தொடர்ந்து சரியும் ரூபாய் மதிப்பு.. பொருட்களின் விலை கடுமையாக உயரும்.. நிபுணர்கள் எச்சரிக்கை
Recommended Video

- ராஜாளி
சென்னை: இந்த ஆண்டில் இந்திய ரூபாயின் மதிப்பு ஆசியாவிலேயே மிக மோசமான சரிவுக்கு ஆளாகியுள்ளது. உலக அளவில் பல்வேறு நாணயங்களும் டாலருக்கு நிகரான நாணய மதிப்பில் பெரும் சரிவினை கண்டுள்ளன. துருக்கியின் பொருளாதார சரிவின் காரணமாக அதன் நாணயமான லிரா வரலாறு காணாத சரிவினைக் கண்டுள்ளது.
துருக்கி அதிபர் அமெரிக்காவுக்கு எதிராக பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்கிறார் என்ற குற்றசாட்டை அமெரிக்கா கூறி வருகிறது. இதன் எதிர்விளைவாக துருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இதன் விளைவாக உலக நாடுகளின் நாணயங்கள் மதிப்பிலும் இந்திய நாணய மதிப்பிலும் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த இரு மாத காலத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 ரூபாய்க்கும் அதிகமாக குறைந்துள்ளது. கடந்த திங்களன்று ஒரு நாளில் மட்டும் ரூ.1.08 அளவுக்கு சரிந்து செவ்வாய்க்கிழமை ரூ.70.080 வரை சென்றுள்ளது. இதுதான் வரலாற்றிலேயே ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட உச்சபட்ச வீழ்ச்சி.

அமெரிக்க டாலர் மீதான நம்பகத்தன்மை அதிகரித்திருப்பதும் அதன் மீதான முதலீடு அதிகரித்திருப்பதும் சர்வதேசச் சந்தையில் டாலருக்கான பற்றாக்குறை ஏறப்ட்டிருப்பதற்கான காரணங்களாக கூறப்படுகிறது. இந்த பற்றாக்குறை டாலரின் மதிப்பை அதிகளவில் ஏற்றியுள்ளது. இந்நிலை கடுமையான வர்த்தக இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கடந்த ஐந்து வருடத்தில் இந்தியாவின் வணிகப் பற்றாக்குறை கடந்த ஜூன் மாதம் 16.6 பில்லியன் டாலராக எகிறியது. இதன் ஒட்டுமொத்த எதிரொலிப்பாக அமெரிக்காவின் பொருளாதார நிலை உயர்ந்துகொண்டே செல்கிறது.
இரான் மீதான அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளின் காரணமாக சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது இந்த நிலைகளோடு இந்தியா அதிகளவில் கச்சா எண்ணையை இறக்குமதி செய்து வருகிறது. உலக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர இந்திய நாணயத்தின் மதிப்பும் அமெரிக்க நாணயத்தின் மதிப்பும் 1947-ம் ஆண்டு ஒரே அளவில் இருந்தன. இந்தியாவில் முதல் ஐந்தாண்டு திட்டம் தொடங்கப்பட்டு எப்போது இந்தியா கடன் வாங்க தொடங்கியதோ அப்போதே இந்திய ரூபாயின் மதிப்பு சரியத் தொடங்கி விட்டது. 1975 ம் ஆண்டு 8 ரூபாயாக இருந்த ஒரு டாலர் 1985-ம் ஆண்டு ல் 12 ரூபாயாக உயர்ந்தது. பொருளாதார மயமாக்கல், தாரளாமயமாக்கல் என்ற பாதையில் இந்திய பயணம் தொடங்கியபோது 47 ரூபாய் முதல் 48 ரூபாயாக மாறத் தொடங்கியது.

