கர்நாடகாவின் முதல்வர் யார்? பாஜகவுக்கு அசராத டி.கே.சிவக்குமாரா? செல்வாக்கு பெற்ற சித்தராமையாவா?
பெங்களூர்: கர்நாடகா முதல்வராக சித்தராமையா வர வேண்டும் என்று அவருடைய மகன் கருத்துக்கு டி.கே. சிவக்குமார் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
கர்நாடகா சட்டசபைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் நடந்து வருகிறது. 224 தொகுதிகளில பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி 130 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
இந்த நிலையில் கிட்டதட்ட கர்நாடகாவில் காங்கிரஸ் தனிபெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க போகிறது என்பது நன்றாகவே தெரிகிறது. இந்த நிலையில் கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் மகன் யதீந்திரா கூறுகையில் என் தந்தையைத்தான் முதல்வராக்க வேண்டும் என்கிறார்.

இதற்கு டி.கே. சிவக்குமாரின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறுகையில் டி.கே.சிவக்குமாரால்தான் காங்கிரஸ் வளர்ச்சி அடைந்துள்ளது. சித்தராமையாவுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றவர் டி.கே. சிவக்குமார்தான். எனவே அவருக்குத்தான் முதல்வர் பதவி கொடுத்தாக வேண்டும் என இப்போதே கோஷ்டி பூசல் காங்கிரஸில் எழத் தொடங்கிவிட்டது.
கர்நாடகாவில் காங்கிரஸ் அபார வெற்றி பெறும் நிலையில் நாளை முதல்வர் யார் என்பது தொடர்பாக ஆலோசனை நடத்த வெற்றி பெறும் எம்எல்ஏக்களை அழைத்துள்ளார்கள். இந்த நிலையில் டி.கே. சிவக்குமார் மீது சில ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனால் சித்தராமையா மீது அது போல் எதுவும் இல்லை.
அவ்வாறிருக்கும் போது எப்படி சித்தராமையாவைவிட்டு விட்டு டி.கே. சிவக்குமாரை முதல்வராக்க கோரிக்கை விடுக்கிறீர்கள் என காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் சிலரிடம் கேட்ட போது அவர்கள் கூறுகையில், சிவக்குமார் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது. ஆனால் அவற்றில் ஏதாவது நிரூபிக்கப்பட்டுள்ளதா? அவர் சிறை தண்டனை பெற்றுள்ளாரா.
கர்நாடகாவில் ஒக்கலிக்கா, லிங்காயத்து சமூகத்தினரே கர்நாடகாவில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். சிவக்குமார் போட்டியிட்ட கனகபுரா தொகுதியில் அவர் சுமார் 70 சதவீத வாக்குகளை வென்றுள்ளார். அவருக்கு ஒக்கலிகா வாக்குகள் அதிகம் கிடைத்துள்ளன. அவரை நம்பியே ஒக்கலிகா மக்கள் வாகக்களித்துள்ளனர்.
மேலும் கடந்த முறை 2018 இல் ஜேடிஎஸ் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிழ்ந்த போது மும்பையில் பாஜகவினரால் ரகசியமாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வைக்கப்பட்டிருந்த மும்பை விடுதி முன்பு சிவக்குமார் கடும் போராட்டம் நடத்தினார். அப்போது அவர் மீது தாக்குதல்களை பாஜக நடத்தினர். இவற்றை எல்லாம் தாங்கி கொண்டு ஆட்சியை நிலைநாட்ட சிவக்குமார் கடுமையாக போராடினார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு டி.கே.சிவக்குமார் மீது மத்திய அரசு ஊழல் குற்றச்சாட்டை முன் வைத்து அவருடைய குடும்பத்தினருடன் டெல்லி சிபிஐ முன்பு ஆஜராக வைத்தது. ஆனால் எதற்கு சிவக்குமார் அசரவில்லை. அதனால் அவர்தான் முதல்வராக வேண்டும், பழைய மைசூர் பகுதியில் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு பிறகு தற்போது காங்கிரஸ் அதிக இடங்களில் வென்றுள்ளது என்றால் அதற்கு காரணமே சிவக்குமார்தான் என தெரிவித்தனர். இதுகுறித்து சித்தராமையா ஆதரவாளர்களிடம் கேட்ட போது டி.கே. சிவகுமாருக்கு ஒக்கலிகா பெல்ட் தாண்டி சித்தராமையா மாதிரி பரந்து விரிந்த செல்வாக்கு இல்லை. சித்தராமையாவை நம்பிதான் முஸ்லீம், பட்டியலினத்தவர்கள், குருபர் ஓட்டுகள் வந்துள்ளன. எனவே யதீந்திரா கேட்டதில் எந்த தவறும் இல்லை என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications