண்ணின் செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அந்த பெண்ணை கைது செய்தனர்.
விசாரணையில், அவர் சிவமொக்கா மாவட்டம் ஹூலிதேவரா பானா பகுதியை சேர்ந்த 21 வயதாகும் சுஹானா என்பதும், குந்தாப்புராவில் உள்ள ஒரு கல்லூரியில் பி.சி.ஏ. இறுதியாண்டு படித்து வரும் மாணவி என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட சுஹானா, இந்த போதைப்பொருளை சென்னையில் இருந்து வாங்கி வந்ததாக முதற்கட்ட விசாரணையில் ஒப்புக்கொண்டார். மங்களூரு நகரில் உள்ள வசதி படைத்தவர்களுக்கும், இளைஞர்களுக்கும் அதிக விலைக்கு விற்று லாபம் சம்பாதிக்க அவர் திட்டமிட்டிருந்தாராம்.
கைது செய்யப்பட்ட மாணவி சுஹானா ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும், கவூர் போலீஸ் நிலையத்தில் ஒரு போதைப்பொருள் வழக்கும், பெங்களூரு சர்வதேச விமான நிலைய சுங்கத்துறையினரால் ஒரு கடத்தல் வழக்கும் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது தனிப்படை போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து மங்களூரு போலீசார் போதைப்பொருள் தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, இந்த கடத்தல் கும்பலில் சென்னையில் உள்ள முக்கிய புள்ளிகள் யார்? மங்களூருவில் யாருக்கெல்லாம் இவருடன் தொடர்பு இருக்கிறது? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.














Click it and Unblock the Notifications