ஜிஎஸ்டி: ஒரே குழப்பம்... ரிட்டன் தாக்கலில் 34000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு?
மாதாந்திர ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கலில் சுமார் 34000 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு நடந்திருக்கலாம் என்று ஜிஎஸ்டி ஆணையம் கலக்கத்தில் உள்ளது.
டெல்லி: ஜூலை முதல் டிசம்பர் வரையிலனெ காலகட்டத்தில் நடைபெற்ற மாதாந்திர ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கலில் சுமார் 34000 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு நடந்திருக்கலாம் என்று ஜிஎஸ்டி ஆணையம் கலக்கத்தில் உள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை முதல் ஜிஎஸ்டி வரிவிதிப்பு அமலுக்கு வந்ததில் இருந்து ஐம்பது சதவிகித்திற்கும் மேற்பட்ட வர்த்தகர்களும் தொழில் துறையினரும் தாங்களாகவே மாதந்திர கொள்முதல், விற்பனை மற்றும் நிகர வரி ஆகியவற்றை முறையே ஜிஎஸ்டிஆர்-1, ஜிஎஸ்டிஆர்-2, மற்றும் ஜிஎஸ்டிஆர் 3பி ஆகிய படிவங்களை பூர்த்தி செய்து ஜிஎஸ்டி இணையதளத்தில் பதிவேற்றம் செய்துவருகின்றனர்.
ஜிஎஸ்டி படிவங்களைப் பற்றி முழுமையாக புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கும் மீதிப்பேர், தங்களின் கொள்முதல், விற்பனை மற்றும் நிகர வரி ஆகியவற்றை தங்களின் கணக்கு ஆலோசகர்களின் மூலமும், தங்களின் தணிக்கையாளர்களின் மூலமாகவும் ஜிஎஸ்டிஎன் இணையதளத்தில் செலுத்தி வருகின்றனர். அவ்வாறு செலுத்தும்போது உள்ளீட்டு வரிப்பயன்பாடு மற்றும் இறக்குமதிக்கான உள்ளீட்டு பயன்பாடு போன்றவற்றை கழித்துவிட்டு நிகர வரியை செலுத்தி வருகின்றனர்.
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் அனேக வர்த்தகர்களும் தொழில் துறையினரும், ஒருவித நிர்பந்தத்தின் காரணமாகவே அவசர கோலத்தில் ஜிஎஸ்டிஆர்-1, ஜிஎஸ்டிஆர்-2 மற்றும் ஜிஎஸ்டிஆர்-2பி படிவங்களை இணையதளத்தில் தாக்கல் செய்துவருகின்றனர்.
இன்னும் சில வர்த்தகர்களும், வர்த்தகத்துடன் சேவைத் துறைகளையும் மேற்கொள்ளும் சில தொழில்துறையினரும் இன்றுவரையில் ஜூலை முதல் ஜனவரி வரையில் மாதாந்திர ஜிஎஸ்டிஆர்-1, ஜிஎஸ்டிஆர்-2 மற்றும் ஜிஎஸ்டிஆர்-3பி படிவங்களையும் நிகர வரியையும் தாக்கல் செய்யாமலேயே காலாம் கடத்தி வருகின்றனர். இதனால், பொருட்களை விற்பனை செய்தவர்கள் உள்ளீட்டு வரியை பயன்படுத்த முடியாமல் அவஸ்தைப்பட்டு வருகின்றனர்.
ஜஎஸ்டி வரிவிதிப்பில் இப்படி குழப்பங்கள் இன்னமும் தீராமல் இருக்கும்போது, ஜிஎஸ்டி வரி வசூலை முழுமையாக கணிப்பது சிரமமாகும். ஒரு பொருளை விற்பனை செய்தவரும், அந்தப் பொருளை வாங்கியவரும் அதற்கான படிவங்களை முழுமையாக ஜிஎஸ்டி இணையதளத்தில் பதிவேற்றம் செய்தால் மட்டுமே, செலுத்தவேண்டிய நிகர வரிவிதிப்பைப் பற்றி அறியமுடியும். விரிவாகச் சொல்வதென்றால் பொருளை விற்பனை செய்தவர் அதற்கான வரியை செலுத்தும்போது தான் வாங்கிய பொருளுக்காக செலுத்திய உள்ளீட்டு வரிப்பயன்பாட்டை (Input Tax Credit) கழித்துவிட்டு நிகர வரியை மட்டுமெ செலுத்தவேண்டும். இது ஒரு தொடர் சுழற்சியாகும்.
கடந்த வாரம் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப்பட்டது. அப்போது ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட மாதாந்திர ஜிஎஸ்டி ஆர் படிவங்களின் படி சுமார் 34000 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறது.
ஜிஎஸ்டி வரி செலுத்துவதில் வரி ஏய்ப்பு ஏதும் நடந்திருக்கிறதா என்பதைப்பற்றி அறிந்துகொள்ள ஆரம்பத்தில் இருந்து டிசம்பர் வரையிலான அனைத்து ஜிஎஸ்டிஆர் படிவங்களை ஆராய்ந்துவருகிறோம். இதில் ஜிஎஸ்டிஆர்-1 (Sales) படிவத்திற்கும் நிகர வரி செலுத்துவதற்கான ஜிஎஸ்டிஆர்-3பி படிவத்திற்கும் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாமல் இருக்கின்றது. இதன்மூலம் சுமார் 34000 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு நடந்திருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அதுபோலவே, இறக்குமதி செய்ததிலும் ஏதேனும் வரி ஏய்ப்பு நடந்திருக்கிறதா என்பதைப் பற்றியும் நுணுக்கமாக ஆராய்ந்துவருகிறோம். அதாவது பொருட்களை இறக்குமதி செய்யும்போது இறக்குமதிக்கான சுங்கவரி செலுத்தும்போது, சுங்கவரியை குறைத்து காண்பிப்பதற்காக பொருட்களின் மதிப்பை குறைத்து மதிப்பிட்டு இருந்தாலும், அந்த வகையிலும் வரி ஏய்ப்பு நடந்திருக்க வாய்ப்புள்ளது. ஆகவே வரி ஏய்ப்பு நடந்துள்ளதா என்பதை ஆராய சம்பந்தப்பட்ட வர்த்தகர்கள் மற்றும் தொழில்துறையினருக்கு விளக்கம் கேட்டு உரிய நோட்டீஸ் அனுப்படும் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.