சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?
சென்னை: இந்தியாவில் தங்கத்திற்கு அதிக அளவு தள்ளுபடி திடீரென வழங்கப்பட்டு வருகிறது. தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்த நிலையில் தங்க விற்பனையில் சரிவு ஏற்பட்டதால் இந்த தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது.
இந்திய உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை, இறக்குமதி வரிகளையும் சேர்த்து கணக்கிடப்படும் அசல் விலையை விட ஒரு கிராமுக்கு 450 ரூபாய்க்கும் மேல் குறைந்து விற்கப்படுகிறது. கடந்த மே 13 அன்று மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி சுங்க வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக, அதாவது இரண்டு மடங்குக்கும் மேலாக உயர்த்தியது.

இந்த அதிரடி வரி உயர்வுக்குப் பிறகு உள்நாட்டுச் சந்தையில் தங்கம் தள்ளுபடி விலைக்கு வந்துள்ளது. மக்கள் அடுத்த ஓராண்டுக்குத் தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனால் தங்கம் வாங்குவது பெருமளவில் குறைந்துள்ளதால், விற்பனையைத் தூண்டுவதற்காக இந்தத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இது குறித்து உலகத் தங்கக் கவுன்சிலின் (WGC) இந்திய ஆராய்ச்சிப் பிரிவுத் தலைவர் கவிதா சாக்கோ ஊடகங்களிடம் கூறுகையில், "உள்நாட்டுத் தங்கத்தின் விலை அதிகாரப்பூர்வ விலையை விடக் கடுமையான தள்ளுபடியில் வர்த்தகம் செய்யப்படுகிறது. வரி உயர்வுக்கு முந்தைய வாரத்தில் ஒரு அவுன்சுக்கு 14 டாலராக இருந்த இந்த விலை வித்தியாசம், தற்போது கிட்டத்தட்ட 150 டாலராக (அதாவது ஒரு கிராமுக்கு ₹462) அதிகரித்துள்ளது" என்றார்.
இருப்புக்களைக் குறைக்கும் வர்த்தகர்கள்
குறைந்த இறக்குமதி வரியில் (6 சதவீதம்) ஏற்கனவே தங்கத்தை இறக்குமதி செய்து வைத்திருந்த மொத்த வியாபாரிகள், சந்தையில் தங்களுக்குப் போதிய வருவாய் கிடைக்க அந்த இருப்புகளைத் தற்போது தள்ளுபடி விலையில் விற்றுத் தீர்த்து வருவதாக கவிதா சாக்கோ குறிப்பிடுகிறார். இது சந்தையில் தங்கத்தின் வரத்தை அதிகரித்துள்ளது.
இந்தியாவிற்குள் தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் போன்ற விலைமதிப்பற்ற உலோகங்கள் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுவதைத் தடுக்கவும், நாட்டின் அந்நியச் செலாவணி வெளியேறுவதைக் கட்டுப்படுத்தவும் மே 13 அன்று அரசு இந்த வரி உயர்வை மேற்கொண்டது. "கடந்த 2019 மற்றும் 2022ஆம் ஆண்டுகளிலும் இது போன்ற இறக்குமதி வரி உயர்வுகள் உள்நாட்டுச் சந்தையில் தள்ளுபடிக்கு வழிவகுத்தன. ஆனால், இந்த முறை வரி உயர்வு மிக அதிகமாக இருப்பதால், அதன் தாக்கமும் மிகவும் கடுமையாகப் பிரதிபலிக்கிறது" என்று அவர் மேலும் விளக்கினார்.
கடந்த வார இறுதியில், மும்பை ஸ்பாட் சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலை 1,58,534 ரூபாயாக முடிவடைந்தது. தங்கத்தின் தேவையை அதிகரிக்க, நகைக்கடைக்காரர்கள் செய்கூலி மற்றும் சேதாரத்தைக் குறைத்து அதன் பலன்களை நுகர்வோருக்கு நேரடியாக வழங்கி வருகின்றன.
சந்தையில் தற்போது தங்கம் வாங்குவதற்கு ஆட்களே இல்லை, வர்த்தகம் முற்றிலும் முடங்கியுள்ளது. பிரதமரின் வேண்டுகோள் தங்கம் விற்பனையை மிகக் கடுமையாகப் பாதித்துள்ளது.
முக்கியமாக பல சில்லறை வியாபாரிகள் தங்கம் வாங்குவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். பெரிய நகைக்கடை நிறுவனங்களில், இந்த அறிவிப்பு வெளியானவுடன் மக்கள் அவசரமாகத் தங்கம் வாங்க முண்டியடித்தனர். மேலும் கட்டுப்பாடுகள் வரலாம் என்ற அச்சமே இதற்குக் காரணம். வரும் நாட்களில் தங்களுக்கு விற்பனை குறையும் என்று அவர்கள் எதிர்பார்த்தாலும், ஏற்கனவே உள்ள இருப்பு மற்றும் திருமணக் காலத் தேவைகள் காரணமாகப் பெரிய நிறுவனங்கள் இந்த நிலைமையைத் தாக்குப் பிடித்துவிடும் என்று நம்புகின்றன.












Click it and Unblock the Notifications