சைக்கோ காதலன்.. மொத்தம் 16 முறை கத்தியால் குத்தி.. ரோட்டிலேயே சரிந்து விழுந்த பெண்.. காரணம் இதுதான்
பெங்களூரில் காதலியை நடுரோட்டில் வைத்து கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்
பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரில் இளைஞர் ஒருவர் தனது காதலியை நடுரோட்டில் வைத்து 16 முறை கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்தவர் தினகரன் பனாலா (28). இவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். அதேபோல ஆந்திர மாநிலம் காக்கிநாடாவை சேர்ந்த லீலா பவித்ரா நளமதி (25) எனும் இளம் பெண்ணும் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவர்கள் இருவரும் ஆந்திராவில் இருந்த போதே காதலித்து வந்துள்ளனர்.
ஆனால் இந்த காதல் விவகாரத்திற்கு லீலாவின் வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லை. தினகரன் வேறு சாதியை சேர்ந்தவர் என்பதால் இக்காதலை கைவிடுமாறு லீலாவுக்கு பெற்றோர் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில்தான் இருவரும் பெங்களூரு வந்திருக்கின்றனர். இக்காதல் 5 ஆண்டுகள் வரை இப்படியே நீண்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் லீலாவின் வீட்டில் அவருக்கு மாப்பிள்ளை பார்க்க தொடங்கியுள்ளனர். தொடக்கத்தில் இதற்கு சம்மதிக்காத லீலா பின்னர் ஒப்புக்கொண்டுள்ளார்.

புது மாப்பிள்ளை
இதனையடுத்து இந்த விஷயத்தை தினகரனிடம் சொல்ல தினகரன் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. தன்னை ஏமாற்றிவிட்டு வேறு யாரையாவது திருமணம் செய்துகொள்ளலாம் என்று நினைக்க வேண்டாம் என எச்சரித்துள்ளார். இப்படியே இவர்கள் இருவருக்கிடையேயும் அடிக்கடி சண்டை எழுந்துள்ளது. நாளடைவில் லீலா, தினகரனை சந்திப்பதை தவிர்த்து வந்துள்ளார். பலமுறை தினகரன் லீலாவை நேரில் பார்க்க முயற்சித்தாலும், லீலா அதற்கு இடம் கொடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் பொறுத்துக்கொள்ள முடியாமல் லீலாவின் அலுவலகத்திற்கு சென்றுள்ளார் தினகரன். அப்போதுதான் இந்த கொடூர சம்பவம் நடந்திருக்கிறது.

நடுரோட்டில்
அதாவது, லீலாவை திருமணம் செய்ய தினகரன் அழைக்க, தன்னுடைய குடும்பத்தின் ஒப்புதல் இல்லாமல் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று லீலா மறுத்துள்ளார். எனவே ஆத்திரமடைந்த தினகரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து லீலாவை சரமாரியாக குத்தியுள்ளார். இந்த சம்பவம் நடு ரோட்டில் நடந்துள்ளது. சுற்றி இருந்தவர்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க ரத்த வெள்ளத்தில் சரிந்த லீலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் தினகரன் அங்கிருந்து உடனடியாக எஸ்கேப் ஆகியுள்ளார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் லீலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பிரேத பரிசோதனை
சம்பவம் குறித்து பேசிய பெங்களூரு கிழக்கு துணை போலீஸ் கமிஷனர் பீமாசங்கர் எஸ் குலேத், "ஏற்கெனவே இருவரும் காதலித்து வந்துள்ளனர். இருப்பினும் பெண் வீட்டில் சாதியை காரணம் காட்டி திருமணத்தை மறுக்கவே லீலாவும் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால் தினகரனால் இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே இந்த கொலை நடந்திருக்கிறது. லீலாவின் அலுவலகத்திற்கு வெளியே நடுரோட்டில் இரவு 7.20 மணிக்கு கொலை நடந்திருக்கிறது. பிரேத பரிசோதனையில் லீலாவின் உடலில் 16 முறை கத்தி குத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

கைது
சம்பவத்தையடுத்து தினகரன் தலைமறைவாக முயற்சித்துள்ளார். ஆனால் நாங்கள் உடனடியாக அவரை கைது செய்துள்ளோம். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி எங்கிருந்து பெறப்பட்டது? இதன் பின்னணியில் வேறு யாரேனும் இருக்கிறார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று கூறியுள்ளார். நடுரோட்டில் இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளது பெங்களூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications