பாரத் ஜோடா யாத்திரைக்கு பிறகு.. புதிய அவதாரத்தில் ராகுலை பார்ப்பீர்கள்.. திக்விஜய் சிங் பரபர!
பெங்களூர்: காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கர்நாடகத்தில் நடைபயணம் மேற்கொண்டு வரும் நிலையில், 'நடைபயணத்துக்கு பிறகு ராகுல் காந்தியை புதிய அவதாரத்தில் பார்ப்பீர்கள்' என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி தொடர் தோல்விகளால் கடும் பின்னடவை சந்தித்துள்ள நிலையில், அக்கட்சிக்கு புது தெம்பூட்டும் வகையில் ராகுல் காந்தி பாரத் ஜோடா யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ராகுல் காந்தி இந்திய ஒற்றுமைப்பயணம் என்ற பெயரில் நடைபயணமாக செல்கிறார். முதலில் தமிழகத்திலும் அடுத்ததாக கேரளாவிலும் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டார்.
மாஸ்க்குடன் உற்சாகமாக ஓடிவந்த பெண்! மாஸாக உதவிய ராகுல் காந்தி! பாரத் ஜோடோ யாத்திரை என்னாச்சி?
கர்நாடகாவில் நடைபயணம்
தற்போது ராகுல் காந்தியின் நடைபயணம் கர்நாடக மாநிலத்தில் சென்று கொண்டிருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மீண்டும் ஆட்சியை பிடிக்க தற்போதே காங்கிரஸ் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு உள்ளது. இந்த சூழலில் ராகுலின் பாத யாத்திரை காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் வலு சேர்க்கும் என்று அக்கட்சி நம்புகிறது.
புதிய அவதாரத்தில் பார்ப்பீர்கள்
இதனால் ராகுல் காந்தியின் கர்நாடக பாத யாத்திரை அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனிடையே, பாத யாத்திரைக்காக ராகுல் காந்தியுடன் கர்நாடகாவில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங்கும் முகாமிட்டுள்ளார். அப்போது அவர், பாரத் ஜோடா யாத்திரைக்கு பிறகு ராகுல் காந்தியை புதிய அவதாரத்தில் பார்ப்பீர்கள் என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி வலுவடையும்
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:- பாத யாத்திரயால் கீழ் மட்ட அளவில் கட்சி செயல்பட வழி வகுக்கப்பட்டுள்ளது. எனவே ராகுலின் இந்த பாத யத்திரையால் கட்சி வலுப்படும். இப்போது ஊடகங்களும் எங்கள் பக்கம் கவனத்தை திருப்பியிருக்கின்றன. இத்தனை ஆண்டுகளில் கிராமங்களில் ஊரக பகுதிகளிலும் கூட காங்கிரஸ் கட்சி பற்றி விவாதிக்கப்படுகிறது. ராகுல் காந்தி நடைபயணத்தை மக்கள் ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள்.
வெயிலிலும், மழையிலும் நடக்கிறார்
ராகுல் காந்தி வெயில், மழை என எதையும் பொருட்படுத்தாது நடைபயணம் செல்கிறார். போலி செய்திகளை எதிர்த்து போராடுகிறார். இந்திய ஒற்றுமையின் அடையாளமாக திகழும் ராகுல் காந்தியை பாத யாத்திரைக்குப் பிறகு புது அவாதாரத்தில் பார்ப்பீர்கள். நமது நாட்டில், தியாகம் செய்பவர்கள் எப்போதும் வணங்கப்படுவார்கள். சோனியா காந்தி, பிரதமர் பதவியை தியாகம் செய்தார். ராகுல் காந்தி இப்போது நடக்கிறார். வெயிலிலும், மழையிலும் நடக்கிறார். பொய்ச் செய்திகளை எதிர்த்து போராடுகிறார்.
பாஜகவுடன் ஒப்பிடும்போது ஏழைக்கட்சிதான்
ராகுல் காந்தியை நீண்டகாலமாக எனக்கு தெரியும். அவர் ஒன்றை மனதில் நினைத்துவிட்டால் அதை எப்படியாவது செய்து சாதித்து காட்டுவார். ராகுல் காந்தி கொள்கையில் உறுதி கொண்டவர். ராகுல் காந்தி ஆன்மீக வாதி. காங்கிரஸ் கட்சியை பொருத்தவரை இது ஒரு மக்கள் இயக்கம். பாஜகவுடன் ஒப்பிடும் போது பணம் அடிப்படையில் நாங்கள் ஏழைக்கட்சிதான். இவ்வாறு அவர் பேசினார்.