மதுரை மணமணக்குது.. மீனாட்சி சுந்தரேஸ்வரர் வைகாசி வசந்த உற்சவ விழா கோலாகலம்! பக்தர்கள் பரவசம்!
மதுரை: மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் வைகாசி வசந்த உற்சவ விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி புதுமண்டபத்தில் எழுந்தருளிய மீனாட்சி சுந்தரேஸ்வரரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வருடம் முழுவதும் திருவிழா நடைபெறும் உலகபுகழ் பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் நடைபெறும் சிறப்பு பெற்ற விழாக்களில் ஒன்றான வைகாசி வசந்த உற்சவ விழா 21ம் தேதி தொடங்கி வரும் 30 -ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

விழாவையொட்டி அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் சகல அலங்காரங்கத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் திருக்கோயிலிலிருந்து பக்தர்கள் படை சூழ புறப்பாடாகி கோயில் எதிரில் அமையப்பெற்ற புது மண்டபத்தில் எழுந்தருளினார்.
அங்கு பத்தியுலாத்துதல் மற்றும் தீபாராதனை நடைபெற்றது தொடர்ந்து புதுமண்டபத்தில் இருந்து புறப்பட்டு நான்கு சித்திரை வீதி சுற்றி திருக்கோயிலில் எருந்தருளினார். விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து 10-ம் திருநாளில் சுவாமிகள் காலையில் புதுமண்டபம் எழுந்தருளி பகலில் தங்கி வழக்கம் போல் மாலையில் அபிஷேகம் தீபாராதனை முடிந்து சித்திரை வீதி சுற்றி கோயில் வந்து சேரும் நிகழ்வு நடைபெறுகிறது.
மேலும், வைகாசி வசந்த உற்சவம் திருவிழா துவங்கி நடைபெற்று வரும் நிலையில் வரும் 02-ம் தேதி வரை திருக்கோயில் சார்பாகவோ உபயதாரர்கள் சார்பாகவோ தங்கரத உலா, உபய திருக் கல்யாணம் ஆகிய சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதில்லை என திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வைகாசி வசந்த உற்சவ விழாவை முன்னிட்டு புதுமண்டபத்தில் எழுந்தருளிய மீனாட்சி சுந்தரேஸ்வரரை மதுரையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.












Click it and Unblock the Notifications