"கடவுளே.!" உச்சத்தில் பறக்கும் தங்கம் விலை! குறைய வாய்ப்பு இருக்கா? ஒரே போடாக போட்ட ஆனந்த் சீனிவாசன்
சென்னை: கடந்த சில காலமாக ஓரளவுக்கு நிலையாக இருந்த தங்கம் விலை மீண்டும் உயர ஆரம்பித்துவிட்டது. கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தே வருகிறது. தங்கம் விலை இதுபோல தொடர்ந்து உயர்ந்து வருவதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ள நிலையில், அது வரும் காலங்களில் குறையக் கொஞ்சமாவது வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் வரை தங்கம் விலை ஓரளவுக்கு நிலையாகவே இருந்தது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.8750- 8900 என்ற ரேஞ்சிலேயே இருந்து வந்தது. ஆனால், கடந்த வாரம் சர்வதேச அரசியலில் ஏற்பட்ட மாற்றம் தங்கம் விலையைத் தாறுமாறாக உயர்த்தியது. இஸ்ரேல் ஈரான் மோதல் தொடரும் நிலையில், அது தங்கம் விலையிலும் எதிரொலிக்கிறது.

தங்கம் விலை
கடந்த 5 நாட்களில் ஞாயிறு தவிர மற்ற 4 நாட்களிலும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தே வருகிறது. கடந்த ஜூன் 10ம் தேதி ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.8945ஆக இருந்தது. இப்போது வெறும் 5 நாட்களில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.9320ஐ தொட்டுவிட்டது. அதாவது ஐந்து நாட்களில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.375 உயர்ந்துள்ளது.
மக்கள் அச்சம்
தங்கம் விலை இதுபோல மீண்டும் உயர ஆரம்பித்துவிட்டதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். திருமண சீசன் சீக்கிரமே தொடங்கும் நிலையில், இந்த ரேஞ்சில் தங்கம் விலை உயர்வது மக்களிடையே பயத்தையே ஏற்படுத்துவதாக இருக்கிறது. இதற்கிடையே தங்கம் விலை ஏன் உயர்கிறது.. இது குறையக் கொஞ்சமாவது வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
ஆனந்த் சீனிவாசன்
இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில், "தங்கம் விலை மீண்டும் ராக்கெட்டில் ஏறிவிட்டது. நாம் தங்கம் விலை ரூ.8500க்கு தான் போகும் எனக் கணித்திருந்தோம். ஆனால், இப்போது அது ரூ.9500க்கு போய்க் கொண்டு இருக்கிறது. ஆனாலும், குவாண்ட் மியூச்சுவல் பண்ட் கணிப்பின்படி 15% வரை தங்கம் விலை விழ வேண்டும் என நாம் கடவுளிடம் வேண்டிக் கொள்வோம். எதாவது அரிதாக நடந்து 15% விழ வேண்டும் என வேண்டிக் கொள்வோம்.
ஆனால், அதற்கு எந்தவொரு சாத்தியக்கூறும் இருப்பது போல எனக்குத் தெரியவில்லை. இன்றும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கிக் கொண்டு தான் இருக்கின்றன.
புவிசார் அரசியல்
அமெரிக்காவில் இப்போது கோர் பணவீக்கம் 2.8%ஆக உள்ளது. அனைவரும் 0.3% வரை உயரும் என நினைத்தார்கள். ஆனால், 0.1% மட்டுமே ஏறியுள்ளது. இதனால் அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்க வாய்ப்பு கம்மி. ஏனென்றால் அங்குப் பணவீக்கம் உயரவே வாய்ப்புகள் உள்ளன. ஆனாலும், இந்தாண்டு ஒரு 0.25% வட்டியை அமெரிக்கா குறைக்கலாம். ஆனால், ஆகஸ்ட், செப்டம்பரில் தான் இது தெரிய வரும். அதற்குள் ஒரு பணவீக்க டேட்டா வரும் என்பதால் நிலைமை மாறலாம்.!" என்றார்.
அமெரிக்க பெடரல் வங்கியின் அடுத்த கூட்டம் நாளை, அதாவது ஜூன் 17ம் தேதி தொடங்கி அடுத்த இரு நாட்கள் நடைபெறுகிறது. இதில் வட்டி விகிதம் குறைக்கப்பட வாய்ப்பு குறைவு. ஆனால், இந்தாண்டு வரும் காலங்களில் நடக்கும் கூட்டங்களில் வட்டி குறைக்கப்படலாம். அப்படி வட்டி குறைக்கப்பட்டாலும் தங்கம் விலை உயரவே செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications