ரூ 100 கோடி நிலம் அபகரிப்பு, நடிகை சவுந்தர்யா மரணத்தில் மர்மம் ! என்ன செய்ய போகிறார் மோகன் பாபு?
பெங்களூர்: நடிகை சவுந்தர்யாவின் (சௌந்தர்யா) மரணம் விபத்தல்ல என்று கூறி நடிகர் மோகன் பாபு மீது ஆந்திரா நபர் புகார் அளித்துள்ள நிலையில் நடிகையின் கணவர் ரகு இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அதே வேளையில் மோகன் பாபு என்ன செய்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
1990ஆம் ஆண்டு காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் சவுந்தர்யா. இவர் ஏராளமான படங்களில் நடித்திருந்த நிலையில் 2003ஆம் ஆண்டு சாப்ட்வேர் என்ஜீனியரான ஜி.எஸ்.ரகு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இதைத் தொடர்ந்து சவுந்தர்யாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அவர் அரசியலில் கவனம் செலுத்த முடிவு செய்தார். அதன் பேரில் அவர் பாஜகவில் இணைந்தார். அப்போது நாடாளுமன்றத் தேர்தல் வந்ததை அடுத்து கரீம்நகர் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்யவிருந்தார்.
ஹெலிகாப்டர் பயணம்
தனது அண்ணன் அமர்நாத்துடன் கரீம்நகருக்கு ஹெிகாப்டரில் சென்றார். அப்போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி சவுந்தர்யாவும் அமர்நாத்தும் உயிரிழந்தனர். இதில் சவுந்தர்யாவின் உடல் கூட கிடைக்கவில்லை. இந்த விபத்தில் அவர் இறக்கும் போது அவருக்கு வயது 31, அவர் கர்ப்பமாக இருந்தார்.
ஒரே ஆண்டில் இறந்த சவுந்தர்யா
திருமணமான ஒரே ஆண்டில் சவுந்தர்யா இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. நடிப்பில் சாவித்திரி அளவுக்கு இவரை ரசிகர்கள் பார்த்தனர். குறுகிய காலத்தில் நிறைய படங்களில் நடித்திருந்ததால் நிறைய சம்பாதித்தார்.
ஜல்பள்ளியில் ரூ 100 கோடி நிலம்
அவர் ஆந்திரா மாநிலம் ஜல்பள்ளியில் 6 ஏக்கர் நிலத்தை வாங்கியிருந்தாராம். இதன் மதிப்பு தற்போது ரூ 100 கோடியாகும். இந்த நிலத்திற்கு உரிமை கோரி சவுந்தர்யாவின் கணவர், அவரது தாய், சகோதரன் அமர்நாத்தின் மனைவி உள்ளிட்டோர் சட்ட போராட்டம் நடத்தி வந்தனர்.
மோகன் பாபு அபகரிப்பா
இந்த நிலையில் அந்த இடத்தை மோகன்பாபு அபகரித்துக் கொண்டதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து ஆந்திரா மாநிலம் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த சிட்டிமல்லு என்பவர் தனது புகாரில் கூறியிருப்பதாவது: நடிகை சவுந்தர்யாவின் மரணம் விபத்தால் நடந்தது இல்லை, அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். சவுந்தர்யாவுக்கு ஜல்பள்ளி கிராமத்தில் 6 ஏக்கர் நிலம் இருக்கிறது. அந்த நிலத்தை வாங்க மோகன் பாபு முயற்சித்திருக்கிறார்.
சௌந்தர்யா அண்ணன் மறுப்பு
ஆனால் அந்த நிலத்தை விற்பனை செய்ய சவுந்தர்யாவின் சகோதரர் அமர்நாத் மறுத்திருக்கிறார். இந்த நிலையில் சவுந்தர்யாவின் மரணத்திற்கு பிறகும் அந்த நிலத்தை விற்பனை செய்யுமாறு அமர்நாத்திற்கு அழுத்தம் கொடுத்த மோகன் பாபு அந்த நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருக்கிறார்.
மகனுடன் மோகன் பாபுவுக்கு தகராறு
எனவே இந்த நிலத்தை மீட்டு ஆதரவற்றோர், ராணுவத்தினர், போலீஸார் ஆகியோரின் நலனுக்கு வழங்க வேண்டும் என தனது புகாரில் சிட்டிமல்லு குறிப்பிட்டிருக்கிறார். இந்த 6 ஏக்கர் நிலத்திற்காக மோகன்பாபுவுக்கும் மகன் மஞ்சு மனோஜுக்கும் இடையே பெரிய தகராறு ஏற்பட்டதையும் புகாரில் அவர் நினைவு கூர்ந்திருக்கிறார்.
சவுந்தர்யா பிரச்சினை
மோகன் பாபுவுக்கு ஏற்கெனவே மகனுடன் பிரச்சினை, செய்தியாளரை தாக்கியதாக வழக்கு என அடுத்தடுத்து பிரச்சினைகள் ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது சவுந்தர்யா பிரச்சினை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
25 ஆண்டுகள் நட்பு
இதுகுறித்து சவுந்தர்யாவின் கணவர் ரகு மறுத்துள்ளார். தனது மனைவி மரணத்திற்கும் மோகன்பாபுவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவருடன் 25 ஆண்டுகளாக நட்புறவில் இருக்கிறோம் என்றும் தேவையற்ற வதந்திகளை பரப்பாதீர்கள் என்றும் ரகு கேட்டுக் கொண்டுள்ளார்.
மோகன் பாபு என்ன செய்வார்
இந்த நிலையில் இதுகுறித்து மோகன் பாபு எந்த விளக்கத்தையும் அளிக்காத நிலையில் அவர் என்ன செய்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது. சமூக ஆர்வலர் சிட்டிமல்லு மீது அவதூறு வழக்கு தொடுப்பாரா, இல்லை சிட்டிமல்லுவின் புகாரின் பேரில் போலீஸார் விசாரணைக்கு அழைத்தால் அதற்கு செல்வாரா? இல்லை செய்தியாளர்களை அழைத்து சவுந்தர்யா விவகாரம் குறித்து விளக்கம் அளிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
விளக்கம் அளிக்க வாய்ப்பா?
அனேகமாக அவர் தனது சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கலாம். அவர்களின் அறிவுரையின் படி இந்த சம்பவத்தில் விளக்கம் அளிப்பாரா என தெரியவில்லை. அமைதியாக இருந்தால் இது போன்ற சர்ச்சைக்குரிய புகார்களுக்கு நல்லதல்ல! எனவே அவர் விளக்கம் அளிக்கக் கூடும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications