சித்தராமையா என்ன சொன்னாலும் கேட்பேன்.. முதல்வர் பதவி கேட்ட டிகே சிவக்குமார் மனமாற்றம் - பின்னணி
பெங்களூர்: ‛‛என்னை மேலிடம் காத்திருக்க வேண்டும் என்று கூறினால் அதற்காக காத்திருப்பேன். நாங்கள் இருவரும் கட்சியின் மேலிட உத்தரவை பின்பற்றுவோம். முதல்வர் என்ன சொன்னாலும் நான் அதனை பின்பற்றுவேன்'' என்று கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார் கூறியுள்ளார். முதல்வர் பதவி மீது கண்வைத்து சித்தராமையாவுடன் மல்லுக்கட்டிய அவர் திடீர் மனமாற்றத்தின் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுத்து வருகிறது. சமீபத்திய பீகார் தேர்தலிலும் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது. காங்கிரஸ் கட்சி தற்போது ஆட்சியில் இருக்கும் பெரிய மாநிலம் என்றால் கர்நாடகா தான்.

கர்நாடகாவில் கடந்த 2023 சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையை காங்கிரஸ் பெற்று ஆட்சியை கைப்பற்றியது. முதல்வராக சித்தராமையா இருந்து வருகிறார். துணை முதல்வராகவும், காங்கிரஸ் மாநில தலைவராகவும் டிகே சிவக்குமார் உள்ளார். சித்தராமையா இரண்டரை ஆண்டு காலம் முதல்வராக கடந்துவிட்டார்.
இதனால் அடுத்த இரண்டரை ஆண்டுகள் டிகே சிவக்குமாரை முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இது கர்நாடகாவில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. அதோடு காங்கிரஸ் மேலிடத்துக்கும் தலைவலியை உருவாக்கியது. ஏனென்றால் இருவரும் செல்வாக்கான தலைவர்கள்.இதனால் சித்தராமையாவை நீக்கிவிட்டு டிகே சிவக்குமாருக்கு முதல்வர் பதவினாலும், டிகே சிவக்குமாருக்கு முதல்வர் பதவி வழங்காமல் சித்தராமையாவை தொடர செய்தாலும் அது காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அளவில் பின்னடைவை ஏற்படுத்தும்.
இதனால் காங்கிரஸ் மேலிடம் இடியாப்ப சிக்கலில் சிக்கியது. இதற்கிடையே தான் காங்கிரஸ் மேலிடம் இருவரையும் பேசி சமாதானம் ஆகும்படி உத்தரவிட்டது. அதன்படி இன்று காலையில் சித்தராமையா, டிகே சிவக்குமாரை தனது இல்லத்துக்கு அழைத்து காலை உணவு வழங்கினார். இது பாசிட்டிவாக மாறியது. இருவருக்கும் இருப்பதாக கூறப்பட்ட கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்தது.
இந்த விருந்துக்கு பிறகு டிகே சிவக்குமாரும், சித்தராமையாவும் ஒன்றாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது டிகே சிவக்குமார் கூறியதாவது: மக்கள் எங்களின் மீது நம்பிக்கை வைத்து பெரும்பான்மையுடன் கூடிய வெற்றியை தந்துள்ளனர். கர்நாடகா மக்களுக்கு நாங்கள் பணியாற்ற வேண்டும். சட்டசபை தேர்தல் வெற்றிக்கு பிறகு சித்தராமையா தலைமையில் அரசு அமைக்கப்பட்டது. மக்கள் காங்கிரஸ் கட்சி மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.
நாங்கள் இருவரும் எங்களின் தலைமைத்துவம் மீது நம்பிக்கை வைத்துள்ளோம். என்னை மேலிடம் காத்திருக்க வேண்டும் என்று கூறினால் அதற்காக காத்திருப்பேன். நாங்கள் இருவரும் கட்சியின் மேலிட உத்தரவை பின்பற்றுவோம். முதல்வர் என்ன சொன்னாலும் நான் அதனை பின்பற்றுவேன். இந்த விஷயத்தில் வெளிநபரை அனுமதிக்க மட்டோம். விரைவில் சித்தராமையா எனது வீட்டுக்கு லஞ்ச் அல்லது டின்னர் விருந்துக்கு வருவார். அப்போது 2028 சட்டசபை தேர்தல் வியூகம் பற்றி விவாதிக்க உள்ளோம். நாங்கள் எப்போதும் கட்சிக்கு கட்டுப்பட்ட போர்வீரர்கள். கட்சி தேசிய அளவில் பின்னடைவை சந்தித்துள்ளதை நாங்கள் அறிவோம். இதனால் கர்நாடகாவில் கட்சியை பலமாக வைத்திருப்போம்'' என்றார்.
இதன்மூலம் முதல்வர் பதவிக்காக காங்கிரஸ் மேலிடம் என்னை காத்திருக்க சொன்னால் அதற்கு தயாராக இருக்கிறேன் என்பதை டிகே சிவக்குமார் வெளிப்படுத்தி உள்ளார். இது காங்கிரஸ் மேலிடத்துக்கு நிம்மதியை அளித்துள்ளது. அதோடு சித்தராமையாவின் ஆதரவாளர்களுக்கும் நிம்மதியை கொடுத்துள்ளது. டிகே சிவக்குமார் முதல்வர் பதவி மீது உறுதியாக இருந்த நிலையில் அவரது திடீர் மனமாற்றத்துக்கு முக்கிய காரணம் உள்ளது.
அதாவது காங்கிரஸ் மேலிடம் சார்பில் டிகே சிவக்குமாரிடம் கொஞ்சம் பொறுத்து கொள்ளுங்கள். கர்நாடகாவின் அடுத்த முதல்வர் நீங்கள் தான். இதற்கு உறுதியளிக்கிறோம். இப்போது சித்தராமையாவுடன் சண்டையிட வேண்டாம். சித்தராமையாவிற்கு வயதாகிவிட்டது. இனி அவர் முதல்வராக மாட்டார். இதனால் கர்நாடகாவின் அடுத்த முதல்வர் நீங்கள் தான்.
நாடு முழுவதும் கட்சி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இப்படியான சூழலில் கர்நாடகாவிலும் பிரச்சனை வந்தால் அது கட்சிக்கு கூடுதல் கெட்டப்பெயரை கொடுக்கும். இதனால் சமாதானமாக செல்லும்படி தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தான் டிகே சிவக்குமார் அமைதியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications