காற்றே இல்லாத இடத்தில் களமிறங்கனும்.. சந்திரயான்-2 சாஃப்ட் லேண்டிங் ஏன் சவாலானது தெரியுமா?
பெங்களூர்: சந்திரயான் -2 மேற்கொள்ள உள்ள சாஃப்ட் லேண்டிங், மிகவும் சிரமமான ஒரு விஷயம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
இதை திக் திக்கான 15 நிமிடங்கள் என்று இஸ்ரோ தலைவர் சிவன் விளக்குகிறார். இப்படி ஒரு பரபரப்புக்கு என்ன காரணம்?

இதற்கு முக்கியமான காரணம், நிலவில் வளிமண்டலம் கிடையாது. இதனால் லேண்டரை மெதுவாக தரையிறக்க கஷ்டமாக இருக்கும். பொதுவாக பாராசூட்டை பயன்படுத்தி தரையிறக்கலாம். ஆனால் காற்று கிடையாது என்பதால், இந்த டெக்னிக் பலன் அளிக்காது.
எனவே, லேண்டர் அதனுடைய சொந்த ராக்கெட் இன்ஜின்களை பயன்படுத்தி அதன் வேகத்தை சீராக குறைப்பதுதான் ஒரே வழியாகும். நிலவின் மேற்பரப்பை நெருங்க நெருங்க, லேண்டர், கிடைமட்டமாக நகரத் தொடங்கும்.
நிலவில் லேண்டர் தரையிறங்கும் அதே நேரத்தில், ராக்கெட் இன்ஜின்கள் நகர்வை நிறுத்தி, அதன், இறக்கத்தின் வேகத்தையும் கட்டுப்படுத்த வேண்டும்.
இதைத்தான் "சாஃப்ட் லேண்டிங்" என்று அழைக்கிறார்கள்.
லேண்டர் தரையிறங்கிய பின் நிலவில் தூசிகள் எழலாம் என்பதால், அந்த தூசிகள் மறையும் வரை காத்திருந்து பிறகு, ரோவர் மெதுவாக ஊர்ந்து வெளியே செல்லும். ரோவருக்கு பிரக்ஞான் என்று பெயரிடப்பட்டுள்ளது. அநேகமாக, அது நாளை அதிகாலை 5.30 மணிக்கு பிறகு பயணிக்க ஆரம்பிக்கும்.
சந்திரயான் 1 விண்கலம் நிலவை ஆய்வு செய்தபோது சாஃப்ட் லேண்டிங் பிரச்சினை கிடையாது. சந்திரயான்-2 நிலவை இன்னும் அதிகமாக ஆய்வு செய்ய தேவையுள்ளதால், சாஃப்ட் லேண்டிங் அவசியமானது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications