ஸ்டாலினை கிண்டல் செய்த விஜய்.. இது நியாயமா? சபாநாயகருக்கு முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்வி
திருநெல்வேலி: தமிழ்நாடு சட்டப்பேரவை விதிப்படியும் மரபு படியும் பேரவையில் இல்லாத ஒருவரை பற்றி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சட்டமன்ற உறுப்பினர்கள் வாய்மொழியாகவோ அல்லது உடல் மொழியாகவோ விமர்சனமோ அல்லது கிண்டலோ, கேலியோ செய்யக்கூடாது என்பது சட்டப் பேரவை தலைவருக்கு தெரிந்திருக்கும் என்று முன்னாள் சபாநாயகர் அப்பாவு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
முதல்வர் விஜய், சட்டசபையில் ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான பதிலுரையை நிறைவு செய்யும் போது, 'எதிர்க்கட்சியினர் அவையில் இருந்திருந்தால் ஒரு 'ஆக்ஷன்' பண்ணணும் என தோன்றியது. எல்லோரும் போய்விட்டார்கள். உங்கள் (பேரவைத் தலைவர்) அனுமதியுடன் அதை பண்ணலாமா?' என கேட்டார். அதற்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், 'இப்பவும் பண்ணலாம் தப்பில்லை' என்றார்.

இதையடுத்து கடந்த மார்ச் மாதம் 4-ந்தேதி தி.மு.க.-காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து வெளியே வந்த அப்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கையை அசைத்து ஒரு சைகை காட்டியிருந்தார். இது அப்போது சமூக வலைதளங்களில் 'டிரெண்ட்' ஆனது. அதே சைகையைத்தான் முதல்வர் விஜய் சட்டசபையில் செய்து காண்பித்து தன்னுடைய உரையை நிறைவு செய்து இருக்கையில் அமர்ந்தார். இதுவும் நேற்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
தமிழக சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் அப்பாவு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறுகையில், தமிழ்நாடு சட்டப்பேரவை விதிப்படியும் மரபு படியும் பேரவையில் இல்லாத ஒருவரை பற்றி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சட்டமன்ற உறுப்பினர்கள் வாய்மொழியாகவோ அல்லது உடல் மொழியாகவோ விமர்சனமோ அல்லது கிண்டலோ, கேலியோ செய்யக்கூடாது என்பது சட்டப் பேரவை தலைவருக்கு தெரிந்திருக்கும்.
இது தொடர்பாக 22.6.2026 அன்று சட்டப்பேரவைத் தலைவர் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உடல் மொழியாக அல்லது வாய்மோழியாக யாரையும் கிண்டலும், கேலியும் செய்யக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்த அடுத்த நாளே, (23.6.2026) இதே போல் வாய்மொழியாகவும், உடல் மொழியாகவும் அவையில் இல்லாத (முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்) குறித்து தமிழக முதலமைச்சர் கிண்டலும், கேலியும் செய்தது அவை உரிமை மீறல் இல்லையா? அவ்வாறான செயலில் ஈடுபட்ட முதல்வர் மீது தாமாக முன்வந்து அவை உரிமை மீறல் நடவடிக்கையை பேரவைத் தலைவர் எடுப்பாரா? தானே முதலமைச்சருக்கு இதுபோல் செயல்பட அனுமதித்து நியாயமா? பதிலை எதிர்பார்த்து தமிழ்நாடே காத்திருக்கிறது பேரவை தலைவர் அவர்களே! " இவ்வாறு கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், "ஆளுநரின் உரைமீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் தமிழ்நாடு முதல்வர் விஜய் அவர்களின்பேச்சு ஆணவத்தின் உச்சம்.. அதிகாரத் திமிரின் வெளிப்பாடு!
முன்னதாக பேசிய எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், தமிழக வெற்றிக் கழக அரசின்மீதான ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைத்தார். மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சனை - சீரழிந்துவரும் சட்டம் ஒழுங்கு என நியாயமான கேள்விகளை எழுப்பினார். பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட தவெகவினரைக்கூட ஆதாரங்களுடன் குற்றம்சாட்டினார். எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு தமிழ்நாடு முதல்வர் பதிலளிப்பார் என்றே எதிர்பார்த்தோம்.
