சிறுமியை காணவில்லை என பெற்றோருடன் சேர்ந்து தேடிய குற்றவாளி.. கோவை சம்பவத்தில் ஷாக் தகவல்!
கோவை: கோவையில் 10 வயது சிறுமியை சீரழித்த இளைஞர், சிறுமி காணாமல் போனதாக பெற்றோர் தேடியபோது அவரும் அவர்களுடன் சேர்ந்து தேடுவது போல நடித்துள்ளார். இது அப்பகுதியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், சூலூர் அருகே வசித்த தம்பதிக்கு, 10 வயதில் மகள் உள்ளார். வியாழக்கிழமை இரவு, அருகில் உள்ள கடைக்கு சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கடைக்கு சென்று விசாரித்தனர். ஒரு இளைஞர், சிறுமியை பைக்கில் ஏற்றி சென்றதாக கடைக்காரர் கூறியுள்ளார்.

சிறுமியை எங்கே தேடியும் கிடைக்காததால், பெற்றோர் சூலுார் போலீசில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இந்நிலையில் கண்ணம்பாளையம் குளக்கரை பகுதியில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.
தகவல் அறிந்த மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதி, கோவை மாவட்ட எஸ்.பி பவன்குமார் ரெட்டி மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை.
இந்த சம்பவத்தில் கண்காணிப்பு கேமரா பதிவுகளின்படி, கார்த்தி என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது நண்பர் மோகன்ராஜும் கைது செய்யப்பட்டார். சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே ஆத்திரம் அடைந்த சிறுமியின் உறவினர்கள் சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுமியின் உடற்கூராய்வு முடிவடைந்து உடல், அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்ததும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
10 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. தென்னந்தோப்பில் வைத்து சிறுமி கொலை செய்யப்பட்டது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. கைது செய்யப்பட்ட கார்த்தி, சிறுமியின் குடும்பத்தினர் வசிக்கும் அதே காம்பவுண்டில் வாடகைக்கு குடியிருந்தவன் என்று தெரியவந்துள்ளது.
ஒரு வாரத்துக்கு முன் வீட்டை காலி செய்து விட்டு அந்த நபர் வேறு வீட்டுக்கு குடி பெயர்ந்து விட்டார். இதனால் சிறுமியுடன் அந்த கார்த்திக்கு அறிமுகம் இருந்துள்ளது. அதனால் தான் அவர் அழைத்தவுடன் பைக்கில் சென்றுள்ளார். இப்படி அழைத்துச்சென்ற சிறுமியை அவன் கொடூரமாக கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது தான் தங்கள் மகளை அழைத்துச் சென்றது யார் என பெற்றோருக்கு தெரியவந்தது. "எங்கள் மகளை அழைத்துச் சென்றவர் பக்கத்து வீட்டில் வசித்து அண்மையில் காலி செய்த கார்த்தி. மிட்டாய் வாங்கி கொடுத்து மகளை அழைத்து சென்றுள்ளனர். தெரிந்தவர் என்பதால் அவருடன் தனது மகள் சென்றுள்ளார்.
மாலை 5 மணிக்கு கடைக்கு செல்வதாக கூறிவிட்டு எங்கள்மகள் சென்றாள். கைது செய்யப்பட்டவரே எங்களுடன் சேர்ந்து மகளை தேடினார். கடைக்குச் சென்ற மகள் திரும்பி வராததால் தேடினோம்" என சிறுமியின் தாய் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications