பட்டையை கிளப்பும் தங்கம், வெள்ளி ஈடிஎப்.. ஒரே நாளில் மெகா லாபம்.. காசு போட்டவர்களுக்கு பணமழை!
இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி வரியை மத்திய அரசு 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தியுள்ள நிலையில், அதன் தாக்கம் பங்கு சந்தையிலும் முதலீட்டு துறையிலும் உடனடியாக எதிரொலித்துள்ளது.
வெளிநாட்டு நாணய கையிருப்பின் மீதான பாதிப்பை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த வரி உயர்வால் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் கடுமையாக உயர்ந்ததுடன், அதனை அடிப்படையாகக் கொண்ட ETF முதலீட்டு திட்டங்களும் அதிகப்படியான உயர்வை பதிவு செய்துள்ளன.

தங்கம், வெள்ளி விலையில் அதிரடி உயர்வு
இறக்குமதி வரி உயர்வு அறிவிக்கப்பட்டதும், உள்நாட்டு சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் திடீர் ஏற்றத்தை சந்தித்தன. 10 கிராம் தங்க ஃபியூச்சர்ஸ் விலை 7.2 சதவீதம் உயர்ந்து ரூ.1,64,497 ஆக உயர்ந்தது. அதேபோல், ஒரு கிலோ வெள்ளியின் ஃபியூச்சர்ஸ் விலை 8 சதவீதம் உயர்ந்து ரூ.3,01,429 ஆக பதிவானது.
இறக்குமதி வரி அதிகரிப்பால் வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வரும் தங்கம் மற்றும் வெள்ளியின் அடிப்படை செலவு அதிகரிக்கும். இதனால் உள்நாட்டு சந்தை விலைகள் தானாக உயர்கின்றன. இதன் நேரடி தாக்கம் நகை விற்பனை மற்றும் முதலீட்டு சந்தைகளில் பிரதிபலித்துள்ளது.
தங்க ETF, வெள்ளி ETF திட்டங்கள்
கடந்த சில ஆண்டுகளாக மக்கள் நேரடியாக தங்கம் வாங்குவதற்குப் பதிலாக ETF திட்டங்களில் முதலீடு செய்யும் போக்கு அதிகரித்துள்ள நிலையில், இன்றைய வரி உயர்வு அறிவிப்பு தங்க ஈடிஎப், வெள்ளி ஈடிஎப் விலைகளையும் அதிகரித்துள்ளது.
இதன் விளைவாக Nippon India கோல்டு ஈடிஎப், Tata கோல்டு ஈடிஎப், HDFC கோல்டு ஈடிஎப் மற்றும் ICICI Prudential கோல்டு ஈடிஎப் போன்ற திட்டங்கள் 4 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை உயர்ந்தன. அதேபோல் Tata வெள்ளி ஈடிஎப், Nippon India வெள்ளி ஈடிஎப் மற்றும் HDFC வெள்ளி ஈடிஎப் திட்டங்களும் 4% முதல் 6% வரை ஏற்றம் கண்டன.
ETF-களின் சொத்து மதிப்பு தங்கம் மற்றும் வெள்ளி விலைகளுடன் நேரடியாக தொடர்புடையதால், உலோக விலை உயர்வு ETF நிதிகளின் மொத்த சொத்து மதிப்பையும் அதிகரிக்கிறது.
நகைக்கடைகள் பங்குகள் சரிவு
மற்றொரு பக்கம், தங்க நகை விற்பனை நிறுவனங்களின் பங்குகள் அழுத்தத்தை சந்தித்தன. டைட்டன் கம்பெனி, கல்யாண் ஜூவல்லர்ஸ், மற்றும் தங்கமயில் ஜூவல்லர்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் 1.5 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை சரிந்தன.
தங்கத்தின் விலை அதிகரிப்பதால் நகை வாங்கும் மக்கள் எண்ணிக்கை குறையக்கூடும் என்ற அச்சம் முதலீட்டாளர்களிடம் உருவாகியுள்ளது. குறிப்பாக திருமண காலம் மற்றும் விழாக்காலங்களில் கூட விற்பனை மந்தமாகும் அபாயம் இருப்பதாக சந்தை வட்டாரங்கள் கருதுகின்றன. இதனால் தங்க நகை கடை நிறுவனங்களின் பங்குகள் பெரிய அளவில் குறைந்துள்ளது.
தங்க அடமான நிறுவனங்களுக்கு லாப வாய்ப்பு
ஆனால், தங்கத்தை அடமானமாக வைத்து கடன் வழங்கும் நிதி நிறுவனங்களுக்கு இந்த விலை உயர்வு சாதகமானதாக மாறியுள்ளது. மணப்புரம் கோல்டு, முத்தூட் பைனான்ஸ் மற்றும் IIFL Finance போன்ற நிறுவனங்களின் பங்குகள் 8 சதவீதம் வரை உயர்ந்தன.
இந்த நிறுவனங்கள் வழங்கும் கடன்களின் மதிப்பு, அடமானமாக வைக்கப்படும் தங்கத்தின் சந்தை விலையை அடிப்படையாகக் கொண்டது. தற்போது தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதால், அதே அளவு தங்கத்திற்கு அதிக மதிப்பில் கடன் வழங்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதேபோல் கொடுத்த கடனுக்கும், தங்க இருப்பு மதிப்புக்கும் இடைவெளி அதிகமாகியிருக்கும் காரணத்தால் கூடுதல் பலம் கிடைத்துள்ளது. இதனால் இந்த நிறுவனங்களின் நிர்வகிக்கும் சொத்து மதிப்பும் தானாக உயர்கிறது.
இந்திய பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம்
இறக்குமதி வரி உயர்வு காரணமாக தங்க இறக்குமதி குறையக்கூடும். இது இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறையையும், வெளிநாட்டு நாணய செலவையும் குறைக்க உதவலாம். அதேசமயம், தங்கத்தின் விலை அதிகரிப்பால் நகை வாங்கும் தேவை குறைய வாய்ப்பு இருப்பதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
Bonanza நிறுவனத்தின் மூத்த கமாடிட்டி ஆராய்ச்சி நிபுணர் நிர்பேந்திர யாதவ் கூறுகையில், அதிக சுங்கவரி காரணமாக அதிகாரப்பூர்வ இறக்குமதி குறைந்தாலும், தங்க கடத்தல் அபாயம் மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாக எச்சரித்துள்ளார்.















Click it and Unblock the Notifications