15% வரி உயர்வால் தங்கம் விலை எவ்வளவு உயரும்? அதிர்ச்சி கொடுக்கும் கணக்கு!
மத்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி மீதான சுங்க வரியை 15 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதனால் தங்கத்தின் விலை இந்தியாவில் பெரிய அளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய கிழக்கு போர் காரணத்தால் ஏற்பட்டுள்ள அந்நிய செலாவணி பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு தங்கம், வெள்ளி, பிளாட்டினம் மீதான இறக்குமதி வரியை உயர்த்த முடிவு செய்துள்ளது. ஆனால் இது நகை வாங்கும் சாமானிய மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

வரி விதிப்பில் என்ன மாற்றம்?
முன்பு தங்கம் இறக்குமதிக்கு 5 சதவீத அடிப்படை சுங்க வரியும் 1 சதவீத விவசாய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரியும் (AIDC) விதிக்கப்பட்டு வந்தது.
இப்போது அடிப்படை சுங்க வரி 10 சதவீதமாகவும், AIDC 5 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மொத்த இறக்குமதி வரி 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்ந்துள்ளது.
பிளாட்டினம் இறக்குமதிக்கும் இதேபோன்ற மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு தங்கம், வெள்ளி தாது, நாணயங்கள் உள்ளிட்ட அதன் தொடர்புடைய அனைத்து இறக்குமதி பொருட்களுக்கும் பொருந்தும்.
தங்கம் விலை எவ்வளவு உயரும்?
இந்த வரி உயர்வு உடனடியாக தங்கத்தின் சில்லறை விலையை உயர்த்தும். தற்போது 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு சுமார் ரூ.15,475 ஆக உள்ளது. வரி உயர்வுக்குப் பிறகு இந்த விலை இன்னும் அதிகரிக்கும்.
எடுத்துக்காட்டாக, ரூ.1,54,750 என்ற அடிப்படை விலையில் (landed value) முன்பு 6 சதவீத வரி ரூ.9,285 மட்டுமே வசூலிக்கப்பட்டது. இப்போது 15 சதவீத வரி ரூ.23,212 ஆக உயர்ந்துள்ளது. இதனால் வரிக்குப் பிறகான விலை ரூ.1,64,035ல் இருந்து ரூ.1,77,962 ஆக உயர்கிறது. இது ரீடைல் சந்தைக்கு விற்பனைக்காக வரும் விலை மட்டுமே. கிட்டத்தட்ட 13000 ரூபாய் 10 கிராமுக்கு உயர உள்ளது, கிராமுக்கு கணக்கிட்டால் 1300 ரூபாய்.
ரீடைல் விலை இன்னும் உயரும்
இந்த வரி உயர்வு மட்டுமல்ல, இறுதி விலை அதாவது மக்கள் நகை கடையில் இருந்து நகையாக வாங்கும் போது இன்னும் அதிகரிக்கும். நகை கடையில் இருந்து நீங்கள் நகையாக வாங்கும் போது GST வரி, நகை செய்கூலி, வியாபாரிகளின் லாபம் ஆகியவை சேர்ந்து விலையை மேலும் உயர்த்தும்.
எனவே, நுகர்வோருக்கு தங்கம் வாங்கும் போது கூடுதல் செலவை ஏற்படுத்தும். தங்கம் வாங்க திட்டமிட்டுள்ள குடும்பங்கள் இந்த வரி உயர்வை கருத்தில் கொண்டு முடிவு எடுக்க வேண்டும்.
ஏன் இந்த வரி உயர்வு?
மத்திய அரசு இந்த முடிவை மேற்கு ஆசிய போர் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள அந்நிய செலாவணி வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் எடுத்துள்ளது. தங்கம் போன்ற அத்தியாவசியமற்ற இறக்குமதிகளை குறைப்பதன் மூலம் நாட்டின் வெளிப்புற பொருளாதாரத்தை பாதுகாக்க இந்த நடவடிக்கை உதவும் என்று மோடி தலைமையிலான அரசு தீவிரமாக நம்புகிறது. இருப்பினும், இந்த வரி உயர்வு தங்கம் வாங்கும் பொதுமக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்று நுகர்வோர் கூறுகின்றனர்.
இந்த வரி மாற்றம் தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள நகை வாங்கும் மக்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். பொதுமக்கள் தங்கம் வாங்கும் போது தற்போதைய வரி விவரங்களை கவனமாகப் பார்த்து முடிவு எடுக்க வேண்டும். அரசின் இந்த நடவடிக்கை நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க உதவும் என்றாலும், நுகர்வோரின் செலவு அதிகரிப்பது பெரும் நெருக்கடியான நிலை.












Click it and Unblock the Notifications