சில்லறை விலை பணவீக்கம் உயர்வு: ரகுராம் ராஜன் கவலை
டெல்லி: சில்லறை விலை பணவீக்கம் உயர்ந்துள்ளது. நவம்பர் மாதத்தில் பொருட்களுக்கான சில்லறை விலைகள் கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவு அதிகரித்திருந்தது. பணவீக்கம் கடுமையாக உயர்ந்திருப்பதற்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கவலை தெரிவித்துள்ளார்.
அரசு வெளியிட்ட புள்ளிவிவரப்படி நவம்பர் மாதத்துக்கான சில்லறை விலை குறியீ்ட்டு எண் 11.24 சதவிகிதமாக இருந்தது. காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை அதிகரிப்பே சில்லறை விலை குறியீட்டு எண் உயர முக்கிய காரணம் என அரசு தெரிவித்துள்ளது. தொழிற்சாலை உற்பத்தி புள்ளிவிவரமும் கவலை தருவதாக உள்ளது.

கடந்த அக்டோபர் மாதத்துக்கான தொழிற்சாலை குறியீட்டு எண் -1.8 சதவிகிதம் ஆக சரிந்துள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபரில் இது 8.4 சதவீதமாக இருந்தது.
விலைவாசி அதிகரிப்பும் தொழிற்சாலை உற்பத்தி சரிவும் மத்திய அரசுக்கு நெருக்கடிகளை அதிகப்படுத்தியுள்ளது. நுகர்வோர் விலை அடிப்படையிலான பணவீக்கம் கடுமையாக உயர்ந்திருப்பதற்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கவலை தெரிவித்துள்ளார்.
அக்டோபர் மாதத்தில் 10.09 சதவீதமாக இருந்த பணவீக்கம், நவம்பரில் 11.24 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது மிகவும் சங்கடமான நிலையை ஏற்படுத்துவதாக டெல்லியில் ராஜன் தெரிவித்தார்.
10 சதவீதமாக இருந்தபோதே, அதிகமாக கருதிய நிலையில், அது மேலும் ஒன்றே கால் சதவீதம் அதிகரித்திருப்பது சிக்கலை ஏற்படுத்துவதாகவும் ராஜன் தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை மீது வருகிற 18-ம் தேதி மறுஆய்வு நடக்கவுள்ள நிலையில், பணவீக்க உயர்வால் வங்கிக் கடன் வட்டியை ராஜன் மேலும் உயர்த்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications