பாயிண்ட்டுக்கு வந்த பாஜக.. தமிழகத்தில் வெல்ல எது முக்கியம் தெரியுமா? வேலூர் இப்ராஹிம் ஓபன் டாக்
திண்டிவனம்: நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற சிறுபான்மையினத்தவரின் வாக்கு வங்கி முக்கியம் என பாஜக சிறுபான்மையினர் அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட பாஜக சிறுபான்மையினர் அணி சார்பில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பாஜக சிறுபான்மையினர் அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் வேலூர் இப்ராஹிம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 2024 இல் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்கு சிறுபான்மையினர் வாக்கு வங்கி எவ்வளவு அவசியம்?

சிறுபான்மையினத்தவர்கள்
சிறுபான்மையினத்தவர்களுக்கு மத்திய அரசு கொடுத்துள்ள நலத்திட்டத்தை எவ்வாறு அந்த மக்களிடம் கொண்டு செல்வது, சிறுபான்மையின மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வாக்கு வங்கிகளாக மட்டுமே பயன்படுத்திக் கொள்ளும் திமுக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பொய் பிரச்சாரங்களை எப்படி எதிர்கொள்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தெரு பிரச்சாரங்கள்
தமிழகம் முழுவதும் பாஜக சிறுபான்மையினர் அணி சார்பில் தெரு பிரச்சாரங்கள், பொதுக் கூட்டங்கள், மத நல்லிணக்க கூட்டங்கள் ஆகியவற்றை எவ்வாறு நடத்துவது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாஜக மீது வைக்கும் குற்றச்சாட்டுகளில் ஒன்று வடமாநில கட்சி, பிராமணர்களின் கட்சி இந்திக்கு ஆதரவளிக்கக் கூடிய கட்சி, தமிழர் விரோத கட்சி என்கிறார்கள்.

பிரதமர் மோடி
ஆனால் பிரதமர் மோடி எந்த நாட்டில் பேசினாலும் சரி தொன்மையான மொழிகளில் மிக முக்கியமான மொழி தமிழ் என்றுதான் பேசி வருகிறார்கள். எனவே திராவிடக் கட்சிகளின் பொய் பிரச்சாரங்களை மக்கள் நம்ப மாட்டார்கள். இதனால்தான் பாஜக தமிழகத்தில் வளர்ந்து கொண்டே வருகிறது. இன்னொரு குற்றச்சாட்டு என்னவென்றால் கிறிஸ்துவர்கள் மற்றும் முஸ்லீம்களின் உரிமையை பறிக்கக் கூடிய கட்சி. பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்துவிட்டால் சிறுபான்மையினர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்பது போன்ற அச்சத்தை விதைக்கிறார்கள்.

பாஜக ஆட்சி
தமிழகத்தில் பாஜக ஆட்சிஅமைப்பதற்கு சிறுபான்மையினரின் பங்கு என்பது மகத்தானதாக உள்ளது. பொய் குற்றச்சாட்டுகளை இஸ்லாமியர்கள் எப்படி நம்புகிறார்களோ அதே போன்று நடுநிலையாக உள்ள இந்துக்களும் நம்புகிறார்கள். கடந்த 50 ஆண்டுகாலமாக காங்கிரஸ் கட்சி இஸ்லாமியர்களை வெறும் வாக்கு வங்கிகளாக மட்டுமே பயன்படுத்தி வந்தது.

இஸ்லாமியர்களின் கல்வி
இஸ்லாமியர்களின் கல்வி, பொருளாதாரத்தில் எந்த ஒரு முன்னேற்றத்தையும் ஏற்படுத்தாமல் அவர்களை தீவிரவாதிகளாக்குவதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்டவை ஆதரவு அளித்துள்ளன. இதை பாஜக ஏற்கவில்லை. தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் போது சிறுபான்மையினரின் பங்கு அதிகமாக இருக்கும். மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பொது சிவில் சட்டத்தை கூடிய விரைவில் அமல்படுத்துவார் என கூறியுள்ளார்.

காஷ்மீரில் 370 சட்டவிதி
காஷ்மீரில் 370 சட்டவிதியை நீக்குவோம் என தேர்தல் வாக்குறுதி கொடுத்தோம். அதை செய்துள்ளோம். ராமஜென்ம பூமியில் ராமர் கோவில் சட்டப்படி கட்டியுள்ளோம். அயோத்தியில் இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் பரப்பளவில் பள்ளிவாசல்கள் கட்டப்பட்டு வருகிறது. ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே சட்டம் என்ற அடிப்படையில் இந்த தேசத்தில் உள்ள அனைவருக்கும் ஒரே நீதி வழங்க வேண்டும் என்றால் சட்டங்கள் பிரிக்கப்படக் கூடாது. இதற்காகத்தான் பொது சிவில் சட்டத்தை பாஜக கொண்டு வருகிறது. இந்த சட்டத்தை எந்த மதத்தினர் எதிர்த்தாலும் அவர்களுடைய குருமார்களுடன் நாங்கள் விவாதிக்க தயாராக உள்ளோம்.

முதல்வர் ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தன் மகன் நடித்துள்ள கலகத் தலைவன் படம்நன்றாக இருக்கிறதா என்பது குறித்துதான் கவலையே தவிர தமிழகத்தில் பால் விலை, மின்கட்டண விலை உயர்வு குறித்தெல்லாம் கவலையே இல்லை. ஊழலை மட்டும் செய்யும் திமுக அரசை விரைவில் ஆட்சியிலிருந்து வெளியேற்றி ஊழலற்ற தேசிய சிந்தனை மிக்க பாஜக ஆட்சி ஏற்படச் செய்வோம் என வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications