இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடைய வாய்ப்பு: லோக்சபாவில் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு
மத்திய அரசின் பொது பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், லோக்சபாவில் இன்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார். அதிலுள்ள முக்கிய அம்சங்கள்:
மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2014-15ம் நிதியாண்டில் 5.4 முதல் 5.9 சதவீதமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. பருவமழை பொய்த்துப்போனதாலும், பிற நாடுகளின் பொருளாதார தாக்கத்தினாலும், இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடையும் வாய்ப்பு உள்ளது. நிதி நிலைமையை சீர் செய்ய மானிய சீர்திருத்தங்கள் கொண்டுவர வேண்டியது அவசியம்.
இவ்வாண்டு இறுதிக்குள் பண வீக்கம் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. நிதி சீர்திருத்த நடவடிக்கைகள் மூலமாகவே, பண வீக்கத்தை குறைத்து விலைவாசியை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும்.
மானியங்களை நேரடியாக வங்கி கணக்கிற்கு அனுப்பும் நடைமுறைதான் சிறந்ததாக இருக்க முடியும். அல்லது மானியம் உரியவர்களுக்கு சென்று சேராது. 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான முதலீடுகளை அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் இந்தியா ஈர்க்க உள்ளது.
இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.7 சதவீதமாக உள்ளது. இதன் பண மதிப்பு 32.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். 2012-13ல் இது 4.7 சதவீதமாக இருந்தது. இவ்வாறு பொருளாதார ஆய்வறிக்கை சுட்டிக்காண்பிக்கிறது.