சித்தராமையாவுக்கு பதிலாக டிகே சிவக்குமார்? கர்நாடகாவில் முதல்வர் மாற்றம்? பரபரக்கும் காங்கிரஸ்!
பெங்களூர்: கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு நடந்து வரும் நிலையில், சொந்தக் கட்சிக்குள்ளேயே விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் காங்கிரஸ் ஆட்சிக்கே சிக்கல் என்ற பேச்சுகளும் எழுந்துள்ளன. இதற்கிடையே கர்நாடகாவில் உள்ள அரசியல் சூழல் குறித்து இப்போது சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவில் உள்ள சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு இப்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களே சொந்த அரசு மீது சில காட்டமான விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். இது காங்கிரஸ் அரசுக்குச் சங்கடத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இப்போது நிலைமையைச் சமாளிக்கும் முயற்சியில் காங்கிரஸ் இறங்கியுள்ளது.

ஒன்றாகப் பங்கேற்றனர்
மேலும், தலைமையில் மாற்றம் வரலாம் என்றும் சித்தராமையாவுக்கு பதிலாக டிகே சிவக்குமாருக்கு முதல்வர் பதவி கொடுக்கப்படலாம் என்றெல்லாம் சொல்லப்பட்டு வந்தது. இதற்கிடையே இன்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும், துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரும் தங்கள் ஒற்றுமையாகவே இருப்பதைக் காட்டும் வகையில் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
ஒன்றாகப் பங்கேற்பு
2023 சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் பதவிக்கு சித்தராமையாவுக்கும், சிவக்குமாருக்கும் இடையே தான் கடும் போட்டி இருந்தது.. அதன் பிறகு சித்தராமையாவுக்கு முதல்வர் பதவியும் டிகே சிவக்குமாருக்கு துணை முதல்வர் பதவியும் வழங்கப்பட்டது. இரு தலைவர்களும் அதன் பிறகு அமைதியானாலும் கூட இருவரின் ஆதரவாளர்களும் ஒருவரை ஒருவர் விமர்சித்து வந்தனர். இந்தச் சூழலில் தான் மைசூரில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் சித்தராமையாவும், சிவக்குமாரும் ஒன்றாகப் பங்கேற்றனர். முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமாரின் கையைப் பிடித்து உயர்த்திக் காட்டினார்
முதல்வர் சித்தராமையா கூறுகையில், "எங்கள் அரசு ஐந்து வருடங்கள் நிலைத்து நிற்கும்... உறுதியாக இருப்போம். நாங்கள் ஒன்றாக வருவோம்" என்றார். அப்போது டிகே சிவக்குமாரும் அதை ஆமோதிப்பது போலத் தலையசைத்தார்.
5 ஆண்டுகள் சித்தராமையா தான் முதல்வர்
மூத்த காங்கிரஸ் தலைவரான ஆர்.வி. தேஷ்பாண்டே இதேபோன்ற கருத்தைத் தெரிவித்தார். ஐந்து ஆண்டுகள் முழுமையாக சித்தராமையா தான் கர்நாடகாவின் முதலமைச்சராக இருப்பார் என்று தேஷ்பாண்டே தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "சித்தராமையா இந்த ஆட்சி முழுக்க முதலமைச்சராகத் தொடருவார். முதல்வர் பதவியை மாற்றுவது குறித்து திட்டமும் இல்லை.. நாங்கள் ஒற்றுமையாகவே இருக்கிறோம்" என்றார்.
முதலமைச்சரின் மகனும், சட்டமன்ற உறுப்பினருமான யதீந்திர சித்தராமையாவும் தனது தந்தைக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்தார். ஐந்து ஆண்டுகள் முழுமையாக சித்தராமையா முதல்வராக இருப்பார் என்று யதீந்திர கூறியுள்ளார்.
களமிறங்கிய டெல்லி தலைவர்
கர்நாடகாவில் ஊழல், அவரது நிர்வாகம் முடங்கிவிட்டது என்று அக்கட்சி எம்எல்ஏக்களே விமர்சித்திருந்தனர். இதையடுத்து நிலைமையைச் சமாளிக்க டெல்லி தலைமை பொதுச் செயலாளர் ரந்தீப் சுர்ஜேவாலாவை பெங்களூருக்கு அனுப்பிய பிறகு. இன்று பிற்பகல் பெங்களூர் வரும் ரந்தீப் சுர்ஜேவாலா இரு நாட்கள் இங்கேயே இருக்கிறார். அவர் சில முக்கிய தலைவர்களைத் தனிப்பட்ட முறையில் சந்தித்தும் ஆலோசிக்கவுள்ளார்.
அதேநேரம் சுர்ஜேவாலா பயணம் ஏன் எனக் கேட்டபோது கர்நாடக முதல்வர் சித்தராமையா வேறு விதமாகவே பதிலளித்தார். அதாவது காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தவே சுர்ஜேவாலா கர்நாடகா வந்துள்ளதாகப் பட்டும் படாமல் பதிலளித்தார். மேலும், காங்கிரஸ் அரசைப் பலவீனப்படுத்த பாஜக முயல்வதாகவும் ஆனாலும் அது நடக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
விமர்சனங்கள்
கர்நாடகாவில் வீட்டுவசதித் துறையில் ஊழல் தலைவிரித்து ஆடுவதாகக் காங்கிரஸின் பி.ஆர்.பாட்டில் சாடியிருந்தார். கர்நாடக அரசு நிர்வாகம் சீர்குலைந்து விட்டதாகக் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜு கேஜ் கூறியிருந்தார். எம்எல்ஏ இக்பால் உசேன் இன்னும் ஒரு படி மேலே போய்.. கர்நாடகாவில் அடுத்த இரு மாதங்களில் சித்தராமையாவுக்கு பதிலாக டிகே சிவக்குமார் முதல்வராக்கப்படுவார் என்றும் கூறியது பகீர் கிளப்புவதாக இருந்தது.












Click it and Unblock the Notifications