மோடி நினைத்தது அப்படியே நடக்குதே.. தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை ரியாக்ஷன்.. மவுசு குறையும் Gold!
மத்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இந்த அதிரடி முடிவு உள்நாட்டு சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையை கணிசமாக உயர்த்தியுள்ளது. நேற்று - இன்று 2 நாளில் மட்டும் கிராமுக்கு 750 ரூபாய் அளவுக்கு தங்கம் விலை உயர்ந்துள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் தங்கம் விலை சர்வதேச சந்தையில் சரிந்துள்ளது.
மத்திய அரசு மத்திய கிழக்கு போர் நெருக்கடியால் ஏற்பட்டுள்ள அந்நிய செலாவணி வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, நகை வாங்கும் சாதாரண மக்களுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தும் என்று நுகர்வோர் அஞ்சுகின்றனர். இதன் விளைவு தங்கம் விற்பனை சரிவு.

வரி உயர்வின் உடனடி தாக்கம்
முன்பு தங்கம் இறக்குமதிக்கு 5 சதவீத அடிப்படை சுங்க வரியுடன் 1 சதவீத விவசாய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரி (AIDC) விதிக்கப்பட்டு வந்தது. இப்போது அடிப்படை சுங்க வரி 10 சதவீதமாகவும், AIDC 5 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மொத்த வரி 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்த வரி உயர்வு தங்கம், வெள்ளி, பிளாட்டினம் மற்றும் அதனை தொடர்புடைய அனைத்து பொருட்களுக்கும் பொருந்தும். இதன் விளைவாக, 10 கிராம் தங்கத்தின் விலையில் இருக்கும் வரி பங்கீடு சுமார் ரூ.13,500ல் இருந்து ரூ.27,000 வரை உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. வெள்ளி விலையும் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நகை வாங்கும் மக்களுக்கு பெரும் பாதிப்பு
தங்கம் இந்திய கலாச்சாரத்தில் ஆழமாகப் பின்னிப்பிணைந்துள்ளது. திருமணங்கள், விழாக்கள், சேமிப்பு ஆகியவற்றில் தங்கம் முக்கியப் பங்கு வகிக்கிறது, குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களில் தங்கம் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்தியா தனது தங்கத் தேவையின் பெரும்பகுதியை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்கிறது.
கடந்த ஆண்டு மட்டும் 710 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. வரி உயர்வால் தங்கத்தின் ரீடைல் விலை அதிகரிக்கும். இதனால் நகை வாங்கும் குடும்பங்கள் கூடுதல் செலவை சந்திக்க நேரிடும். வெள்ளி விலையும் உயர்வதால் வெள்ளி நகைகள் வாங்கும் மக்களுக்கும் சிரமம் ஏற்படும். இதனால் பெரும்பாலான மக்கள் தங்க நகை வாங்குவதை தள்ளிப்போடுவார்கள்.
தங்கம் தேவை 10 சதவீதம் குறையும்
இந்திய புல்லியன் ஜுவல்லர்ஸ் அசோசியேஷன் (IBJA) தேசிய செயலாளர் சுரேந்திர மேத்தா, "மோடி அரசின் இறக்குமதி வரி உயர்வால் இந்தியாவின் மொத்த தங்கத் தேவை 10 சதவீதம் வரை குறையக்கூடும்" என்று தெரிவித்தார். இது பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. இதனால் நகை விற்பனையை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது நடக்க வேண்டும் என்பது தான் மோடியின் முக்கிய இலக்காக இருந்தது. இதன் அடிப்படையில் விதிக்கப்பட்ட வரி உயர்வு தற்போது வேலை செய்ய துவங்கியுள்ளது என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக உள்ளது. 10 சதவீத தங்க இறக்குமதி குறையும் போது இதற்காக செலவிடப்படும் டாலர் இருப்பு சேமிப்பு தான். கூட்டி கழிச்சு பார்த்தால் மோடியின் அறிவிப்பால் அரசுக்கு லாபம் தான்.
இதேவேளையில் தங்கம் விலை அதிகரித்துள்ள காரணமாக மக்கள் தங்கள் கையில் இருக்கும் தங்க நகைகளை அடமானமாக வைத்து கடன் வாங்கும் போக்கு அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார். இருப்பினும், உலகளாவிய அளவில் தங்கத்தின் அடிப்படை காரணிகள் இன்னும் வலுவாக உள்ளது. போர் மற்றும் அமெரிக்க கொள்கை மாற்றம் நடந்தால் கட்டாயம் தங்கம் மீண்டும் முக்கிய முதலீடாக மாறும்.
அரசின் நோக்கம்
மத்திய அரசு இந்த வரி உயர்வை அந்நிய செலாவணி இருப்பை பாதுகாக்கவும், தேவையற்ற இறக்குமதிகளை குறைக்கவும் எடுத்துள்ளது. மேற்கு ஆசிய போர் பதற்றம் காரணமாக உலகளாவிய பொருளாதாரம் நிச்சயமற்ற நிலையில் உள்ளது.
இந்த சூழலில் தங்கம் போன்ற அத்தியாவசியமற்ற இறக்குமதிகளை கட்டுப்படுத்துவது அரசின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு உதவும் என்று அரசு தரப்பு நம்புகிறது. இருப்பினும், இந்த நடவடிக்கை உள்நாட்டு நகைத் தொழில் மற்றும் நுகர்வோரை இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளுகிறது என்பது தான் தற்போதைய முக்கிய பிரச்சனையாக உள்ளது.
இந்த வரி உயர்வு தமிழ்நாடு முழுவதும் உள்ள நகை வாங்கும் மக்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் தங்கம் வாங்கும் திட்டத்தை தள்ளி வைத்துள்ளனர்.















Click it and Unblock the Notifications