தங்கம் இனி பாதுகாப்பான சொத்து இல்லை! தங்கத்திற்கு நல்ல காலம் எப்போதான் பிறக்கும்? இதுதான் கள நிலவரம்
உலகப் பொருளாதாரம் தொடர்ந்து பதற்றமான சூழலை எதிர்கொண்டு வரும் நிலையில், முதலீட்டாளர்கள் தங்களின் சொத்துக்களை பாதுகாக்கும் வழிகளைத் தேடுகின்றனர். காலம் காலமாக பாதுகாப்பான முதலீட்டு விருப்பமாகக் கருதப்பட்ட தங்கம், தற்போது எதிர்பாராத மாற்றங்களை சந்தித்து வருகிறது.
உலக அளவில் நிலவும் போர் பதற்றம் மற்றும் பொருளாதார ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், தங்கத்தின் விலை இயக்கம் முன்பைப் போல எதிர்பார்க்கப்படும் விதத்தில் இல்லை. இந்த மாற்றம் முதலீட்டாளர்களுக்கு புதிய தலைவலியை கொடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

கடந்த ஒரு ஆண்டில் தங்கம் சுமார் 60 சதவீதம் வருமானத்தை வழங்கியிருந்தாலும், இப்போது பெரும் நெருக்கடியில் உள்ளது. முன்பெல்லாம் உலகில் ஏதேனும் பதற்றம் ஏற்பட்டால் தங்கத்தின் விலை உயரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலை மாறியுள்ளது.
தங்கம் ஏற்கனவே பெரிய அளவில் உயர்ந்திருந்ததால், புதிய பதற்றங்கள் அதை மேலும் உயர்த்தவில்லை. மாறாக, சற்று பலவீனமான நிலையில் வைத்துள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு தங்கம் இனி முழுமையாக பாதுகாப்பான அசெட் அல்ல என்பதை உணர்த்துகிறது. பங்குகளை போல் தங்கமும் அதிகளவில் வர்த்தகம் செய்யப்படும் ரிஸ்க் உள்ள சொத்தாகவே பார்க்கப்படுகிறது.
டாலரின் வலிமையும் உயர் வட்டி விகிதமும்
அமெரிக்க டாலர் தற்போது வலுவான நிலையில் உள்ளது. அமெரிக்க அரசு தனது பத்திர முதலீடுகளுக்கு சுமார் 4.5 சதவீத வட்டி விகிதத்தை வழங்கி வருவதால், முதலீட்டாளர்கள் டாலரில் முதலீடு செய்வதை விரும்புகின்றனர். இது தங்கத்தை விட டாலரை பாதுகாப்பான விருப்பமாக மாற்றியுள்ளது. இதனால் டாலர் இன்டெக்ஸ் 90லிருந்து 98-99 அளவுக்கு உயர்ந்துள்ளது.
இந்த வலிமை தான் தங்கத்தின் விலையை குறைக்க வழிவகை செய்துள்ளது. ஏனெனில் தங்கம் டாலரில் விலை நிர்ணயிக்கப்படுவதால், டாலர் வலுவானால் தங்கம் வாங்குபவர்களுக்கு அதிக விலையாகத் இருக்கும், குறிப்பாக டாலரை காட்டிலும் குறைவான நாணய மதிப்பு கொண்ட நாடுகளுக்கு விலை அதிகமாக இருக்கும். இந்த சூழலில் தங்கம் மோசமாக இருப்பதற்கு டாலரின் வலிமை முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
ஸ்பெக்குலேட்டர்களின் வர்த்தகம்
உலக அளவில் பல ஸ்பெக்குலேட்டர்கள் தங்கத்தில் வர்த்தகம் செய்து வந்தனர். அவர்கள் மார்ஜின் அடிப்படையில் முதலீடு செய்ததால், பங்குச்சந்தையில் திருத்தம் ஏற்பட்டபோது அவர்களின் பொஷின் பாதிக்கப்பட்டன. இதனால் அவர்கள் தங்கத்தில் இருந்த லாபத்தை புக் செய்து, மார்ஜின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இது தங்கத்தின் விலையை குறைக்கும் நிலையை அதிகரித்துள்ளது. உண்மையான முதலீட்டாளர்கள் அல்லாமல், வர்த்தக நோக்கில் செயல்பட்டவர்களின் இந்த நடவடிக்கை தங்கத்தை தற்போது இக்கட்டான சூழ்நிலையில் வைத்துள்ளது. போர் பதற்றம் இருந்தாலும் இந்த வர்த்தக இயக்கங்கள் தங்கத்தின் இயல்பான உயர்வை தடுத்துள்ளன.
தங்க உயர்வுக்கு உண்மையான காரணம்
தங்கத்தின் கடந்த கால உயர்வுக்கு முக்கியக் காரணம் ஜியோபாலிட்டிக்கல் டென்ஷன் அல்ல. மாறாக, பல நாடுகள் தங்களின் அசெட்களை டாலரில் வைத்திருப்பதை குறைக்க முயன்றதே ஆகும்.
உலக நாடுகள் தங்களது சொத்துக்தளை டாலரில் வைத்திருப்பதாலும், டாலர் மதிப்பு உயர்வதாலும் அதிகப்படியான பாதிப்பு ஏற்படும் என்ற ஒற்றை காரணத்தாலும், இந்த முறையை விடுத்து டாலருக்கு மாறாக தங்கத்தை நம்பிக்கையான விருப்பமாகக் கருதி வாங்கத் தொடங்கின.
இதனால் உலகம் முழுவதிலும் மத்திய வங்கிகள் பலவும் தங்கத்தை வாங்கி சேமித்து வருகின்றன. இந்த டி-டாலரைசேஷன் இயக்கம் தான் தங்கத்தின் அதிகப்படியான உயர்வுக்கு அடிப்படை காரணமாக இருந்தது. தற்போது இந்த நடைமுறை தொடர்ந்தாலும், டாலரின் வலிமை காரணமாக தங்கத்தின் உயர்வு தடுக்கப்பட்டு மந்த நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
குறுகிய கால vs நீண்ட கால முதலீடு
குறுகிய காலத்தில் தங்கத்தின் இயக்கம் தடுமாற்றமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. போர் தொடரும் வரை டாலர் வலுவாக இருக்கும் என்பதால் தங்கம் விலை உயர்வின் போக்கு மந்தமாகவே இருக்கலாம்.
ஆனால் போர் ஒரு நாள் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையுடன் பார்த்தால், நிலைமை இயல்பாகும். அப்போது டாலர் பலவீனமடையும். அந்த சூழலில் மத்திய வங்கிகள் மீண்டும் தங்கம் வாங்கத் தொடங்கும். இதனால் நடுத்தர மற்றும் நீண்ட காலத்தில் தங்கம் இரட்டை இலக்க வருமானத்தை (டபுள் டிஜிட் ரிட்டர்ன்ஸ்) வழங்கும் வாய்ப்பு உள்ளது. முதலீட்டாளர்கள் இந்த நீண்ட காலப் பார்வையுடன் செயல்படுவது நல்லது.
2026ஆம் ஆண்டின் தற்போதைய சூழலில் தங்கம் புதிய சவால்களை எதிர்கொண்டாலும், அதன் அடிப்படை வலிமை மாறவில்லை. டாலரின் தற்காலிக வலிமை மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் தான் உடனடி அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.
போர் முடிவடைந்து உலக வர்த்தக சந்தையின் நிலைமை இயல்பாகும் போது தங்கம் மீண்டும் தனது பாரம்பரிய பாதுகாப்பு பங்கை வலுவாக வெளிப்படுத்தும் என்பது முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பு. இந்த மாற்றங்களை கண்காணித்து, நீண்ட கால முதலீட்டு உத்தியுடன் செயல்படுவது தான் புத்திசாலித்தனமான அணுகுமுறையாக அமையும்.















Click it and Unblock the Notifications