"மாதம் ரூ.60,000 சம்பாதித்தாலும் ஏழைதான்!" ஆனந்த் சீனிவாசன் சொல்லும் கசப்பான உண்மை! பயங்கரமா இருக்கே
சென்னை: மாதம் ரூ.40,000 சம்பாதித்த பிறகு கல்யாணம் பண்ணு என அதிரடியாகச் சொல்லித் தான் முதலில் ஆனந்த் சீனிவாசன் டிரெண்டாகி இருந்தார். அவர் இந்த கணக்கைப் போட்டு சில ஆண்டுகள், ஆகிவிட்ட நிலையில், இப்போது புது கணக்குடன் மீண்டும் வந்துள்ளார். அவர் சொல்வது பலருக்கும் கசப்பாக இருந்தாலும், அதுவே உண்மையாகவும் இருக்கிறது.
"பணம் என்னவோ வருது.. ஆனா மாசம் பிறந்தா எங்க போகுதுன்னே தெரியல" - இன்றைய சராசரி நடுத்தர வர்க்கத்தின் ஆகப் பெரிய புலம்பல் இது தான். கையில் ஒரு ஸ்மார்ட்போன், கார், கடனில் சொந்த வீடு எனப் பார்ப்பதற்கு வசதியாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள் கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கும் கௌரவமான ஏழைகள் பலர் உள்ளனர்.

யார் ஏழைகள்
யார் உண்மையில் ஏழைகள்.. யார் உண்மையில் தற்போதைய சூழலில் மிடில் கிளாஸ் என்பது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் சில கசப்பான அதேநேரம் உண்மை தகவல்களைப் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது தனது யூடியூப் பக்கத்தில், "இன்னைக்கு தேதியில் நீங்க சென்னை போன்ற ஒரு மெட்ரோ சிட்டியில இருந்துகிட்டு, மாசம் 60,000 ரூபாய்க்குக் கீழ் சம்பளம் வாங்கினால் அவர்கள் லோவர் மிடில் கிளாஸ் அல்லது ஏழைகள் எனச் சொல்லலாம்..
கணவனுக்குத் தனி.. மனைவிக்குத் தனி என நான் சொல்லவில்லை.. ஒட்டுமொத்தமாகக் கணவன் மனைவி வருமானத்தைச் சேர்த்தே சொல்கிறேன். ரூ.60,000க்கு கீழ் போனால் ஏழைகள் தான். நல்ல வீடு, குழந்தைகளை நல்ல பள்ளியில் சேர்க்க வேண்டும் என்றால் ரூ.60,000க்கு கீழ் வருமானம் இருந்தால் போதாது. கணவர் மட்டும் ரூ.40,000 சம்பாதித்தால் அவர்கள் பொருளாதார ரீதியாகப் பாதுகாப்பற்ற நிலையில் ஏழைகளாகவே உள்ளனர்.
மிடில் கிளாஸ்
அடுத்து ரூ.60,000 முதல் ரூ.1 லட்சம் வரை சம்பாதிப்போரை மிடில் கிளாஸ் என சொல்லலாம்.. ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை மாத சம்பளம் பெறுவோரை அப்பர் மிடில் கிளாஸ் என சொல்லலாம்.. ரூ. 3 லட்சத்திற்கு மேல் சம்பாதிப்போரை நல்ல நிலையில் இருப்போர் என சொல்லலாம். ஆனால், அவர்களும் கூட பலர் வீட்டை லோனில் வாங்குகிறேன் என சொல்லி மாட்டிக் கொள்கிறார்கள். எனவே, உண்மையில் பணக்காரர்கள் என்றால் மாதம் ரூ.5 லட்சத்திற்கு மேல் சம்பாதித்து, ஹோம் லோனும் இல்லாமல் இருப்போர் தான். அவர்களை மட்டுமே உண்மையில் பணக்காரர்கள் எனச் சொல்ல முடியும்.
பணக்காரன்
ஒருவேளை வீட்டுக் கடன் இருக்கிறது என வைத்துக் கொள்வோம்.. வீட்டுக் கடனுக்கு நீங்கள் மாதம் ரூ.2 லட்சம் வரை இஎம்ஐ கட்டுகிறீர்கள் என்றால்.. மாதம் ரூ.7 லட்சம் சம்பாதிக்க வேண்டும்.. அப்போது தான் உங்களைப் பணக்காரர் எனச் சொல்ல முடியும்" என்றார்.
ஏன் ஏழைகள்
இதைக் கேட்கும்போது பலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். "60,000 ரூபாய் என்பது பெரிய தொகை தானே?" என்ற கேள்வி எழலாம். ஆனால், அவர் போடும் கணக்கு மிகத் தெளிவானது. சென்னை போன்ற மெட்ரோ நகரத்தில் வசிக்கும் குடும்பத்திற்கு:
வீட்டு வாடகை: நல்ல ஏரியாவில் வீடு என்று பார்க்கும்போது குறைந்தபட்சம் 17,000 - 20,000 ரூபாய்.
குழந்தைகளின் கல்வி: இரண்டு குழந்தைகள் இருந்தால், அவர்களின் பள்ளி கட்டணம் மற்றும் இதர செலவுகளுக்கே பெரும் தொகை போய்விடும்.
அன்றாடச் செலவுகள்: மளிகை, மின்சாரம், பால், பெட்ரோல் எனப் பார்த்தால் 20,000 ரூபாயைத் தாண்டிவிடும்.
மருத்துவச் செலவு: திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டால் கையில் காசு இருக்காது.
இப்படியிருக்கும்போது, சேமிப்பு என்பதே இல்லாமல் ஓடும் ஒரு வாழ்க்கை எப்படி 'நடுத்தர வர்க்கம்' ஆகும்? இவர்கள் வருமானம் அவனோட அடிப்படைச் செலவுகளுக்கே சரியாக இருக்கும். ஒரு மெடிக்கல் எமர்ஜென்சின்னு வந்தால் கூட காசு இருக்காது, கடன் தான் வாங்கணும். சேமிப்பு இல்லாதவன் ஏழை தான். எனவே, 60,000 ரூபாய் சம்பளம் வாங்குவது இன்றைய பணவீக்கத்துக்கு ஒண்ணுமே கிடையாது. ஒரு கௌரவமான ஏழை, அவ்வளவுதான்!














Click it and Unblock the Notifications