அன்னையர் தினம் 2025: தாய்மார்களுக்கான பெஸ்ட் சேமிப்பு.. மொத்தம் 4 விஷயம்தான்! ஆனா எல்லாமே முக்கியம்
சென்னை: வரும் மே 11ம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒரு வீட்டை நிர்வகிப்பது முதல் வேலை செல்வது, குழந்தைகளை வளர்த்தெடுப்பது என்று தாய்மார்கள் செய்யும் பணி அளப்பரியது. அப்படி ஓடி ஓடி வேலை செய்தாலும் பல தாய்மார்களுக்குச் சேமிப்பின் முக்கியத்துவம் குறித்தும் அதை எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்பது குறித்தும் தெரிவதில்லை. அது குறித்து நாம் பார்க்கலாம்.
அன்னையர் தினம் வரும் மே 11ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒட்டுமொத்தமாக வீட்டைத் தனியாளாக நிர்வகிக்கும் தாய் தனக்குக் கிடைக்கும் சின்ன சின்ன தொகையையும் வீட்டிலேயே சேமித்து வைத்திருப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால், அதுபோல வீட்டில் சேமித்து வைத்தால் பணவீக்கத்தால் கஷ்டப்பட்டுச் சேமித்தும் அதன் பலன் கிடைக்காது.

எனவே, தாய்மார்கள் சேமிப்பைத் தொடங்க என்ன செய்ய வேண்டும்.. பணத்தை எப்படிச் சேமிக்க வேண்டும்.. ரிஸ்க் இல்லாமல் எப்படி முதலீடு செய்யலாம் என்பது குறித்து நாம் எளிமையாகப் பார்க்கலாம்.
முதல் படி- சேமிப்பு கணக்கு
முதலில் சேமிப்பு கணக்கு.. காலை முதல் இரவு வரை ஓடி ஓடி வேலை செய்தாலும் பல தாய்மார்கள் தனியாகச் சேமிப்பு கணக்கைக் கூட வைத்திருப்பதில்லை. அப்படியே கணக்கு இருந்தாலும் அது பெயரளவிலேயே இருக்கும். அதைப் பயன்படுத்துவது கணவராகவே இருக்கும். ஆனால், அப்படி இருக்கக்கூடாது. சேமிப்பு கணக்கில் இருந்து தாய்மார்கள் தங்கள் சேமிப்பைத் தொடங்கலாம். இதன் மூலம் அவர்களுக்கு பல்வேறு பலன்கள் கிடைக்கும்.
சேமிப்பு கணக்கில் நாம் நினைத்த நேரத்தில் பணத்தைப் போடலாம், பணத்தை எடுக்கலாம். வட்டி குறைவு என்றாலும் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை வட்டி கிடைக்கும். டெபிட் கார்டு வசதி இருப்பதால் ஏடிஎம் மெஷின்கள், கடைகளில் ஸ்வைப் மெஷின்கள், ஆன்லைன் பரிவர்த்தனை என நமக்குப் பல வழிகளில் உதவும். தாய்மார்கள் தனியாகச் சேமிப்பு கணக்கை வைத்திருப்பது என்பது சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பது மட்டுமின்றி நிதி சுதந்திரத்தின் முதல் மற்றும் முக்கிய படியாக இருக்கிறது.
இரண்டாம் படி
அடுத்து நிரந்தர வைப்புத் தொகை எனப்படும் பிக்சட் டெபாசிட். சேமிப்பு கணக்கிற்குப் பிறகு தாய்மார்கள் பிக்சட் டெபாசிட்டை ஆரம்பிக்கலாம். ஓரளவுக்குக் கணிசமாகப் பணத்தைச் சேமித்து வைத்திருந்தால் அதை எடுத்து பிக்சட் டெபாசிட்டில் போட்டுக் கொள்ளலாம். பல்வேறு அரசு வங்கிகளில் 7% முதல் 9% வரை பிக்சட் டெபாசிட்டில் வட்டி கிடைக்கும். மேலும், ரிஸ்க் இல்லை தாராளமாக இதில் முதலீடு செய்யலாம். சில வங்கிகளில் பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்குக் கூடுதல் வட்டியும் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல தபால் நிலையங்களில் உள்ள சேமிப்புகளையும் கூட நாம் பயன்படுத்தலாம்.
முக்கியமான படி
இந்த இரண்டையும் முடித்தவர்கள் அடுத்துத் தங்கத்தை வாங்கலாம். தங்கத்தின் மதிப்பு நீண்ட கால நோக்கில் எப்போதுமே குறையாது. சிறுக சிறுக தங்கத்தை வாங்கி வைத்தால் அதுவே பெரிய சேமிப்பாக இருக்கும். இப்போது தங்கம் விலை ஒரு கிராம் ரூ.8200 என்ற ரேஞ்சில் இருக்கும சூழலில்.. அவ்வளவு செலவு செய்து அவ்வப்போது வாங்க முடியாதே என நீங்கள் சொல்லலாம்.
அதற்கும் ஒரு வழி இருக்கிறது. அதுதான் கோல்ட் இடிஎப். அதாவது பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள கோல்ட் இடிஎப்களை ரூ.100க்கு கீழ் இருந்தே வாங்கலாம். தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தைப் பொறுத்தே இதன் மதிப்பும் இருக்கும். சின்ன தொகையைக் கூட இதில் நாம் போடலாம் என்பதால் தொடர்ந்து இதில் சேமித்தால் தாய்மார்களுக்கு அதுவே ஒரு பெரிய சேமிப்பாக இருக்கும்.
ஆனந்த் சீனிவாசன் சொல்வதும் அதையே தான்
பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் கூட இதையே தான் குறிப்பிடுகிறார். பெண்களுக்கான முதலீடு தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு அவர் பேசுகையில், "பெண்கள் கோல்ட் பீஸ் வாங்கலாம். ஒரு நாளைக்கு ரூ.150க்கு வாங்குங்கள். அதைச் செய்வதில் தப்பே இல்லை. இதைத் தொடர்ந்து செய்து வாங்க. 10 ஆண்டுகளில் நீங்கள் எவ்வளவு தங்கம் சேர்த்து இருக்கிறீர்கள் என்பதைப் பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள்" என்றே கூறியிருந்தார்.
இவை எல்லாம் தான் அடிப்படை. இதைச் சரியாகச் செய்வது நிதி சுதந்திரத்திற்கான தொடக்கமாக இருக்கும். இதற்குப் பிறகு மியூட்டுவல் பண்ட், பிபிஎஃப், என்பிஎஸ் ஆகியவற்றிலும் கூட முதலீடு செய்யலாம். அதேபோல இது குறித்து நிறையப் படித்துக் கொண்டால் ஷேர் மார்கெட்டில் பங்குகளையும் கூட தாய்மார்கள் வாங்கலாம். ஏனென்றால் நீண்ட கால நோக்கில் ஷேர் மார்கெட் தரும் லாபம் வேறு எதிலும் கிடைக்காது.
ரிஸ்க் அதிகம் வெகுமதியும் அதிகம்
அதேநேரம் ஷேர் மார்கெட் ரிஸ்க் மிக மிக அதிகம். எனவே, கவனமாக அதில் முதலீடு செய்ய வேண்டும். மேலும், ஒவ்வொரு பங்கை வாங்கும் முன்பு அந்த நிறுவனம் குறித்து உரிய ரிசர்ச் செய்தே வாங்க வேண்டும். தப்பித் தவறியும் கூட கடன் வாங்கி முதலீடு செய்யக்கூடாது. தேவையில்லாத காசை கொஞ்சம் கொஞ்சமாக அதில் முதலீடு செய்து வந்தாலே அது நல்ல லாபத்தைக் கொடுக்கும்.
இதுபோல சின்ன சின்ன முதலீடுகளைச் சரியாகச் செய்தாலே போதும் வீட்டில் உள்ள தாய்மார்கள் எளிதாக நிதி சுதந்திரம் அடையலாம். ஒரு பெண் சேமித்து வைப்பது குடும்பத்திற்குக் கஷ்ட காலத்தில் பயன்படும். எனவே, பெண்கள் சேமிப்பு என்பது அவர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் நன்மையையே தரும்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications