எடியூரப்பா நிழல்... கேரளாவுடன் இடைவிடாத மல்லுக்கட்டு.. மத்திய அமைச்சரான கர்நாடகாவின் ஷோபா!
பெங்களூர்: சபரிமலை கோயிலுக்கு பெண்களை அனுமதிக்கும் கேரள அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தவர் கர்நாடகா மாநில எம்பி சோபா கரந்த்லஜே தற்போது மத்திய அமைச்சராகியுள்ளார்.
Recommended Video
54 வயதாகும் இவர் தனது முரண்பட்ட கருத்துகளால் ஆளும் கட்சியின் சர்ச்சைக்குரிய தலைவர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தக்ஷின கன்னடாவில் புத்தூரை சேர்ந்தவர்.
பாஜகவின் எடியூரப்பாவின் நிழல் என அழைக்கப்படுபவர். ஆதரவாளர்களால் சோபா அக்கா என அன்போடு அழைக்கப்படுபவர்.

சர்ச்சை ட்வீட்டுகள்
கர்நாடகாவின் முதல்வராக ஜெகதீஷ் ஷெட்டர் இருந்த போது அவரது அமைச்சரவையில் இருந்த ஒரே பெண் அமைச்சர் சோபா ஆவார். இவரை டிவிட்டர் பக்கத்தில் 2.7 லட்சம் பேர் பின்பற்றி வருகிறார்கள். இந்த நிலையில் போடும் பெரும்பாலான ட்வீட்கள் சர்ச்சையில்தான் முடியும்.

கேரளாவில் வழக்கு
கடந்த 2020 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஆதரவு அளித்த மலப்புரத்தில் உள்ள பல இந்து குடும்பங்களுக்கு கேரள அரசு தண்ணீர் தர மறுத்துள்ளதாக மதவெறியை தூண்டும் விதமாக ட்வீட் போட்டதை வைத்து இவர் மீது கேரளா போலீஸ் வழக்குப் பதிவு செய்தது.

கேரளா பயங்கரவாதிகள்
மங்களூருவில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா எதிர்ப்பாளர்கள் நடத்திய வன்முறையில் கேரள மக்களும் ஈடுபடுவதால் அதை தடுக்க கேரளா எல்லைகளில் கர்நாடகா போலீஸார் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். கேரளா பயங்கரவாதிகளை உருவாக்கும் பூமி என சர்ச்சையை கிளப்பினார்.

சபரிமலை விவகாரம்
இதையடுத்து சபரிமலை கோயிலுக்கு பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற கேரள மாநில அரசின் அனுமதியை சோபா கடுமையாக எதிர்த்தார். தான் ஏன் கேரளா விவகாரங்களை கையில் எடுக்கிறேன் என்பது குறித்தும் அவர் ஒரு ட்வீட் போட்டிருந்தார். அதில் கேரளா விவகாரங்களை ஏன் பேசுகிறீர்கள் என நிறைய பேர் என்னை கேட்கிறார்கள். கேரளாவில் இந்து எதிர்ப்பாளர்களை எதிர்த்து போராடும் எனது இந்து சகோதரர்களை நான் எப்படி புறந்தள்ளிவிட முடியும்? என கேள்வி எழுப்பினார்.

அய்யப்பன் ஆசீர்வாதம்
கடந்த 2020 ஆம் ஆண்டு கேரளாவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 18 வார்டுகளில் வென்றதை அடுத்து பாஜகவை அய்யப்பன் ஆசிர்வதித்துள்ளார். அதனால்தான் இந்த வெற்றி என சோபா ட்வீட் போட்டிருந்தார். இப்படியாக தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளையே முன் வைத்த சோபாவுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications