மார்ச் 31 முதல் மார்க்கெட் விலைக்கே கேஸ் சிலிண்டர்கள் விற்பனை!
கொல்கத்தா: ஆதார் கார்டு இருக்கிறதோ, இல்லையோ 2015ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி முதல் வீடுகளுக்கு டெலிவரி ஆகும் காஸ் சிலிண்டர்களை மார்க்கெட் விலைக்கே வாடிக்கையாளர்கள் பெற வேண்டும். மானியப் பணத்தை அரசு அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக சேர்த்து விடும்.
அதேசமயம் ஆதார் கார்டு இருந்தால்தான் வங்கிக் கணக்கில் மானியப் பணத்தைப் பெற முடியும் என்ற கட்டுப்பாட்டையும் மத்திய அரசு நீக்கியுள்ளது.
முதல் கட்டமாக நாடு முழுவதும் 54 மாவட்டங்களில் கடந்த நவம்பர் 15ம் தேதி நேரடியாக மானியத்தை வாடிக்கையாளர்களுக்குத் தரும் திட்டத்தை மறு அறிமுகம் செய்தது அரசு. தற்போது ஜனவரி 1ம் தேதி முதல் இது நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. இருப்பினும் டீலர்களிடமிருந்து மானியத்துடன் கூடிய சிலிண்டர்களை நேரடியாக நுகர்வோர் பெற்றுக் கொள்வதற்கு 2015, மார்ச் 31ம் தேதி வரை அவகாசம் கொடுத்துள்ளது மத்திய அரசு.
ஆனால் அந்த தேதிக்குப் பின்னர் நேரடியாக சிலிண்டர்களை மானிய விலையில் டீலர்களிடமிருந்து பெற முடியாது. மார்க்கெட் விலைப்படிதான் நுகர்வோருக்கு விற்கப்படும்.
அதற்குள் நுகர்வோர் தங்களது மானிய தொகையைப் பெறுவது தொடர்பான கணக்கு விவரத்தை வங்கியில் உரிய விண்ணப்பம் மூலம் தெரிவித்து விட வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் அவர்களுக்கு மானியமே கிடைக்காது.
இந்த பதிவை செய்வதற்கு, ஆதார் கார்டு வைத்திருந்தால் முதலில் ஆதார் கார்டு எண்ணை வங்கியில் தெரிவிக்க வேண்டும். இதற்கு பார்ம் 1 என்ற விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அதேபோல இந்த பார்ம் 1 விண்ணப்பத்தை டீலர்கள் வைக்கும் பெட்டியிலும் கூட போடலாம்.
அடுத்து இந்த ஆதார் கார்டு எண், வாடிக்கையாளர்களின் நுகர்வோர் எண்ணுடன் இணைக்கப்படும். இதை பார்ம் 2 என்ற விண்ணப்பத்தை விநியோகஸ்தரிடமிருந்து பெறலாம் அல்லது 1800-2333-555 என்ற கால் சென்டர் எண்ணைத் தொடர்பு கொண்டும் கூறலாம். மேலும், http:rasf.uiadai.gov.in என்ற இணையதளத்திற்குப் போயும் இதைச் செய்யலாம் அல்லது சிலிண்டர் புக் செய்யப் பயன்படுத்தும் IVRS எண்ணைத் தொடர்பு கொண்டும் தெரிவிக்கலாம்.
இந்த இரு விண்ணப்பங்களையும், http:www.mylpg.in என்ற இணையதளத்திலிருந்து டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
இந்தத் திட்டத்தில் இணைய ஆதார் கார்டு அவசியமில்லை. ஆதார் கார்டு இல்லாதவர்கள், அதற்கான விண்ணப்ப படிவத்தின் நகலை சமர்ப்பித்துப் பதிவு செய்யலாம்.