ரூ.44,35,20,25,00,00,000.. இந்த ஒரு கம்பெனியின் சந்தை மதிப்பு ஒட்டுமொத்த இந்திய ஜிடிபி-ஐ விட அதிகம்!
வாஷிங்டன்: அமெரிக்காவை சேர்ந்த பிரபல சிப் தயாரிக்கும் நிறுவனமான என்விடியா பங்குகள் மதிப்பு 5 டிரில்லியன் டாலரை தொட்டுள்ளது. இதன் மூலம் 5 டிரில்லியன் என்ற மார்க்கை தொட்ட முதல் நிறுவனம் என்ற சாதனையை என்விடியா படைத்துள்ளது. இது ஒட்டுமொத்த இந்தியாவின் ஜிடிபியை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவைச் சேர்ந்த சிப் தயாரிக்கும் நிறுவனமான என்விடியா (Nvidia) இப்போது எங்கோ உச்சத்திற்குப் போய்விட்டது. இப்போது அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 5 டிரில்லியன் டாலராக இருக்கிறது. உலகிலேயே வேறு எந்தவொரு நிறுவனத்தின் சந்தை மதிப்பும் இந்தளவுக்குப் போனதே இல்லை.. 5 டிரில்லியன் சந்தை மதிப்பை எட்டிய முதல் நிறுவனம் என்ற சாதனையையும் என்விடியா படைத்துள்ளது.

5 டிரில்லியன்
1990கள் முதலே இந்த நிறுவனம் இயங்கி வந்தாலும் சமீப காலமாகவே இதன் சந்தை மதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் தான் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 4 டிரில்லியன் டாலரை கடந்தது. இப்போது வெறும் மூன்று மாதங்களில் இது அடுத்த மைல்கல்லான 5 டிரில்லியன் டாலர் என்ற உச்சத்தை எட்டியுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.44,35,20,25,00,00,000 ஆகும்!
18 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் முதல் ஐபோனை அறிமுகப்படுத்தினார். அது தொழில்நுட்ப உலகில் மிக பெரிய ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. அதற்குப் பிறகு மிகப் பெரிய தொழில்நுட்பப் புரட்சியாகச் செயற்கை நுண்ணறிவு கருதப்படுகிறது. அப்படிப்பட்ட ஏஐ துறைக்கு என்விடியா சிப்கள் முக்கியமானதாக இருக்கிறது. அதன் சந்தை மதிப்பு இப்படித் தாறுமாறாக உயரவும் இதுவே பிரதானக் காரணமாகும்.
ஆப்பிளால் கூட செய்ய முடியல
ஐபோனின் வெற்றியின் மூலம் ஆப்பிள் நிறுவனம் தான் உலகிலேயே முதன்முறையாக 1 டிரில்லியன் டாலரை எட்டியது.. ஒரு டிரில்லியன் மட்டுமில்லை.. 2 டிரில்லியன் மற்றும் 3 டிரில்லியன் டாலர் மதிப்பைக் கடந்த முதல் நிறுவனமாக ஆப்பிள் இருந்தது.. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் நிலைமை மொத்தமாக மாறியது. AI வளர்ச்சியால் ஏஐ மற்றும் செமிகண்டெக்டர் நிறுவனங்களின் பங்குகள் உயர ஆரம்பித்தன.
தாறுமாறாக உயர்ந்தது
ஏஐ துறை வளர ஆரம்பித்த பிறகு என்விடியா சிப்களுக்கான தேவை அதிகரித்ததே இதன் பங்குகள் விலை அதிகரிக்கப் பிரதானக் காரணமாக இருக்கிறது.. இதனால் 2023ல் இருந்தே இந்த என்விடியா பங்குகள் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. 2024 நவம்பர் மாதம் ஒரு பங்கின் விலை வெறும் 40 டாலராக இருந்துள்ளது. ஆனால், இப்போது இரண்டே ஆண்டுகளில் ஒரு பங்கின் விலை 207 டாலர் வரை போய்விட்டது.
இந்தியாவை விட அதிகம்
மொத்தம் 24.3 பில்லியன் என்விடியா பங்குகள் உள்ள நிலையில், அதன் சந்தை மதிப்பு 5.05 டிரில்லியன் டாலராக உயர்ந்தது. இது ஒட்டுமொத்த இந்தியாவின் ஜிடிபியை விட அதிகமாகும். சர்வதேச நாணய நிதியின் மதிப்பீடுகளின்படி இந்தியாவின் மொத்த ஜிடிபி 4.2 டிரில்லியன் டாலராகும். ஆனால், அதை விட இந்த ஒரு கம்பெனியின் சந்தை மதிப்பு அதிகமாக இருக்கிறது. இந்தியா மட்டுமின்றி, ஜப்பான் மற்றும் பிரிட்டன் நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட இது அதிகமாகும்.
அதேநேரம் ஏஐ துறை இப்படித் தாறுமாறாக உயர்ந்து வருவது ஒரு Bubbleஐ உருவாக்கலாம் என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். அதாவது இந்த விலையேற்றம் நிலையானதாக இல்லாமல் போகலாம் என்றும் அது சரிவைச் சந்திக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் எச்சரித்துள்ளனர்..












Click it and Unblock the Notifications