வரதட்சணை, சந்தேகம்... கணவன் டார்ச்சரால் மகனோடு 7வது மாடியில் இருந்து குதித்த மனைவி
வரதட்சணை கொடுமை, சந்தேக விசாரணை என டார்ச்சர் செய்த கணவனின் கொடுமை தாங்காமல் இளம் பெண் ஒருவர் 2 வயது மகனோடு 7வது மாடியில் இருந்து குதித்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
Recommended Video
பெங்களூரு: ஜனனம் ஒரு பூ மலர்வது போலவும், மரணம் ஒரு பூ உதிர்வது போலவும் இருக்க வேண்டும். சிலரது மரணம் விபத்தில் முடிகிறது. சிலரோ தாங்களாகவே கொடூரமான மரணத்தை தேர்வு செய்கின்றனர். பெங்களூருவைச் சேர்ந்த இளம் பெண்ணும் அப்படித்தான், கணவனின் டார்ச்சர் தாங்காமல் அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது மாடியில் இருந்து குடித்து உடல் சிதைந்து செத்துப்போய் விட்டார்.
கொடூரமான முறையில் மரணமடைந்த அந்த பெண்ணின் பெயர் பாவனா என்பதாகும். 29 வயதான அந்த பெண் ஆர்டி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கணவர், மாமனார் மாமியார் இரண்டு நாத்தனார்களுடன் வசித்து வந்தார்.
சிஏ படித்த அந்த பெண் குழந்தை பிறந்த காரணத்தினால் தேர்வுகளை பின்னர் எழுதிக்கொள்ளலாம் என்று நினைத்திருந்தார். 2 வயது மகனை நன்றாக படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டும் என்ற கனவு பாவனாவிற்கு இருந்தது.
பாவனாவின் கனவு எதுவுமே நிறைவேறாமல் போய்விட்டது. காரணம் கணவனின் சுடு சொற்கள் சாட்டையடியாக தினம் தினம் கொடுமைப்படுத்தியதுதான். பாவனாவின் கணவன் அரிகந்த்திற்கு மனைவி மீது சந்தேகம் இருந்தது. அவனது பெற்றோர்களே பணத்தாசை பிடித்தவர்கள்.
வரதட்சணை கொடுமை ஒருபக்கம், கணவனின் சந்தேக சொற்கள் மறுபக்கம் என பாவனாவை டார்ச்சர் செய்தன. பொறுத்து பொறுத்து பார்த்தார். இவன் கூட வாழ்ந்து தினம் தினம் சாவதை விட, ஒரேடியாக செத்துப்போவது மேல் என்று நினைத்தார். அதற்காக அவர் தேர்வு செய்த வழியோ கொடூரமானது. அபார்ட்மெண்டின் ஏழாவது மாடியில் இருந்து மகனோடு குதித்தார். இதில் சம்பவ இடத்திலேயே இரண்டு வயது குழந்தை உடல் சிதறி பலியானது.
பலத்த காயமடைந்த பாவனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார், இரண்டு நாட்கள் மரணவேதனை அனுபவித்த அவர் இன்று தனது உயிரை விட்டார். மகளின் மரணத்தினால் நொறுங்கிப்போன பாவனாவின் பெற்றோர், அரிகந்த் குடும்பத்தினர் மீது புகார் அளித்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து அரிகந்த் குடும்பத்தினரிடம் விசாரித்து வருகின்றனர்.
பாவனா தானாக மாடியில் இருந்து குதித்தாரா அல்லது மாடியில் இருந்து தள்ளி விடப்பட்டாரா என்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.