தங்கம் கடன் வாங்க போறீங்களா? லோன் எடுப்பதில் வரப்போகும் சிக்கல்.. மத்திய அரசின் புது கட்டுப்பாடு?
சென்னை: இந்தியாவில் தங்கம் இறக்குமதியை கணிசமாகக் குறைக்கும் வகையில் மத்திய நிதியமைச்சகம் முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. தங்க கடன்கள் (Gold Metal Loans - GML) உள்ளிட்ட தங்கம் சார்ந்த அனைத்து கடன் விவரங்களையும் வங்கிகள் உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை வரவிருக்கும் புதிய கொள்கை மாற்றங்களின் முன்னோடியாக பார்க்கப்படுகிறது.
2025-26 நிதியாண்டில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி அளவு 721 டன்களாகக் குறைந்திருந்தாலும், உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வு காரணமாக இறக்குமதி செலவு 24 சதவீதம் அதிகரித்து 71.9 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. இது நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறையை அதிகரித்து, ரூபாயின் மதிப்பில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தப் பின்னணியில் மத்திய நிதியமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறை (DFS) அனைத்து முக்கிய வங்கிகளுக்கும் அவசரக் கடிதம் அனுப்பியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்ட இந்தக் கடிதத்தில், 2023 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட தங்க உலோகக் கடன்களின் மொத்த மதிப்பு, வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, சர்வதேச தங்கம் விநியோகஸ்தர்கள், பிணையத் தொகை உள்ளிட்ட முழு விவரங்களையும் திங்கட்கிழமைக்குள் சமர்ப்பிக்குமாறு கெடு விதிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியும் (RBI) ஏற்கனவே வங்கிகளின் தங்கக் கடன் வரம்புகளை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
டோர் கோல்ட் (Dore Gold) திட்டம் - இறக்குமதியைக் குறைக்கும் புதிய வழி
தங்கம் இறக்குமதியைக் கட்டுப்படுத்த உள்நாட்டு தங்கம் வர்த்தக கூட்டமைப்பு முக்கிய ஆலோசனை வழங்கியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட தங்கக் கட்டிகளை இறக்குமதி செய்வதற்குப் பதிலாக, 'டோர்' எனப்படும் தூய்மையாக்கப்படாத தங்கக் கட்டிகளை இறக்குமதி செய்து, உள்நாட்டு ஆலைகளில் சுத்திகரித்து பயன்படுத்தலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த உள்நாட்டு சுத்திகரிக்கப்பட்ட தங்கத்தை நகை வியாபாரிகளுக்கு GML மூலம் வழங்கலாம். Gold ETFs உள்ளிட்ட தங்கப் பரஸ்பர நிதித் திட்டங்களும் இந்த உள்நாட்டு டோர் தங்கத்தை வாங்கலாம். இந்த மாற்றம் இறக்குமதித் தேவையை பெருமளவு குறைக்கும் என்று தொழில்துறை நிபுணர்கள் நம்புகின்றனர்.
அண்மையில் நான்கு முன்னணி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் தங்களது தங்கத் திட்டங்களில் புதிய முதலீடுகளுக்கு கட்டுப்பாடு விதித்திருப்பது இந்தப் போக்கை உறுதிப்படுத்துகிறது.
பரிசீலனையில் உள்ள பிற முக்கிய யோசனைகள்
மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் பரிசீலனையில் பல முக்கிய திட்டங்கள் உள்ளன:
உள்நாட்டுத் தேவை குறைவான காலங்களில் விற்கப்படாத தங்கத்தை சீனா, துருக்கி உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தற்காலிக அனுமதி.
தங்கம் வாங்குவதில் ரொக்கப் பணப் பரிவர்த்தனையை மேலும் கட்டுப்படுத்துதல்.
பொதுமக்களிடம் உள்ள வீட்டுத் தங்கத்தை வங்கிகள் மூலம் சேகரித்து, நகை உற்பத்தியாளர்களுக்கு கடனாக வழங்கும் சுழற்சி முறை.
2013ஆம் ஆண்டு போன்ற 80:20 திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல் - இறக்குமதி தங்கத்தில் குறிப்பிட்ட பகுதியை ஏற்றுமதிக்கு ஒதுக்குதல்.
தங்க இறக்குமதி வரியை 15 சதவீதமாக உயர்த்திய பின்னணியில் இந்தத் தரவு சேகரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜூன்-ஜூலை மாதங்களில் தங்கத்தின் தேவை பொதுவாக குறைவாக இருப்பதால், இந்த காலகட்டம் புதிய கொள்கை முடிவுகளை அறிவிப்பதற்கு ஏற்ற தருணம் என்று வங்கியாளர்கள் கருதுகின்றனர்.
இந்த நடவடிக்கைகள் நாட்டின் வெளிநாட்டு செலவழிப்பைக் குறைத்து, பொருளாதார நிலையை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்கம் இறக்குமதியைக் கட்டுப்படுத்துவது ரூபாய் மதிப்பு, பணவீக்கம் மற்றும் நடப்புக் கணக்கு பற்றாக்குறை ஆகியவற்றில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications