Dubai: காத்து வாங்கும் 5 ஸ்டார் ஹோட்டல்கள்.. வெறிச்சோடிப் போன துபாய்.. மொத்தமாக மூட முடிவு?
மத்திய கிழக்கில் ஈரான் போர் பதற்றம் காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சுற்றுலா துறையை பெரிதும் பாதித்துள்ளது. குறிப்பாக துபாயில் உள்ள பல பிரீமியம் ஹோட்டல்கள், ஆடம்பர 5 ஸ்டார் ஹோட்டல்கள் தற்காலிகமாக மூடப்பட்டு புதுப்பிக்கும் பணிகளை மேற்கொள்ள உள்ளன.
ஈரானின் தொடர் ட்ரோன் தாக்குதல் காரணமாக துபாய்க்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை கிட்டதட்ட 80-90 சதவீதம் குறைந்துள்ளதால், அனைத்து சுற்றுலா தளங்களும், ஹோட்டல்களும் முடங்கியுள்ளது. இந்த காலக்கட்டத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ள ஹோட்டல் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது. இதனால் துபாயில் தற்போது பெரும்பாலான ஹோட்டல்களில் பெரிய அளவில் புதுப்பிப்பு பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

UAE பொருளாதாரத்தில் சுற்றுலா துறை சுமார் 14 சதவீதம் பங்கு வகிக்கிறது. எனவே இந்த பாதிப்பு அந்நாட்டின் பொருளாதாரத்துக்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் போர் முடிந்த பின்பு சுற்றுலா பயணிகளுக்கு கதவுகள் திறக்கப்பட்ட பின்பு பெரிய அளவிலான வர்த்தகத்தையும், வருமானத்தையும் பெற வேண்டும் என்பதற்காக இத்தகைய புதுப்பிப்பு பணிகளை செய்து வருகிறது.

ஈரான் தாக்குதல்கள்
ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல்களுக்குப் பிறகு ஏற்பட்ட பதற்றம் காரணமாக விமான போக்குவரத்து மற்றும் பயணிகள் வருகை கணிசமாகக் குறைந்துள்ளது. பயணிகள் பாதுகாப்பு குறித்த அச்சம், விமான அட்டவணைகள் மாற்றம், மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் போன்றவை சுற்றுலாத் துறையை பின்னுக்குத் தள்ளி கிட்டத்தட்ட முடக்கியுள்ளது.
துபாய் ஹோட்டல்களின் வர்த்தக தற்போது கொரோனா காலத்துக்கு இணையாக சென்றுள்ளது. இதன் விளைவாக பல ஹோட்டல்கள் வருமான இழப்பை குறைக்கும் வகையில் புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளன.

பிரீமியம் ஹோட்டல்கள் தற்காலிக மூடல்
ஆர்மானி ஹோட்டல் துபாய் (Burj Khalifa-வில் உள்ளது), ஜுமைரா புர்ஜ் அல் அரப், St Regis The Palm, Park Hyatt Dubai, Radisson Blu Hotel Dubai Media City உள்ளிட்ட குறைந்தது ஏழு பிரீமியம் ஹோட்டல்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன அல்லது சேவைகளை குறைத்துள்ளன.
ஜுமைரா புர்ஜ் அல் அரப் ஹோட்டல் 1999-ல் திறக்கப்பட்டதிலிருந்து முதல் முறையாக பெரிய அளவிலான புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்ள 18 மாதங்கள் மூடப்பட்டு உள்ளது. ஆர்மானி ஹோட்டல் 2026-ம் ஆண்டு இறுதியில் மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய சுற்றுலா மந்தநிலையை பயன்படுத்தி ஹோட்டல்கள் புதுப்பித்தல், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பாதுகாப்பு மேம்பாட்டு பணிகளை செய்ய துவங்கியுள்ளன. இது எதிர்காலத்தில் தேவை அதிகரிக்கும் போது சிறப்பாக செயல்பட உதவும்.
துபாய் அரசு ஹோட்டல் மற்றும் சுற்றுலா துறை மேம்பாட்டுக்காக 272 மில்லியன் டாலர் அளவிலான தொகையை வெளியிட்டுள்ளது. அபு தாபி விமான நிலையம் கூட பயணிகளை ஈர்க்கும் வகையில் புதிய திட்டங்களை அறிவித்துள்ளது.

துபாயில் இருக்கும் இந்திய ஹோட்டல் நிலை
டாடா குழுமத்தின் IHCL (Taj Hotels) மற்றும் Lemon Tree போன்ற இந்திய ஹோட்டல் பிராண்டுகள் துபாயில் முழுமையாக செயல்பட்டு வருகின்றன. ஆனால் அவை செலவுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படாமல் செலவுகள் குறைக்கப்பட்டுள்ளன.
இந்த சூழலில், UAE சுற்றுலா துறை தற்காலிகமாக பின்னடைவை சந்தித்தாலும், அரசு மற்றும் ஹோட்டல் துறை தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஈரான் போர் பதற்றம் தொடர்ந்தால் சுற்றுலா துறை வர்த்தகம் 30-40 சதவீதம் வரை 2026ல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், UAE-வின் வலுவான அடிப்படை வசதிகள் காரணமாக சந்தை விரைவில் மீண்டு வரும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.












Click it and Unblock the Notifications