கடன் தொகையை கட்டத் தவறினால் அபராதம் இல்லை - சென்னை வெள்ளப் பாதிப்புகளால் வங்கிகள் அறிவிப்பு
சென்னை: தமிழகமே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடன் தவணை தொகையை கட்ட தவறியவர்களுக்கு அபராதம் வசூலிக்கப்படாது என வங்கிகள் தெரிவித்துள்ளது.
சென்னையில் வெள்ளத்தால் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வங்கிகள் தமது வாடிக்கையாளர்களுக்கு சில சலுகைகளை அறிவித்துள்ளது.
அதில் நவம்பர் மாதத்தில் மாதாந்திர கடன் தவணை தொகையை கட்டத் தவறியவர்களுக்கு அபராதம் விதிக்கபடாது என ICICI, HDFC, State bank of India, Yes Bank வங்கிகள் தெரிவித்துள்ளன.

அபராதம் இல்லை:
மேலும் நவம்பர் மாதத்தில் பணமின்றி திரும்பிய காசோலைகளுக்கு அபராதம் வசூலிக்கப்படாது என்றும் ICICI தெரிவித்துள்ளது. எச்டிஎஃப்சி வங்கியும் தன்னிடம் வீட்டுக் கடன் வாங்கியோர் நவம்பர் மாதத் தவணை கட்டத் தவறியவர்களுக்கு அபராதம் வசூலிக்கப்படாது என தெரிவித்துள்ளது.

கட்டணமின்றி செலுத்தலாம்:
சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிப்படைந்ததை தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக வங்கிகள், பல்வேறு கடன்களுக்கான நவம்பர் மாத தவணைத் தொகையை எவ்வித அபராதமும் இன்றி செலுத்தலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.

தாமதமானாலும் பரவாயில்லை:
இந்நிலையில், எச்.டி.எப்.சி வங்கியைத் தொடர்ந்து, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியும் தங்களது சென்னை வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி, இருசக்கர வாகனம், வீட்டுமனை கடன்கள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவைக்கு நவம்பர் மாத தவணை தொகை கட்டுவதற்கு தாமதம் ஏற்பட்டாலும், அதனை எவ்வித அபராதமின்றி செலுத்தலாம்.

தனிநபர் கடன் தொகைகள்:
மேலும், வங்கிகளில் வாடிக்கையாளர்களின் காசோலைகள் பணமின்றி திரும்பினாலும் அதற்கும் எவ்வித அபராதமும் வசூலிக்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளது. இதேபோல் அரசு வங்கியான எஸ்.பி.ஐயும், தனி நபர் கடன் உட்பட பல்வேறு கடன்களுக்கான நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்கான மாத தவணை தொகையை தாமதமாக செலுத்தினாலோ, அல்லது செலுத்த முடியாமல் போனாலோ அதற்காக எந்த அபராதமும் விதிக்கப்படாது என்று அறிவித்துள்ளது. மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு போர்வைகள் உணவுகள் வழங்க ஏற்பாடுகள் செய்துள்ளதாக எஸ்.பி.ஐ. வங்கி தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications