“யாரோ கொன்னு போட்டுட்டாங்க” ரூ.700 பணம் காணோம்.. விசாரணையில் காத்திருந்த 'ட்விஸ்ட்' - கொடூர சம்பவம்!
பெங்களூர் : மொபைல் போன் வாங்கித் தராததால், கோபமடைந்த மகன், பெற்ற தாயின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அம்மாவை தேடிச் சென்றபோது, அவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்ததாக முதலில் தெரிவித்துள்ளார். பின்னர் போலீசார் சந்தேகமடைந்து விசாரித்ததில் உண்மை வெளிவந்துள்ளது.
மொபைல் போன் வாங்கித் தராததற்காக பெற்ற தாயை, அவரது சேலையை வைத்தே கழுத்தை நெரித்துக் கொன்ற கொடூர மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூர்
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள மைல சந்திராவில் லூகாஸ் லே அவுட் பகுதியில் வசித்து வந்தவர் பாத்திமா மேரி (45). இவரது மகன் தீபக் (26). மகள் ஜாய்ஸ். பாத்திமா மேரி தோட்டங்களில் கீரைகள், காய்கறிகள் வாங்கி வந்து மடிவாலா மார்க்கெட்டில் விற்பனை செய்து, வாழ்க்கை நடத்தி வந்தார்.

கீரை வாங்க
மைல சந்திரா பகுதியில் உள்ள தோட்டங்களில், கீரை வாங்கி வருவதற்காக பாத்திமா மேரி சென்றுள்ளார். தீபக் எழுந்த பிறகு அவனையும் வரச் சொல்லுமாறு மகள் ஜாய்ஸிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார். அதன்படி, தீபக் எழுந்ததும் அவரை அம்மா வரச் சொன்னதாகக் கூறி அங்கு அனுப்பியுள்ளார் ஜாய்ஸ்.

கொலை செய்யப்பட்ட நிலையில்
வெளியே சென்ற தீபக் திரும்பி வந்து அம்மா அங்கு இல்லை எனக் கூறியுள்ளான். இதையடுத்து, நன்றாகப் பார்த்துவிட்டு வா என தீபக்கை மீண்டும் அனுப்பியுள்ளார் ஜாய்ஸ். அப்போது தீபக், தனது அம்மாவை யாரோ சேலையால் கழுத்தை நெரித்துக் கொன்று போட்டிருப்பதாக வேறொருவர் போனில் இருந்து தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

விசாரணை
போலீசார் விசாரணை நடத்தியதில், தீபக் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார். அவரது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் நடந்த உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து தாயை கொலை செய்த தீபக்கை போலீசார் கைது செய்தனர்.

காரணம் என்ன
அம்மாவை பார்த்த தீபக் தனக்கு மொபைல் போன் வாங்கித் தரும்படி கேட்டுள்ளார். அதற்கு, தன்னிடம் தற்போது அவ்வளவு பணமில்லை என அவரது அம்மா கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சண்டை முற்றியதில், கோபமடைந்த தீபக், அவனது தாயின் சேலையால் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, அவனது அம்மா வைத்திருந்த 700 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications