ரூ. 5 கோடி சேர்ப்பது கூட ரொம்ப ஈஸி.. 2கே கிட்ஸுக்கு ஆனந்த் சீனிவாசன் கொடுத்த டிப்ஸ்
சென்னை: சீக்கிரம் பணக்காரன் ஆக வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். ஆனால், அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பது பலருக்கும் தெரியாது. இதற்கிடையே இளைஞர்கள், அதிலும் குறிப்பாக 2கே கிட்ஸ் எப்படி ஈஸியாக பணத்தைச் சேமிக்க முடியும்.. இதற்கு நாம் பின்பற்ற வேண்டிய ஒரே விதி என்ன என்பது தொடர்பாகப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
கோடீஸ்வரன் ஆக வேண்டும் என்ற விருப்பம் நம்மில் பலருக்கும் இருக்கும். பணத்தைச் சேமித்து, அதைச் சரியாக முதலீடு செய்தால் மட்டுமே கோடீஸ்வரன் ஆக முடியும்.

பணத்தைச் சேமிப்பது எப்படி:
ஆனால், இதை எப்படித் தொடங்குவது, எப்படிச் செய்வது என்பது குறித்து பலருக்கும் தெரியாது. குறிப்பாக இளைஞர்களுக்கு இது குறித்து பெரியளவில் ஐடியா இருக்காது. இதற்கிடையே ஈஸியாக எப்படிப் பணத்தைச் சேமிக்கலாம் என்பது குறித்து விளக்கியுள்ள பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன், இதற்கு நாம் எந்த ரூல்ஸை பின்பற்ற வேண்டும் என்பது குறித்தும் விளக்கியுள்ளார்.
2கே கிட்ஸ் நோட் பண்ணுங்க:
இது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் பக்கத்தில், "வருமானம் இல்லை எனச் சொல்லக்கூடாது. எதாவது ஒரு குறைந்தபட்ச தொகையில் இருந்து சேமிப்பைத் தொடங்க வேண்டும். Gen z (1990கள் பிற்பகுதி முதல் 2010 காலகட்டத்தில் பிறந்தோர்) காலகட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு இப்போது சுமார் 25 வயதாக இருக்கும். அவர்கள் 80 வயது வரை இருப்பார்கள்.
இப்போது 25 வயது முதல் அவர்கள் பணத்தைச் சேமித்துச் சரியாக முதலீடு செய்ய தொடங்கினால்.. 38, 39 வயதில் அவர்களிடம் ஒரு கோடி ரூபாய் இருக்கும்.. 50ஆவது வயதில் சுமாராக 5 கோடி ரூபாய் இருக்கும். முதல் ஒரு கோடியைச் சேர்ப்பது மட்டுமே கஷ்டம். முதல் ஒரு கோடி ரூபாயைச் சேர்க்க 14 ஆண்டுகள் ஆகும். அதேநேரம் ஒரு கோடி ரூபாயை 2 கோடி ரூபாயாக மாற்ற 6 ஆண்டுகள் மட்டுமே ஆகும். ரூ.2 கோடி சேமிப்பை ரூ.4 கோடியாக உயர்த்த 4 வருடம் மட்டுமே ஆகும்.
ரூ.5 கோடி கூட ஈஸி:
எனவே, இப்போது உங்களுக்கு 25 வயது என்றால் இப்போதில் இருந்து நீங்கள் பணத்தைச் சேமித்து 39 வயதில் ஒரு கோடி ரூபாயைச் சேமித்து இருந்தால்.. 45 வயதில் ரூ.2 கோடி ரூபாயும், 52 வயதில் ரூ.4 கோடி ரூபாயும் இருக்கும். இன்றில் இருந்து 25 வருடம் கழித்து உங்களிடம் 4 கோடி ரூபாய் இருக்கிறது என்றால் உண்மையிலேயே அது பெரிய தொகை தான்.
இதில் இன்னொரு விஷயமும் நாம் முயன்று பார்க்கலாம். அதாவது மாதம் ரூ.8000 சேமிக்கச் செய்ய முடிந்தால் 35 ஆண்டுகளில் அது ரூ.5 கோடியாக இருக்கும். அதேநேரம் நாம் இப்போது ரூ.8000ல் இருந்து தொடங்குகிறோம் என்றால் ஒவ்வொரு ஆண்டும் அதை 5% அதிகரிக்க வேண்டும். இதுபோல ஒவ்வொரு ஆண்டும் நாம் சேமிக்கும் தொகையை அதிகரிக்க வேண்டும்.
இதுபோல அதிகரித்து வந்தால் 35 ஆண்டுகள் தேவைப்படாது. சீக்கிரமே 5 கோடி ரூபாயை அடையலாம். எவ்வளவு குறைந்த தொகையாக இருந்தாலும் பரவாயில்லை சேமிக்கத் தொடங்குகள். சீன தத்துவஞானி சொன்னது போல எவ்வளவு பெரிய பயணமாக இருந்தாலும் அதை ஒவ்வொரு அடியாகத் தான் நடக்க வேண்டும். அதை விட்டுவிட்டு முதல் அடி கூட வைக்க மாட்டேன் என்றால் என்ன செய்ய முடியும்.
ஒரே ரூல்ஸ்:
பிராசஸை ஆரம்பிக்கும் முன்பே அவுட்புட் குறித்து நாம் ஏன் யோசிக்க வேண்டும். இந்த காலகட்டங்களில் நமது திறமையும் வளரலாம். இதனால் வருமானமும் அதிகரிக்கும். முதலீடும் அதிகரிக்கும். ஆனால், எல்லாவற்றையும் தாண்டி முக்கியம் என்னவென்றால் எப்போதும் நமது வருமானத்தில் 30% சேமிப்பாக இருக்க வேண்டும். அதை மறக்கக்கூடாது" என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications