ஆரம்பமே அபாரம்- ஜிஎஸ்டி ஜூலை மாத வசூல் ரூ. 92,000 கோடி!
ஜிஎஸ்டியின் ஜூலை மாதத்தில் வரி வசூலானது 92000 கோடி ரூபாயை தாண்டி சாதனை படைத்துள்ளது.
டெல்லி: சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டியின் ஜூலை மாதத்தில் வரி வசூலானது 92000 கோடி ரூபாயை தாண்டி சாதனை படைத்துள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பான ஜிஎஸ்டி கடந்த ஜூலை மாதம் முதல் அமல்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் வர்த்தகர்களும் தொழில்துறையினரும் கண்ணைக் கட்டி காட்டில் விட்டதுபோல ஜிஎஸ்டிஎன் அமல்படுத்தப்பட்ட புதிதில் சற்று குழப்பமாக இருந்தாலும், அனைவரும் விரைவில் புரிந்துகொண்டு தங்களின் வர்த்தக நடவடிக்கைகளை அதற்கேற்ப மாற்றிக்கொண்டனர்.
அதுபோலவே, மத்திய அரசும் வர்த்தகர்களின் சிரமங்களை புரிந்துகொண்டு அவர்களை ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதத்திற்கான கொள்முதல், விற்பனை, உள்ளீட்டு வரிப்பயன்பாடு(Input Tax Credit) மற்றும் நிகர வரி போன்றவற்றை ஜிஎஸ்டிஎன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கு செப்டம்பர் 20ம் தேதிவரை கால அவகாசம் அளித்துள்ளது.

ஜிஎஸ்டிஎன் இணையதளம்
அதே சமயத்தில் ஜூலை மாதத்திற்கான செலுத்தவேண்டிய நிகர வரியை (Net Tax Liability) ஜிஎஸ்டிஆர்-3பி என்னும் புதிய படிவத்தின் மூலமாக ஜிஎஸ்டிஎன் இணையதளத்தில் கடந்த ஆகஸ்டு 20ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்து வரியையும் செலுத்தவேண்டும் என்று புதிய அறிவிப்பை ஜிஎஸ்டி ஆணையம் வெளியிட்டது.

ஜிஎஸ்டிஆர்-3பி படிவம்
இதனால் சற்று குழப்பமடைந்த தொழில் துறையினரும் வர்த்தகர்களும், நிலைமையை உணர்ந்து கொண்டு தங்களின் கொள்முதல், விற்பனை, உள்ளீட்டு வரிப் பயன்பாடு மற்றும் செலுத்தவேண்டிய நிகர வரியையும் ஜிஎஸ்டிஆர்-3பி படிவத்தின் மூலம் பதிவேற்றம் செய்தனர். ஆனாலும் அனைவரும் ஒரே சமயத்தில் பதிவேற்றம் செய்ய முயன்றதால் ஜிஎஸ்டிஎன் இணையதளம் முடங்கியது.

ஆகஸ்ட் 25 காலக்கெடு
மேலும் ஜிஎஸ்டிஎன் ஆணையமும் ஜிஎஸ்டிஎன் இணையதளத்தை சற்று மேம்படுத்த வேண்டியிருந்ததால் கடந்த ஆகஸ்டு 20ம் தேதி சற்று முடங்கியது. இந்த இருவேறு காரணங்களினால், ஜிஎஸ்டிஎன் ஆணையம் ஜூலை மாதத்திற்கான வரியை ஆகஸ்டு 25ம் தேதி வரை செலுத்த கால அவகாசம் அளித்தது.
|
ரூ. 92,000 கோடி வசூல்
இதனை பயன்படுத்தி பெரும்பாலான வர்த்தகர்களும் தொழில்துறையினரும் தங்களின் ஜூலை மாதத்திற்கான வரியை செலுத்தத் தொடங்கினர். இது வரையிலும் சுமார் 92000 கோடி ரூபாய் வரை வசூலானதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நேற்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

ஜிஎஸ்டிஎன்னில் பதிவு
இந்த வரி வசூலானது ஜிஎஸ்டிஎன்னில் பதிவு செய்த மொத்த வர்த்தகர்கள் மற்றும் தொழில்துறையினரில் சுமார் 64.42 சதவிகிதமாகும். இதுவரையிலும் சுமார் 59.57 லட்சம் தொழில்துறையினரும் வர்த்தகர்களும் ஜிஎஸ்டிஎன்னில் பதிவு செய்துள்ளனர். அவர்களில் சுமார் 38.38 லட்சம் தொழில்துறையினரும் வர்த்தகர்களும் ஜூலை மாதத்திற்கான வரியாக சுமார் 64.42 சதவிகிமான 92,283 கோடி ரூபாயை செலுத்தி உள்ளனர்.

வரி வசூல் எவ்வளவு
இவற்றில் சுமார் 14.894 கோடி ரூபாய் மத்திய வரி வருவாய் (CGST) மற்றம் மாநில வரி வருவாய் (SGST) 22, 722 கோடி ரூபாய் ஆகும். அதுபோல ஒருங்கிணைந்த வரி வருவாய் (IGST) வசூலானது 47, 469 கோடி ரூபாய் ஆகும்.
மேலும், ஆடம்பர பொருட்களின் மீது விதிக்கப்படும் வரி மற்றும் இழப்பீடாக வசூலான தொகை சுமார் 7,198 கோடி ரூபாய் ஆகும்.

கடந்த ஆண்டு வரி வசூல்
இதில் மாநிலங்களுக்கு தரப்படிவேண்டிய வருவாய் இழப்பாக, கடந்த 2015-16ம் ஆண்டு வரி வருவாயான சுமார் 14 சதவிகித அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அருண் ஜெட்லி தெரிவித்தார். கடந்த நிதி ஆண்டின் ஜூலை மாதத்தில் சுங்க வரியாக சுமார் 31,782 கோடி ரூபாயும் சேவை வரியாக சுமார் 19,600 கோடி ரூபாயும் வசூலானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications