திடீரென வெடித்து சிதறிய ஹேர் டிரையர்.. கையை இழந்த ராணுவ வீரரின் மனைவி.. என்ன நடந்தது? மக்களே கவனம்
பெங்களூர்: கர்நாடகாவில் ஆன்லைனில் ஆர்டர் செய்த ஹேர் டிரையரை வாங்கி பரிசோதிக்க முயன்றபோது திடீரென்று வெடித்து சிதறியது. இதில் ராணுவ வீரரின் மனைவி கை துண்டாகி உள்ளது.
கர்நாடகாவில் உள்ள பாகல்கோட்டை மாவட்டம் இலகல் கிராமத்தை சேர்ந்த பாபன்னா யார்னால். இவரது மனைவி பெயர் பசவராஜேஸ்வரி யார்னால். பாபன்னா யார்னால் ராணுவ வீரராக பணியாற்றினார். இவர் ஜம்மு காஷ்மீரில் பணியாற்றியபோது மின்சாரம் தாக்கி 2017 ம் ஆண்டில் வீர மரணம் அடைந்தார். தற்போது கணவர் இன்றி பசவராஜேஸ்வரி வசித்து வருகிறார்.

இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் சசிகலா. இவர் ஆன்லைனில் ஹேர் டிரையர் ஆர்டர் செய்ததாக கூறப்படுகிறது.. இதையடுத்து அந்த ஹேர் டிரையர் டிடிடிசி கொரியர் மூலம் நவம்பர் 15ம் தேதி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பார்சலை கொண்டு வந்தவர் சசிகலாவுக்கு போன் செய்து பேசினார்.
அப்போது சசிகலா,‛‛நான் வீட்டில் இல்லை. வெளியூர் வந்து விட்டேன். ஹேர் டிரையரை பக்கத்து வீட்டில் உள்ள பசவராஜேஸ்வரியிடம் வழங்கிவிட்டு செல்லுங்கள்'' என்று கூறினார். மேலும் சசிகலா, பசவராஜேஸ்வரிக்கு போன் செய்து ஹேர் டிரையரை வாங்கி வைக்கும்படி கூறினார். இதையடுத்து பசவராஜேஸ்வரி ஹேர்டிரையரை வாங்கி தனது வீட்டில் பரிசோதிக்க முயன்றார்.
ஹேர் டிரையரை அவர் ஆன் செய்து பரிசோதிக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக ஹேர் டிரையர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.இந்த சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தில் வசிக்கும் மக்கள் ஓடிவந்து பார்த்தனர். அப்போது பசவராஜேஸ்வரி படுகாயம் அடைந்து இருந்தார். அவரது கை மற்றும் விரல்களில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. அவர் வலியால் அலறி துடித்தார். இதையடுத்து அவர்கள் பசவராஜேஸ்வரியை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவரது ஒரு கை செயலிழந்தது. இதனால் கை துண்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஹேர் டிரையர் வெடித்ததில் அவரது இரு கைகளில் உள்ள விரல்களும் துண்டிக்கப்பட்டன. தற்போது தொடர்ந்து பசவராஜேஸ்வரிக்கு சிகிச்சை என்பது அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி பாகல்கோட்டை எஸ்பி அமர்நாத் ரெட்டி கூறுகையில், ‛‛சம்பவம் தொடர்பாக இலகல் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹேர்டிரையர் வெடித்து பெண் படுகாயமடைந்த இடத்தை மின்சாரத்துறை அதிகாரிகள், போலீசார் ஆய்வு செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக ஹேர் டிரையர் வெடித்து இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. வெடித்த ஹேர்டிரையரின் நிறுவனம் விசாகப்பட்டினத்தை மையப்படுத்தி செயல்பட்டு வருகிறது. சசிகலாவிடம் விசாரித்து உள்ளோம். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications