எங்கும் காளை மயம்... ஜல்லிக்கட்டை வைத்து கல்லா கட்டும் வணிக நிறுவனங்கள்...
ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு உள்ளதால், நகை விற்பனையாளர்கள் காளைகளின் உருவம் பொறித்த நகைகளை அதிக அளவில் உற்பத்தி செய்துள்ளனர்.
சென்னை: தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இந்த பிரச்சனையை கல்லூரி மாணவர்களும் இளைஞர்களும் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு போராடி தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை மீட்டெடுத்துள்ளனர். இதனை சாக்காக வைத்து தற்போது மிகப்பெரிய வணிக நிறுவனங்களும் வணிக வளாகங்களும் தங்களின் விற்பனை யுக்தியை கையாளத் தொடங்கி விட்டன.
எந்த ஒரு சமூகப் பிரச்சனை என்றாலும் அதற்கு உடனடியாக தீர்வு கிடைக்கிறதோ இல்லையோ, அதை வைத்து எப்படி நாம் பணம் சம்பாதிப்பது என்றுதான் பெரும்பாலான வியாபார நிறுவனங்கள் நினைக்கின்றன. இதற்கு சமீபத்திய உதாரணம், ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டை மையப்படுத்தி தங்களுடைய பொருட்களை விற்பனை செய்யும் முயற்சியில் பிரபல முன்னணி நிறுவனங்களும், வணிக வளாகங்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

காளை டி சர்ட்
போராட்டத்தின் போது காளை நிற உருவங்கள் பொறித்த டி சர்ட் அணிந்து கொண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழக்கமிட்டனர். திருப்பூரில் காளை உருவம் பிரிண்ட் அடித்த டி சர்ட்களுக்கு பல்லாயிரக்கணக்கில் ஆர்டர்கள் குவிந்து வருகிறது.

காளை நகைகள்
மக்களிடம் காளைகள் ஆதரவு பெற்றுள்ளதால், அவற்றின் உருவம் பொறித்த நகைகளை மக்கள் விரும்பி வாங்குவார்கள். இதுவரை குதிரை, யானை, மயில் போன்றவற்றி உருவங்கள் அதிகளவில் விற்றன. இனி காளைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும்.

ஜல்லிக்கட்டு காளைகள்
இதன் காரணமாக காளைகள் உருவம் பொறித்த 50 ஆயிரம் நகைகள் தயார் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு காளைகள் பொறித்த நகைகள், பிரேஸ்லெட், நெக்லஸ், டாலர்கள் உள்ள ஆபரணங்கள் தயாரிக்கப்படுவது இதுவே முதன் முறை என நகை தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காளை உருவங்கள்
தமிழகத்தில் உள்ள சிறிய நிறுவனங்களும், குழந்தைகள் மற்றும் இளைஞர்களை கவரும் வகையில், பொம்மைகள், விளையாட்டுப் பொருட்கள், டி-சர்ட் போன்றவற்றிலும், ஜல்லிக்கட்டு தொடர்பான உருவங்கள் மற்றும் வாசகங்கள் பொருந்திய பொருட்களை அச்சடித்து விற்பனை செய்யத் தொடங்கிவிட்டன.

பீட்டா
ஜல்லிக்கட்டை நடத்த விடாமல் தடை பெற்றதில், அமெரிக்காவின் விலங்குகள் நல அமைப்பு என்று கூறிக்கொள்ளும் ‘பீட்டா' அமைப்பு முக்கிய காரணம் என்பதால். பீட்டவை குறிவைத்து தாக்கும் வசனங்கள் பொருந்திய பொருட்களையும், ஜல்லிக்கட்டை ஆதரிக்கும் வாசகங்கள் அடங்கிய பொருட்களை விற்பனை செய்வதில் தீவிரம் காட்டத் தொடங்கி விட்டன.

அந்நிய பொருட்களுக்கு அனுமதியில்லை
அந்நிய நாட்டு குளிர்பானங்கள், மிட்டாய்கள் மற்றும் உணவுப் பொருட்களை விற்பனை செய்வதை முற்றிலும் தவிர்த்து விட்டு, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட குளிர்பானங்களான குளிர்பானங்கள் இளநீர், பதநீர், லஸ்ஸி, எலுமிச்சை ஜூஸ் போன்ற இந்திய பொருட்களை விற்பனை செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கேஎப்சி விற்பனை டல்
மிகப்பெரிய வணிக வளாகங்களில் உள்ள வெளிநாட்டு உணவகமான கேஎப்சி உணவகத்தின் விற்பனை படுத்துவிட்டன. அதற்கு மாறாக இந்திய உணவகங்களின் விற்பனை அமோகமாக உள்ளது. அதிலும் தமிழக பாரம்பரிய செட்டிநாட்டு உணவகங்களிள் கூட்டம் அலை மோதுகிறது.

ரூபாய் மதிப்பு உயர்வு
இதனைத் தொடர்ந்து, இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்கள், ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி, கபடிப்போட்டி, ஹாக்கிப்போட்டியைப் போன்று, ஜல்லிக்கட்டையும் வணிக ரீதியில் பிரபலப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளன. வெளிநாட்டு பொருட்களின் விற்பனை சரிந்து விட்டதால். அமெரிக்க டாலரின் மதிப்பு சரியத் தொடங்க உள்ளது. இதே நிலை நீடித்தால் நிச்சயமாக அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்து இந்திய ரூபாயின் மதிப்பு மளமளவென உயரத்தொடங்கும் என்பதில் சந்தேகம் இல்லை












Click it and Unblock the Notifications