பாஜகவிற்கு சிம்ம சொப்பனம்.. கர்நாடக மக்களின் மாஸ் லீடர்.. யார் இந்த சித்தராமையா? டாப் பாயிண்ட்ஸ்!
பெங்களூரு: கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் நெருங்கி இருக்கும் நிலையில், காங்கிரஸ் முதலமைச்சர் வேட்பாளராக மீண்டும் நிறுத்தப்படுவார் என்று பலரால் எதிர்பார்க்கப்படும் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா யார்? அவரது அரசியல் பயணம் என்ன? முதலமைச்சராகவும் காங்கிரஸ் மூத்த தலைவராகவும் அவர் ஆற்றிய பணிகள் என்ன? என்பதை பார்ப்போம்.
கர்நாடக மாநிலத்தில் மே மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மும்முனைப் போட்டி நிலவி வரும் கர்நாடகாவில் ஆம் ஆத்மியும் 224 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்து இருக்கிறது.

காங்கிரஸ் முதலமைச்சர் வேட்பாளர்: இதுவரை வெளியாகி இருக்கும் தேர்தல் கருத்துக்கணிப்புக்களின் முடிவில், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களை பிடித்து வெற்றிபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே நேரம் காங்கிரஸ் கட்சியில் யார் முதலமைச்சர் வேட்பாளர் என்ற குழப்பம் நீடித்து வருகிறது.
முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா? அல்லது அம்மாநில மூத்த காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமாருக்கு கிடைக்குமா? என்ற கேள்விக்கான பதில் இன்னும் கிடைக்கவில்லை. ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களில் காங்கிரஸின் செயல்பாடுகளை வைத்து பார்க்கையில் சீனியரான சித்தராமையாவுக்கே வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யார் இந்த சித்தராமையா?: இந்த நிலையில் சித்தராமையாவின் அதிரடி அரசியல் வாழ்க்கை குறித்து சற்று அலசுவோம். திப்பு சுல்தான் அரசின் தலைநகரமான மைசூரை சேர்ந்த சித்தராமையா குருபா சமூகத்தை சேர்ந்தவர். மைசூரு பல்கலைக்கழகத்தில் BSc படிப்பை முடித்துவிட்டு சட்டம் படித்த இவர், வழக்கறிஞராக பயிற்சி பெற்றவர்.

கட்சி தாவல்கள்: கடந்த 1978 ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்த சித்தராமையா, மைசூர் தாலுக்காவுக்கு தேர்வு செய்யப்பட்டார். கடந்த 1983 ஆம் ஆண்டு லோக் தளம் கட்சி சார்பில் கர்நாடக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட சித்தராமையாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. மைசூர் மாவட்டம் சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட்ட சித்தராமையா அதில் வெற்றிபெற்றார். அதை தொடர்ந்து கடந்த 1985 ஆம் ஆண்டு ஜனதா கட்சியில் இணைந்த சித்தராமையா, 1985 ஆம் ஆண்டு சாமுண்டீஸ்வரி தொகுதியை தக்க வைத்தார்.
1994 ஆம் ஆண்டு ஜனதா தளம் கட்சியின் வேட்பாளராகவும், 2004 ஆம் ஆண்டு மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் வேட்பாளராகவும் போட்டியிட்டு சட்டமன்றத்துக்கு தீர்வு செய்யப்பட்டார். கடந்த 2005 ஆம் ஆண்டு மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார் சித்தராமையா. அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைதான் கர்நாடக அரசியலில் அவரை உச்சபட்ச அதிகாரத்துக்கே கொண்டு சென்றது.

டுவிஸ்டால் வளர்ச்சி: ஆம், ஜேடிஎஸ் இல் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பிறகு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் சித்தராமையா. 2007 ஆம் ஆண்டு மீண்டும் சாமுண்டீஸ்வரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அவர், கர்நாடக மாநிலத்தின் துணை முதலமைச்சராக 2 முறை பதவி வகித்தார். 2013 ஆம் ஆண்டு கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றவுடன் அம்மாநில முதலமைச்சராக சித்தராமையா நிறுத்தப்பட்டார்.
அப்போது அவர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளால் தேசிய அளவில் பேசப்பட்டார். அதே நேரம் கர்நாடகா - தமிழ்நாடு இடையிலான காவிரி விவகாரத்தில் இவர் மிகவும் பிடிவாதம் காட்டி வந்தார். 2018 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் இவர் தோற்றாலும், பதாமி தொகுதியில் வென்று சட்டமன்றத்துக்கு சென்றார்.












Click it and Unblock the Notifications