ஆனால், முதல்வருக்கான மாண்புகளை மறந்து ஸ்டாண்ட்-அப் காமெடியன்போல உளறிக் கொட்டியிருக்கிறார் முதல்வர் விஜய். பதிலுரை முழுக்கவே ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் பிதற்றல்களுமே நிறைந்திருந்தன. ஒரே மாதத்தில் 150 பாலியல் குற்றங்கள், கொலை, கொள்ளை, என சட்டம் ஒழுங்கு சீரழிவு, மின்சாரத்துறை செயலழிப்பு, விவசாயிகள் போராட்டம் உள்ளிட்டற்றவர்களுக்கு பதில்சொல்ல வக்கற்ற முதல்வர் சார் திமுக மீது அவதூறை அள்ளித் தெளித்திருக்கிறார். பாஜகவுடன் இணக்கமாக இருப்போம் எனக் கூறிவிட்டு திமுக குறிவைத்து தாக்குவதிலேயே நீங்கள் யார் என்பது அம்பலப்பட்டுவிட்டது.
முதல்வர் விஜய் அவர்களே.. இந்த வெற்றுக் வாய்சவுடால்களுக்கு அஞ்சும் இயக்கம் அல்ல திராவிட முன்னேற்ற கழகம் . எனவே உங்கள் வசனங்களை சினிமா ஷூட்டிங்கோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.
அதிலும் எங்கள் தலைவர் குறித்து முதல்வர் விஜய் பேசியது நடித்திருப்பது ஆணவத்தின் உச்சம்.. அதிகாரத் திமிரின் வெளிப்பாடு. 50 ஆண்டுகளுக்கு மேல் பொது வாழ்க்கையில் உள்ள தளபதியார் மு.க.ஸ்டாலின்அவர்கள் தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கை முறை மற்றும் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளையும் அறிந்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் வழியிலே தமிழ்நாட்டை வளர்ச்சி அடைய செய்தவர் எங்கள் தலைவர்.1 1/2 கோடி தொண்டர்களை கொண்ட திமுகவின் தலைவர். தமிழ்நாட்டில்ஜனாதிபதி ஆட்சி வரக்கூடாது என்பதற்காகத்தான் அன்று கூட்டணி கட்சிகளை தவெவிற்கு ஆதரவு தர க்கூறினார் என்பதை அனைவரும் அறிவர். தளபதியாரை குறித்து இவ்வளவு ஏளனமாக தனி நபர் விமர்சனம், கேலிப்பேச்சு ..
சபையில் இல்லாதவரை குறித்து இதுவரை சட்டமன்றத்தில் இவ்வளவு அநாகரிகமாக பேசப்பட்டதில்லை. எல்லாவற்றுக்கும் மக்கள் பதில் தருவார்கள்.
கழகத் தலைவர் தளபதியாரைப் பற்றி முதலமைச்சரின் தரம் தாழ்ந்த பேச்சு மற்றும் திமுகவின் மீது அவருடைய பொய்க்குற்றச்சாட்டுகள் அனைத்தும் கண்டனத்துக்குரியது. மாண்பையும் மரபையும் கட்டிக் காக்க வேண்டும் என்ற எங்கள் தலைவரின் உத்தரவின் பெயரிலேயே மிகுந்த கண்ணியத்துடன் விமர்சிக்கிறோம். உங்கள் பாணியில் எங்களுக்கும் பேசத் தெரியாமல் இல்லை என்பதை நினைவில் கொள்க.
சட்டமன்றத்துக்கென்று ஒரு மாண்பு இருக்கிறது; அவற்றை மறந்து சிரித்து, விசிலடிக்கும் பொழுதுபோக்கு மன்றமாக சட்டமன்றத்தை மாற்றியிருக்கிறார் முதல்வர் விஜய். அமைச்சர்கள் டூயட் பாடல்களுக்கு ஆடுகிறார்கள்.. எம்எல்ஏக்கள் விசில் அடிக்கிறார்கள்.. முதல்வர் சட்டமன்றத்தில் நாடகத்தை அரங்கேற்றுகிறார். இந்த ஆட்சியில் இன்னும் என்னென்ன கொடுமைகளையெல்லாம் பார்க்கப் போகிறோம் என்பதை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது!" இவ்வாறு அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார்.














Click it and Unblock the Notifications