தொழிலாளர்களுக்கு ஊதியம் தராத நிறுவனங்கள், ஆக்ஷன் எடுக்க தயாரான மணிவண்ணன்.. தூக்கியடித்த கர்நாடக அரசு
பெங்களூர்: ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்காத நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடிவுசெய்த கர்நாடக தொழிலாளர் நலத்துறை முதன்மைச் செயலாளரான மூத்த ஐஏஎஸ் அதிகாரி மணிவண்ணன் திடீரென எந்த ஒரு பதவியும் தரப்படாமல் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடக பாஜக அரசு எடுத்த இந்த நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்கள் தங்கள் குமுறலை இணையதளங்கள் வாயிலாக கொட்டி வருகின்றனர்.
கர்நாடக மாநில, தொழிலாளர் துறை முதன்மை செயலாளர் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் என இரு பொறுப்புகளை வகித்து வந்தவர் மணிவண்ணன். மூத்த ஐஏஎஸ் அதிகாரியான இவர், சமூக வலைத்தளங்களை திறம்பட கையாள்பவர்.
இவரது பூர்விகம் தமிழகம். 1998-ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக பணிக்கு சேர்ந்து கர்நாடகாவில் பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார். மாவட்ட கலெக்டராகவும் சிறப்பாக பணியாற்றி மக்களிடம் நற்பெயர் பெற்றவர்.

சிறப்பான டெலிகிராம் குரூப்
கொரானா வைரஸ் பாதிப்பு காலகட்டத்தில் மக்களிடையே நிலவும் சந்தேகத்தை தீர்ப்பதற்காக, இவர் டெலிகிராம் குரூப் ஒன்றை ஆரம்பித்தார். அதில் இப்போது 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள், பொதுமக்கள் இணைந்து பயன்பெற்று வருகிறார்கள். கர்நாடக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள், இ பாஸ் பெறுவது, ஒவ்வொரு ஏரியாவிலும் உள்ள கண்டைன்மெண்ட் பகுதிகள், எந்த கடைகளில் என்ன கிடைக்கும் என்பது போன்ற பல்வேறு விஷயங்கள் இந்த டெலிகிராம் குரூப்பில் ஆலோசிக்கப்பட்டு அதற்கு விடை தரப்படுகிறது.

கேப்டன் மணிவண்ணன்
கேப்டன் மணிவண்ணன் என்று அழைக்கப்படக் கூடிய இவரின் மக்கள் செல்வாக்கு காரணமாக பல்வேறு இளைஞர்களும் தன்னார்வலர்களாக அந்த குரூப்பில் இணைந்தனர். அவர்கள் மக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகின்றனர். மேலும், களத்தில் இறங்கி தன்னார்வலர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

ஊதியம்
இந்த நிலையில்தான், கடந்த ஏப்ரல் மாதம் கர்நாடக மாநிலத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்களும், தங்கள் ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஊரடங்கு உத்தரவை காரணம் காட்டி இவ்வாறு ஊதியம் தராமல் இருப்பது தவறான செயல் என்று மத்திய மாநில அரசுகள் கூறியிருப்பதால் மணிவண்ணன் இந்த விஷயத்தில் தீவிர நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தார்.

எடியூரப்பாவிடம் முதலாளிகள் புகார்
சமூக வலைதளம் மூலமாக புகார்களை பெற்றார். 24 மணிநேரத்தில் 700க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாகவும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும் என்றும் மணிவண்ணன் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு வெளியான நிலையில் தொழிலதிபர்கள் மற்றும் தொழிற்சாலை முதலாளிகள், முதல்வர் எடியூரப்பாவை தொடர்புகொண்டு, இதுகுறித்து புகார் கூறியதாக கூறப்படுகிறது. தொழில் நிறுவனங்களின் நெருக்குதலுக்கு பணிந்த எடியூரப்பா, எந்த ஒரு பணியும் ஒதுக்கபடாமல் மணிவண்ணனை நேற்று இரவோடு பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

மக்கள் கோரிக்கை
இதனால் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள் பெரிதும் அப்செட் அடைந்துள்ளனர். பலரும் தங்கள் பணியை நிறுத்தி விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் #BringBackManivannan என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. உடனடியாக இவரது பணியிட மாற்ற உத்தரவை எடியூரப்பா, வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. நிறுவன முதலாளிகள் கேட்டுக் கொண்டதற்காக, வட மாநிலத் தொழிலாளர்களை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு ரயில் சேவையை எடியூரப்பா ரத்து செய்தார். எதிர்ப்பு கிளம்பியதும் பிறகு ரயில் சேவையை ஆரம்பிக்க அனுமதி அளித்தார், என்பது இந்த நேரத்தில் குறிப்பிடத்தக்கது ஆகும்.












Click it and Unblock the Notifications