சட்டசபையில் முதல்வர் விஜய் செய்த ”ஃபினிஷ்டு” சைகை.. அவை மரபை மீறும் செயலா? சபாநாயகர் அளித்த விளக்கம்
சென்னை: தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் உரையை முடிக்கும் போது, 'பினிஷ்டு' சைகை காட்டினார். முன்னாள் முதல்வர் ஸ்டாலினை விமர்சிக்கும் விதமாக இந்த சைகையை காட்டியதாக அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகளும் இந்த செயல் அவை மரபை மீறிய செயல் என விமர்சித்து இருந்தனர். இந்தநிலையி, விஜய் செய்த சைகை மரபை மீறியதா என்ற கேள்விக்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், "நடந்தது எதுவும் அவை மீறல் இல்லை" என்று விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் நேற்று முதல்வர் விஜய், பதிலுரை ஆற்றி பேசினார். எதிர்க்கட்சியான திமுக வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக முதல்வர் விஜய் பேசினார். தனது பேச்சின் நிறைவில் எதிர்க்கட்சியினர் இருந்து இருந்தால் ஒரு ஆக்ஷன் பண்ணனும் என தோன்றியது. எல்லோரும் போய்விட்டார்கள். பேரவைத்தலைவர் அனுமதியுடன் அதை செய்யலாமா? எனக்கேட்டார்.

சைகை காட்டிய விஜய்
அதற்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் இப்பவும் பண்ணலாம் தப்பு இல்லை என்று கூறினார். இதையடுத்து பினிஷ்டு என்று சொல்வது போல விஜய் சைகை காட்டினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஏனேனில், கடந்த மார்ச் மாதம் 4 ஆம் தேதி திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு அப்போதைய முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின், தொகுதி பங்கீடு சுபமாக முடிந்தது என்று குறிப்பதை பினிஷ்டு என்று செய்தியாளர்களை நோக்கி சைகை காட்டினர்.
ஸ்டாலினின் இந்த சைகை இணையத்தில் டிரெண்ட் ஆனது. தேர்தல் முடிவு வருவதற்கு முன்பு கூட கொடைக்கானலில் ஸ்டாலினுடன் செல்பி எடுத்த சுற்றுலாப் பயணிகள் சிலர் இதே ஆக்ஷனை ஸ்டாலினை செய்ய சொல்லி செல்ஃபி எடுத்தனர். இணையத்தில் டிரெண்ட் ஆன இந்த சைகையை முதல்வர் விஜய்யும், நேற்று உரையின் முடிவில் செய்து காட்டிவிட்டு இருக்கையில் அமர்ந்தார். இதனால், அரசியல் ரீதியாக திமுகவை விமர்சிக்கும் விதமாக முதல்வர் விஜய் இந்த சைகையை காட்டியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
சபாநாயகர் விளக்கம்
சட்டசபைக்குள் முதல்வர் இப்படி செய்வது அவை மரபை மீறும் வகையில் இருப்பதாகவும், அவைக்கு உரிய நாகரீகத்தை முதல்வர் விஜய் கடைபிடிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்து வந்தனர். மேலும் இதே சபாநாயகர் எங்களுக்கு சைகை காண்பிக்க அனுமதி இல்லை என சொல்லியிருந்தார். ஆனால் முதல்வருக்கு அனுமதி கொடுத்து இருக்கிறார் என்றும் விமர்சனம் செய்து இருந்தனர்.
இந்த நிலையில் கவியரசு கண்ணதான் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது சபாநாயகர், "நடந்தது எதுவும் அவை மீற்ல் இல்லை' என்று ஒரேவரியில் பதிலளித்துவிட்டு சென்றார்.














Click it and Unblock the Notifications