சேவை வரி உயர்வு பற்றி பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் அருண் ஜெட்லி?
சேவை வரி விகிதம் 14 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக உயர வாய்ப்புள்ளதாக மத்திய நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி: ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு தொடர்பாக மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் பல மாதங்களாக முடிவு எட்டப்படாமல் பேச்சுவார்த்தை இழுத்துக்கொண்டே வந்தது.
திங்கட்கிழமை நடந்த கூட்டத்தில் அனைத்து மாநிலங்களும் ஒருமனதாக ஒத்துக்கொள்ளக்கூடிய முடிவு எட்டப்பட்டதால் வரும் 2017 ஜூலை மாதத்தில் இருந்து அமலுக்கு வர உள்ளது.
இதனை திங்கட்கிழமை நடந்த இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு 2017-2018ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இடம் பெறும் என்றும் அவர் உறுதியளித்தார்.
ஜி.எஸ்.டி வரி
பெரும்பாலான மாநிலங்களும், சரக்கு மற்றும் சேவைவரி முறையானது வரும் ஜூலை மாதத்தில் இருந்து நடைமுறைப்படுத்த ஒப்புக்கொண்டுள்ளன. மேலும் இந்த வரிமுறையானது நடைமுறைக்கு வந்தபின் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பீட்டை சமாளிக்கும் விதமாக, முதல் மூன்று மாதங்களுக்கு சேவை வரி விதிப்பின் மூலம் பெறப்படும் தொகையினை மத்திய அரசும் மாநில அரசுகளும் பகிர்ந்து கொள்ளும்.
விலைவாசி உயர்வு
தற்போது சேவை வரி வீதமானது 14 சதவீதமாக உள்ளது. வரும் ஜூலை மாதத்தில் இருந்து சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு வரும்போது இது 18 சதவீதமாக அதிகரிக்கும். இது பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தும். மேலும் இதனால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பும் தவிர்க்கப்படும்.
அருண் ஜெட்லி
சரக்கு மற்றும் சேவை வரிமுறை நடைமுறைக்கு வரும்போது சேவைவரி வீதமானது முக்கியமான சேவைத் துறைகளுக்கு தற்போதுள்ள 15 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாக உயரும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், தற்போது 18 சதவீதமாக உயரும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளது அனைவருக்கும் சற்று ஏமாற்றமாக உள்ளது.
வரி விலக்கு
மேலும், சரக்கு மற்றும் சேவை வரி முறையானது அதிக விலை கொடுத்து பொருட்களை வாங்கும் பேராபத்திலிருந்து மக்களை காக்கும் கவசமாக விளங்கும்.
அதேபோல், கல்வி மற்றும் மருத்துவம் போன்ற உயர் சேவைத்துறைகள் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சேவை வரி வருவாய்
2016-17-ஆம் ஆண்டில் இதுவரை, 14 சதவீதம் சேவை வரி மூலம் பெறப்பட்ட தொகை சுமார் 16 லட்சம் கோடிகள் என்பது குறிப்பிடத்தக்கது. முன்பு ஜிஎஸ்டி வரி நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்து இருந்தது. இப்போது ஜூலை மாதத்தில் இருந்து அமலுக்கு வர உள்ளது.