"வெயில் ஒவரா இருக்கே.. என்ன சன் ஸ்கிரீன் யூஸ் பண்ணறீங்க!" வந்து விழுந்த கேள்வி! ராகுல் பளீச் பதில்
பெங்களூர்: காங்கிரஸின் ராகுல் காந்தி கர்நாடகாவில் காங்கிரஸ் தொண்டர்களிடம் கலந்துரையாடினார்; அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்தும் அவர் மனம் விட்டுப் பேசினார்.
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் வகையில் ராகுல் காந்தி மாபெரும் பாத யாத்திரையை மேற்கொண்டு உள்ளார். பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்றிணைப்பதே இந்த பாத யாத்திரையின் நோக்கம் என்று கூறி உள்ளனர்.
அவர் மொத்தம் 150 நாட்கள் பாத யாத்திரை செல்கிறார். கடந்த மாதம் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பேரணி, கேரளாவிலும் சில நாட்களுக்கு முன் நிறைவடைந்தது.

ராகுல் காந்தி
ஒவ்வொரு நாளும் சுமார் 20 கிமீ வரை நடைப்பயணம் செல்லும் வகையில் இந்த பாத யாத்திரை திட்டமிடப்பட்டு உள்ளது. இப்போது அவர் கர்நாடகாவில் பாத யாத்திரை சென்று வருகிறார். காங்கிரஸ் வலுவாக இருக்கும் மாநிலங்களில் கர்நாடகாவும் ஒன்று என்பதாலும் சில மாதங்களில் அங்குத் தேர்தல் நடைபெற உள்ளதாகவும் பல்வேறு இடங்களில் பாத யாத்திரை சென்று ராகுல் காந்தி பொதுமக்களைச் சந்தித்து வருகிறார்.

உரையாடல்
இதனிடையே நேற்று மாலை அவர் கர்நாடகா காங்கிரஸ் தொண்டர்கள் உடன் உரையாடினார். அது தொடர்பான வீடியோவை காங்கிரஸ் தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளது. அந்த வீடியோவில் ராகுல் காந்தி முதலில் தொண்டர்களிடம் நலம் விசாரிக்கிறார். அதன் பின்னர் அனைவரும் தொடர்ந்து என்னுடன் நடைப்பயணம் வரத் தயாரா என்று கேட்கிறார். அதற்குத் தொண்டர்கள் நிச்சயம் வரை தயாராக உள்ளோம் என்று பதில் அளிக்கிறார்கள்.

கொப்புளங்கள்
அப்போது தொண்டர், "நீங்கள் நீண்ட நேரம் நடக்கும்போது சில சிக்கல்கள் ஏற்படும். கால்களில் கொப்புளங்கள் ஏற்படுமே" என்று கேட்கிறார். அதற்கு ராகுல், "இங்கு எல்லோருக்கும் கொப்புளங்கள் வந்துள்ளதா" என்று கேட்கிறார். அனைவரும் ஆமாம் என்று சொல்லும் போது, அங்கிருந்த பெண் ஒருவர் மட்டும் தனக்குக் கொப்புளங்கள் எதுவும் வரவில்லை என்கிறார். ராகுல் தனக்கும் கொப்புளம் வரவில்லை என்கிறார்.

ஃபிட்னஸ்
மொத்தம் 3570 கிமீ திட்டமிடப்பட்டு உள்ள இந்த பாத யாத்திரையில், ராகுல் காந்தி இப்போது 1000 கிமீ நடந்து உள்ளார். இந்த பாத யாத்திரையில் அவரது ஃபிட்னஸ் குறித்தே பலரும் பேசி வருகின்றனர். அதேபோல அவ்வப்போது இதுபோல தொண்டர்களிடமும் தொடர்ந்து உரையாடி வருகிறார். நேற்று நடந்த இந்த உரையாடலில் அவர் தொண்டர்களிடம் தங்கள் அனுபவம் குறித்தும் கேட்டறிந்தார்.

வெப்பம்
அப்போது ஒருவர், தினசரி 15 கிமீ நடந்தாலும் சோர்வடைவதில்லை இதனால் அதிக தூரம் கூட நடக்காலம் என்று கூறுகிறார். அதற்கு ராகுல் காந்தி, "தராளாமாக நடக்காலம். ஆனால், மதிய நேரத்தில் வரும் அதிக வெப்பம் நடப்பது உடலுக்கு நல்லதல்ல. இதைக் கருத்தில் கொண்டே ஒரு நாளைக்கு அதிகபட்சம் 20 கிமீ நடக்கலாம் என்று திட்டமிட்டு உள்ளோம்" என்று கூறினார். அப்போது ஓய்வு நேரத்தில் என்ன செய்வீர்கள் என்று ஒருவர் கேட்கிறார்.

சன்ஸ்கிரீன்
அதற்கு ராகுல், "மாலை 7.30க்கு பாத யாத்திரை முடிந்த உடன் கொஞ்சம் உடற்பயிற்சி செய்வேன். பிறகு அம்மாவுக்குக் கால் செய்து நலம் விசாரிப்பேன். பின் சகோதரி மற்றும் நண்பர்களை அழைத்து சிறிது நேரம் பேசுவேன்" என்று பதில் அளிக்கிறார். அப்போது தொண்டர் ஒருவர், "நீங்கள் எந்த சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துகிறீர்கள்?" என்று கேட்கிறார்.

பளீச் பதில்
அதற்கு ராகுல் சட்டென்று எதுவும் யோசிக்காமல், "இல்லை.. நான் சன்ஸ்கிரீன் எதுவும் பயன்படுத்துவதில்லை. சில சன்ஸ்கிரீன்களை அம்மா அனுப்பினார். ஆனால், நான் எதையும் பயன்படுத்தவில்லை" என்று பளீச் எனப் பதில் அளிக்கிறார். மேலும் யாத்திரை குறித்துப் பேசிய அவர், "நாம் இப்போது எதிர்க்கட்சியாக இருக்கிறோம். இப்போது நமக்கு மக்களை நேரடியாகக் களத்தில் இறங்கிச் சந்திப்பதைத் தவிர வேறு ஆப்ஷன் இல்லை" என்கிறார்.












Click it and Unblock the Notifications