150 ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக துபாயில் உலக வர்த்தக கண்காட்சி
துபாய்: 2020ம் ஆண்டுக்கான உலக வர்த்தக கண்காட்சி நடத்த பல்வேறு நாடுகள் போட்டி போட்டதில் இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
உலக வர்த்தக கண்காட்சியான வேர்ல்டு எக்ஸ்போ 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2020ம் ஆண்டுக்கான கண்காட்சியை நடத்த பல்வேறு நாடுகள் போட்டி போட்டன.
போட்டியில் ரஷ்யாவின் எகாடெரின்பர்க், பிரேசிலின் சாவ் பாலோ, துருக்கியின் இஸ்மீர் ஆகியவை இருந்தன.

வென்ற துபாய்
வர்த்தக கண்காட்சியை நடத்தும் போட்டியில் இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் தேர்வு செய்யப்பட்டது. பாரீஸில் நடந்த இந்த தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடன் துபாயில் உள்ள மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபாவில் வானவேடிக்கைகள் விடப்பட்டன.

மத்திய கிழக்கு நாடு
உலக வர்த்தக கண்காட்சி முதன்முதலாக 1851ம் ஆண்டு இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடத்தப்பட்டது. இதையடுத்து 150 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த கண்காட்சி முதன் முறையாக ஒரு மத்திய கிழக்கு நாட்டு நகரில் நடக்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

25 மில்லியன் பார்வையாளர்கள்
துபாயில் நடக்கவிருக்கும் உலக வர்த்தக கண்காட்சியை பார்க்க 25 மில்லியன் பேர் வருவாார்கள் என்றும், அதில் 70 சதவீதம் பேர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வெளியில் இருந்து வருவார்கள் என்றும் துபாய் அரசியல் தலைவர்கள் நம்புகிறார்கள். இந்த கண்காட்சி மூலம் 2 லட்சத்து 77 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று நம்பப்படுகிறது.

2015ம் ஆண்டில்
2015ம் ஆண்டுக்கான உலக வர்த்தக கண்காட்சி இத்தாலியில் உள்ள மிலன் நகரில் நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications