2019ம் நிதியாண்டில் ஜிடிபி 8 சதவிகிதத்தை தொடும் - பிரணாப் முகர்ஜி
2018-19ம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரமானது நிச்சயமாக 8 சதவிகித்தை தொடும் என்று முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா: வெறும் கொள்கை முடிவுகளோடு நிறுத்தாமல் அவற்றை முழுமையாக செயல்படுத்தினால் வரும் 2018-19ம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரமானது நிச்சயமாக 8 சதவிகித்தை தொடும் என்று முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டான அக்டோபர்-டிசம்பர் பருவத்தில் இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சியடைந்து 7.2 சதவிகித்தை தொட்டுள்ளது என்று மத்திய புள்ளியியல் துறை தகவல் வெளியிட்டுள்ளது. பெரும்பாலான பொருளாதார வல்லுநர்கள் 6.9 சதவிகிதம் முதல் 7 சதவிகிதத்தை தொடும் என்று கணித்திருந்தனர். ஆனால், அனைவரின் கணிப்பையும் முறியடித்து 7.2 சதவிகிதத்தை எட்டியுள்ளது மத்திய அரசுக்கு புதிய உத்வேகத்தை தந்துள்ளது.

இந்நிலையில் கொல்கத்தாவில் நடந்த வர்த்தக சபை (Chamber of Commerce) நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வரும் 2018-19ம் நிதியாண்டிற்குள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது நிச்சயமாக 8 சதவிகிதத்தை தொடும் என்று தான் நம்புவதாக கூறினார்.
நாம் எதிர்பார்க்கும் பொருளாதார வளர்ச்சியை எட்டவேண்டுமென்றால், நாம் முதலில் முன்னுரிமை தரவேண்டியது விவசாயத் துறையாகும். மேலும் விவசாயத்துடன் கிராமப்புற வளர்ச்சி மற்றும் கிராமப்புற உள்கட்டமைப்பு, கிராமப்புற வீட்டுவசதி மற்றும்கிராமப்புற கல்வி, வீட்டுவசதி ஆகியவற்றையும் நாம் கவனத்தில் கொண்டு அவற்றை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 40 சதவிகிதம் பேர் இளைஞர்கள் தான் உள்ளனர், நாம் அவர்களுக்கு மிகக் குறுகிய காலத்திற்குள் பயிற்சி அளித்து சர்வதேச சந்தையில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரவேண்டியது தலையாய கடமையாகும். அப்படி இல்லை என்றால், 2018-19ம் நிதியாண்டில் நாம் எதிர்பார்க்கும் 8 சதவிகிதம் ஜிடிபி வளர்ச்சி என்பது பெரும் சவாலான காரியமாகும் என்று பிரணாப் முகர்ஜி கூறினார்.
நாம் எதிர்பார்க்கும் ஜிடிபி வளர்ச்சியை எட்டவேண்டுமென்றால், வெறும் திட்டங்களையும் கொள்கைகளையும் உருவாக்குவதோடு நில்லாமல், முழு நம்பிக்கையுடன் அவற்றை செயல்படுத்தும்போது குறுக்கிடும் சவால்களையும் எதிர்கொண்டு அவற்றை தீர்க்கக்கூடிய நடவடிக்கைகளையும் நாம் உருவாக்கவேண்டும். இல்லை என்றால் நாம் எதிர்பார்க்கும் பொருளாதார வளர்ச்சியை எட்டுவது கடினமாகும் என்று தெளிவுபடுத்தினார்.












Click it and Unblock the Notifications