பொருளாதார மந்தநிலைக்கு ரகுராம் ராஜன்தான் காரணமாம் - சொல்கிறார் நிதி ஆயோக் துணைத் தலைவர்
நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவிற்கு ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான ரகுராம் ராஜனே காரணம் என்று நிதி ஆயோக் துணைத் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video

டெல்லி: பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்னர் உருவான மந்த நிலைக்குக் காரணம் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான ரகுராம்ராஜனின் பொருளாதார கொள்கைகள் தான் என்று நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமார் குற்றம் சாட்டியுள்ளார். அவரது கொள்கைகளால் நாட்டில் வாராக்கடன் அளவு அதிகரித்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பணமதிப்பு நீக்கத்தினை தொடர்ந்து 2016-17 ம் ஆண்டின் நான்காவது காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 6.1 சதவிகிதமாக இருந்தது. அதற்கடுத்து 2017-18 நிதியாண்டின் முதல் காலாண்டில் வளர்ச்சி 5.7 சதவிகிதமாக சரிந்தது.

இதற்கு மத்திய பாஜக அரசின் திட்டமிடப்படாத நிதிக்கொள்கைகளே காரணம் என்று எதிர்கட்சியான காங்கிரஸ் குற்றம் சாட்டியது. ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனும் விமர்சித்திருந்தார்.
ரகுராம் ராஜன் விமர்சனம்
ரகுராம் ராஜன் தற்போது நியூயாரக்கில் உள்ள சிக்காகோ பல்கலைக்கழகத்தில் நிதித்துறை பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்தப் பல்கலைக்கழகத்தில் நடந்த பொருளாதார வளர்ச்சிக்கான கொள்கைகள் குறித்த கருத்தரங்கில் ரகுராம் ராஜன் பங்கேற்றுப் பேசினார். பண மதிப்பிழப்பும், சரக்கு மற்றும் சேவை வரியும் மத்தியில் ஆளும் மோடி அரசால் முறையாக திட்டமிடப்படாமல் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று விமர்சித்திருந்தார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, பண மதிப்பிழப்பு நடவடிக்கையை சரியாக, முறையாகத் திட்டமிடவில்லை, நன்றாக ஆழ்ந்து சிந்திக்கவில்லை. இதை அமல்படுத்தும் முன் ஆழ்ந்து சிந்தனை செய்யுங்கள் என்று அரசிடம் தெரிவித்தேன், செய்யவில்லை.மிக மோசமாகத் திட்டமிட்டு, ஒரேநாள் இரவில், நாட்டில் மக்களிடம் 87.5 சதீவீதம் புழக்கத்தில் இருந்த ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவித்தது நல்லவிதமான செயல் அல்ல.
சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை என்பது மிக நல்ல நடவடிக்கையாகும். ஆனாலும், அதை சற்று ஆழ்ந்து சிந்தித்து இன்னும் நல்ல முறையில் நடைமுறைப்படுத்தி இருக்கலாம் என்று கூறியிருந்தார் ரகுராம் ராஜன்.
நிதி ஆயோக் துணைத் தலைவர் குற்றச்சாட்டு
இந்த நிலையில் நாட்டின் பொருளாதாரப் பின்னடைவிற்கும், பணமதிப்பழிப்புக்கு தொடர்பில்லை என்றும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான ரகுராம் ராஜனே பின்னடைவிற்கு காரணம் என்றும் நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜிவ் குமார், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாகப் பொருளாதார வளர்ச்சியில் மந்தநிலை ஏற்பட்டதற்கு ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான ரகுராம் ராஜனின் பொருளாதாரக் கொள்கைகளே காரணம் என்று குற்றம் சாட்டியுடளளார்.
வளர்ச்சி விகித புள்ளி விவரங்களை பார்த்தால், பண மதிப்பிழப்பால் வளர்ச்சி சரியவில்லை என்று புரியும். கடந்த 6 காலாண்டுகளாக வளர்ச்சி சரிந்து வருகிறது. அதன் தொடர்ச்சியே இந்த சரிவு. 2015-2016-ம் ஆண்டு தொடங்கி, 9.2% ஆக இருந்த வளர்ச்சி 6 காலாண்டுகளாக சரிந்து வந்ததற்கு பண மதிப்பிழப்பு காரணம் அல்ல. வங்கிகளில் அதிகரித்த வாராக் கடன்களே காரணம்.
வங்கிகளில் வாராக்கடன்
தற்போதைய அரசு பதவி ஏற்ற காலத்தில் ரூ.4 லட்சம் கோடியாக இருந்த வாராக்கடன், 2017-ம் ஆண்டின் ஜூன் மாத காலகட்டத்தில் ரூ.10.5 லட்சம் கோடியாக அதிகரித்தது. இதற்கு காரணம் ராஜனின் வாராக்கடன் கொள்கைகள்தான். வாராக்கடனை அடையாளம் காண்பதில் ரகுராம் ராஜன் கொண்டுவந்த மதிப்பீட்டு முறைதான் காரணம். தவிர வங்கிகளும் தொழில்துறைக்கு கடன் அளிப்பதை நிறுத்தின. இதன் விளைவாக பொருளாதார வளர்ச்சியில் தேக்கம் உருவானது. இதனால் பொருளாதாரம் சரிய தொடங்கியது. கிரெடிட் வளர்ச்சி 1 முதல் 2 சதவீதம் சரிந்தது. சில மாதங்கள் எதிர்மறையாகக்கூட இருந்தன. இதை ஈடுகட்டி சரி செய்ய மத்திய அரசு செலவினங்களை அதிகரித்தது.
பொருளாதாரப் பின்னடைவிற்கும், பணமதிப்பழிப்புக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக எந்தவொரு ஆதாரமும் இல்லை. இது ஒரு பொய் குற்றச்சாட்டு. ப.சிதம்பரம் மற்றும் நமது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் இதை உருவாக்கி விட்டனர் என்று குற்றம் சாட்டினார்.
வளர்ச்சியை சீராக்க, அரசு பொது முதலீட்டு செலவுகளை அதிகரித்துள்ளது. அதன் காரணமாகவே 2017-2018 ஆண்டுக்கான இரண்டாம் காலாண்டில் வளர்ச்சி கிடைத்துள்ளது என்றும் ராஜிவ் குமார் கூறியுள்ளார். ரிசர்வ் வங்கி ஆளுநராக பதவி வகித்த ரகுராம் ராஜன் தனது பதவியிலிருந்து 2016 செப்டம்பர் 4, அன்று வெளியேறினார். பிரதமர் நரேந்திர மோடி 2016 நவம்பர் 8, அன்று பணமதிப்பழிப்பு அறிவிப்பை வெளியிட்டார். இதன்பிறகு கடும் பண தட்டுப்பாடு ஏற்பட்டது. பின்னர் நிலையை சீரடைய பல மாதங்கள் ஆகின.












Click it and Unblock the Notifications