லீவு கிடைக்கல.. கனடாவில் உள்ள இளைஞருடன்.. ஆன்லைனில் நடந்த நிச்சயதார்த்தம்!
பெங்களூர்: காலம் வேகமாக மாறி வரும் சூழலில், ஆன்லைனில் எல்லா வேலைகளும் நடந்து வருகின்றன. ஆனால், அதற்காக நிச்சயதார்த்தத்தை கூட ஆன்லைனில் நடத்தினால் எப்படி? ஆம், வேறு வழியின்றி நடந்திருக்கிறது. இந்த சம்பவம் சோஷியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
பெங்களூர் தெற்கு சக்ரபாவி கிராமத்தை சேர்ந்தவர் சுகாஷ். இவர் கனடாவில் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் உடுப்பியை சேர்ந்த இளம்பெண் மேக்னாவுக்கும் திருமணம் செய்வது என்று பெற்றோர்கள் பேசி முடிவெடுத்திருக்கின்றனர்.

ஆனால், இங்குதான் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. உடல்நலம் சரியில்லை என்று லீவு கேட்டால் கூட, வேண்டா வெறுப்பாக, வாட்ஸ்அப்பில் கனெக்டிங்கில் இருங்கள் என்று கூறி விடுப்பு வழங்கும் இந்த கார்ப்பரேட் உலகில், நிச்சயதார்த்தம் என்று மாப்பிள்ளை சுகாஷ் லீவு கேட்க.. வாய்ப்பில்லை ராஜா என்று சொல்லி நிறுவனம் விடுமுறையை மறுத்திருக்கிறது. ஒரு பக்கம் பெற்றோர்கள் பேசி தேதியை குறித்துவிட்டார்கள். மறுபுறம் மணமகள் மேக்னா, போன்மேல் போன் போட்டு ஊருக்கு வருவீர்களா? என்று விசாரித்துக்கொண்டே இருக்கிறார்.
ஆனால், தற்போது வரை லீவு கிடைக்கவே இல்லை. யோசித்து பார்த்த சுகாஷுக்கு சட்டென ஓர் ஐடியா தோன்றியது. ஆன்லைனில் நிச்சயதார்த்தம் செய்தால் என்ன? என்பதுதான் அந்த யோசனை.
விஷயத்தை பெற்றோர்களிடம் சொல்ல, அவர்கள் அப்படியே நிராகரித்துள்ளனர். இருப்பினும் என்ன செய்வது? லீவு கிடைக்கவில்லை. நல்ல சம்பந்தத்தையும் விட முடியாது. எனவே, ஆன்லைனில் முடித்துக்கொள்ளலாம் என்று ஓகே சொல்லிவிட்டார்கள். இதனையடுத்து உடுப்பியில் உள்ள மண்டபத்தில் நிச்சயதார்த்தத்திற்கான ஏற்பாடுகள் நடந்தன. மண்டபத்தில் பெரிய பெரிய எல்இடி டிவிகள் வைக்கப்பட்டன. மேடையில் மணமகள் மேக்னா மற்றும் அவரது உறவினர்களும், மாப்பிள்ளை சுகாஷின் பெற்றோரும் இருந்திருக்கின்றனர்.
மந்திரங்கள் முழங்க நிச்சயதார்த்தம் தொடங்கியது. மாப்பிள்ளை கனடாவிலிருந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார். இந்த நிகழ்வுக்கு வந்திருந்த உறவினர்களுக்கு இது வித்தியாசமான அனுபவமாக இருந்திருக்கிறது.
இந்திய நேரத்திற்கும், கனடாவின் நேரத்திற்கும் 9-13 மணி நேரம் வித்தியாசம் இருக்கும். உடுப்பியில் மதியம் 12 மணிக்கு நிகழ்ச்சி நடந்த நிலையில், கனடாவில் மாப்பிள்ளை சுகாஷ் நள்ளிரவு 12 மணிக்கு நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார்.
உணவு தொடங்கி எல்லாம் ஆன்லைனில் டெலிவரி என்று வந்துவிட்ட நிலையில், தற்போது நிச்சயதார்த்தம் கூட ஆன்லைனில் நடந்திருப்பது நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடம் பேசுபொருளாகியுள்ளது.












Click it and Unblock the Notifications