கடந்த 2014 ல் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலகும்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 60 ரூபாய். அதன்பிறகு ஏற்பட்ட தொடர் சரிவு இப்போது இந்த நிலையை எட்டியுள்ளது. இப்போது ஏற்பட்டிருக்கும் இந்திய பண மதிப்பு வீழ்ச்சி எதிர்பார்த்த ஒன்றுதான் என்று கூறுகிறார் பிரபல பொருளாதார நிபுணர் வெங்கடேஷ் ஆத்ரேயா. கச்சா எண்ணையின் விலை அதிகரிப்பு, வெளிநாட்டு வங்கிகளில் வட்டி விகிதங்கள் அதிகரிப்பு, டாலருக்கான தேவை அதிகரிப்பு போன்றவை காரணமாக இருந்தாலும், மோடி அரசின் நிர்வாகத் திறமையின்மை ஒரு மிகப்பெரிய காரணி என்று கூறுகிறார் ஆத்ரேயா. கச்சா எண்ணை விலை குறைந்தபோதெல்லாம் அதன் பலனை மக்களுக்கு கொடுக்காமல், அப்போதும் பல்வேறு வரிகள் போன்றவற்றை விதித்து பெட்ரோலியப் பொருள்களின் விலையை குறைக்காமல் விலைவாசி கூடுவதற்கு மோடி அரசு காரணமாக இருந்தது என்ற அவர் மேக் இன் இந்தியா என்று பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும் ஏற்றுமதிக்கான சந்தை விரிவடையவில்லை, அயல்நாட்டு பொருள்களின் இறக்குமதி அளவு அதிகரித்துக் கொண்டே இருப்பது போன்றவை ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு மிக முக்கிய காரணங்கள் என்று கூறுகிறார்.
இந்த காலகட்டம் முழுவதும் சரக்கு வர்த்தகத்தில் தேக்கம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. சேவைத்துறை ஏற்றுமதியிலும் பெருமளவு பாதிப்புகள் இருக்கின்றன. ஐ டி செக்டாரிலும் பாதிப்புகள் இருப்பதால் ஒரு கடினமான நிலையிலேயே இந்தியா இருக்கின்றது. இருந்தாலும் இதை இந்திய அரசு ஒத்துக்கொள்ளப்ப போவதில்லை. இந்த நிலையில் எப்படியாவது அந்நிய முதலீடு இந்தியாவுக்கு வந்தால் போதும் என்ற எண்ணத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் காலில் விழுந்துவிடுமோ என்ற அச்சம் இருப்பதாக தெரிவித்தவர் எண்ணை விலை அதிகரித்துக் கொண்டே இருப்பதும், அமெரிக்கா போன்ற நாடுகள் வட்டி விகிதத்தை அதிகரித்துக் கொண்டிருப்பதும் நமக்கு பெரும் பாதிப்புகளை உருவாக்கலாம் என்று எச்சரிக்கிறார் பொருளாதார நிபுணர் வெங்கடேஷ் ஆத்ரேயா.
ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததால் ஏற்றுமதி கூடுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது என்று நம்மிடம் பேசத் தொடங்கினார் பொருளாதார நிபுணர் திரு அருள்ராஜ். ஆனால் இறக்குமதி அதிகளவில் பாதிக்கும் என்றும் அதிர வைத்தார். நம் நாட்டை பொருத்தமட்டில் இறக்குமதி அதிகமாக இருப்பதால் இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் விலை கடுமையாக உயரும். கச்சா எண்ணை டாலரில் வியாபாரம் நடப்பதால் அதை இந்தியாவுக்குள் கொண்டுவருவதற்கான லேண்டிங் காஸ்ட் அதிகமாகும். இதனால் விலை உயர்வு என்பது தொடர்சங்கிலியாக இருக்கும் என்றவரிடம் இதை சமாளிக்க அரசு என்ன செய்யவேண்டும் என்று கேட்டபோது அரசு இப்போதும் செய்ய முடிந்த ஒரே செயல் ரிசர்வ் வங்கியின் மூலம் டாலர்களை இந்தியாவில் விற்பதுதான் அதுவும் கவனமாக விற்பனை செய்தல் வேண்டும் இல்லையெனில் இந்தியாவில் டாலர் பற்றாக்குறை ஏற்படும் சூழல் வரும் அபாயம் உருவாகும் என்று எச்சரிக்கிறார் அருள்ராஜ்.
டாலருக்கு எதிரான நாணயங்களின் மதிப்பு குறைதல் என்பது சர்வதேச அளவில் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை என்பதால் எப்போது இந்நிலை சரியாகும் என்று கூற முடியாது என்று கூறுகிறார் அவர். முன்பும் இது போன்ற ஒரு சூழல் வந்தபோது அப்போது ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த ரகுராம்ராஜன் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களிடம் டாலர்களை இங்கு அதிகமாக டெப்பாசிட் செய்யும் வகையில் வட்டி விகிதத்தை அதிகரித்தார் அதனால் அப்போது ஓரளவுக்கு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த அரசும் டாலர் இந்தியாவுக்குள் வருவதற்கு ஏதேனும் முயற்சிகள் எடுத்தார்கள் என்றால் நிலைமை கொஞ்சம் சீராகலாம். ஆனால் இது சர்வதேசப் பிரச்சனை என்பதால் இந்தியாவின் முயற்சி மட்டுமே தீர்வை தராது என்றும் கூறினார் அருள்ராஜ்.
இப்போது இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியை கண்டிருப்பதால் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். கச்சா எண்ணையின் விலை உயர்வு பெட்ரோலியப் பொருள்களில் எதிரொலிக்கும் அது அப்படியே அனைத்துப் பொருள்களுக்கும் சங்கிலித் தொடர் போல பரவும் என்பதால் போக்குவரத்து செலவினங்கள் அதிகரிப்பதில் தொடங்கி அனைத்துப் பொருள்களின் விலையும் அதிகரிக்கும். அதோடு வெளிநாட்டில் கல்வி கற்பதற்கான செலவு, சுற்றுலா செலவு, டாலரில் செய்யும் அனைத்து செலவுகளும் மிகக் கடுமையாக அதிகரிக்கும்.












Click it and Unblock the Notifications