ஜனவரியில் வங்கி ஊழியர்கள் 2 நாள் தொடர் வேலைநிறுத்தம்: பண பரிவர்த்தனைகள் பாதிக்கும் அபாயம்
ஹைதராபாத்: ஜனவரி 20 மற்றும் 21ம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் இரண்டு நாள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
ஊதிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும், ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் கடந்த 18ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்கள் கலந்துகொண்டன.
இப்போராட்டத்தில் தனியார் வங்கிகள் மற்றும் வெளிநாட்டு வங்கிகளும் பங்கேற்றன. இதனால் வங்கி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் வங்கி ஊழியர் சங்கங்களின் ஆலோசனை கூட்டம் ஹைதராபாத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் வெங்கடசாலம் கூறுகையில் ‘வங்கி ஊழியர்களின் ஊதிய மறுசீரமைப்பு மற்றும் ஊதிய நிலுவைத்தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காத பட்சத்தில் இதே கோரிக்கையை வலியுறுத்தி அடுத்த மாதம் (ஜனவரி) 20 மற்றும் 21 ஆகிய 2 நாட்கள் நாடுமுழுவதும் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் நாடு முழுவதிலும் இருந்து 10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்கிறார்கள். ஏ.டி.எம் மையங்களில் பணம் நிரப்பும் ஒப்பந்ததாரர்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தள்ளனர்' என்றார்.
இப்போராட்டம் திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் நடைபெற உள்ளதாலும், அதற்கு முந்தைய இரு தினங்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்பதாலும் பணபரிவர்த்தனை கடுமையாக பாதிக்கும் என்று தெரிகிறது. தனியார் வங்கி ஊழியர்களும் போராட்டத்தில் கலந்து கொள்வதால் வாடிக்கையாளர்கள் மிகவும் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications